Monday 23 December 2019

மதுக்கடையில் என் நிழல்





மதுக்கடையில்  தனியாய் குடிப்பது சௌகரியம்.  கூடி நின்று குடிப்பதில், நண்பனின்,  உறவுக்காரனின்,  அடுத்தவனின் சோகக்கதையயை கேட்பதில் ஆர்வம் இல்லை.  தனியாய் நின்று யாரோ ஒருவரிடம் பேசி குடித்துணை ஆக்கி கொள்வேன். என் சார்பில்லா,  நான் அறியா கதைகளை கேட்பதில் என்னை விட்டு விலகி இருப்பதில் அழுத்தும் விசைகளான என் குடும்ப சூழலில் இருந்து விடுபடும் ஒரு தன்மகிழ்ச்சி.

நான் வசிக்கும் தி. நகரை சுற்றி உள்ள எல்லா மதுக்கடைக்கும் ஏகதேசம் சென்றிருப்பேன். கடைத்தெருக்கள் அமைந்துள்ள பகுதி ஆதலால் பெரும்பாலும் நின்றபடி குடிக்க தான் ஏற்பாடு,  என்றும் என் முதல் தெரிவு பாண்டி பஜார் மதுக்கடை, நேரம் குறைவாய் அதாவது கடை அடைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எனில் உஸ்மான் ரோடு  ஜி. ஆர். டி எதிரே இருக்கும் கடை.  இங்கே மதுக்கடைகளுக்கா பஞ்சம். 

பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்,  பஜார் ஜவுளிக்கடை,  பாத்திரக்கடை,  மின்சாதன கடைகளில் வேலை பார்க்கும் அடிநிலை ஊழியன் தான் மதுக்கடைகளை ஆக்கிரமத்து கொள்கிறான்.  ஓரமாய் நின்றபடி இவர்களை கவனிப்பேன், ஒரே நிம்மதி இவர்களிடம் பாசிசம் குறைவு. அசாமும், தூத்துகுடியும் கால்குப்பியை சமரசமாக பிரித்துக்கொள்வார்கள்.  ஒருமுறை எங்கோ கேட்ட நியாபகம்,  சரியாய்  நினைவில் இல்லை.

"ஏலேய், மாப்புள.  என் தங்கச்சிய நீயோ கட்டிக்கோ.  சொக்காரன் மயிர புடுங்கதான் வருவான்.  கலரு கம்மி டே.  நீ மட்டும் சரின்னு சொல்லுலே.  தாயோளி சிக்கன் வேகவே இல்ல" என நீண்டு கொண்டே போனது.  விழுந்தது வகை என திரும்பி விட்டேன்.

சென்னையின் வெயிலுக்கு ரம் எதற்கு என பல மூத்த குடிகாரர்கள் அறிவுரை கூறியதுண்டு. என்னவோ ஊர் பழக்கம் தொடர்கிறது. ஓல்ட் காஸ்க் கால் குப்பி, கருப்பு திராட்சை கொஞ்சம்,  தேவைக்கு தண்ணீர், கோல்ட் பில்டர் நான்கு இதுதான் என் பதிவு. மூன்று ரவுண்டு முடித்து பாண்டி பஜார் கடை வெளியே ஒரு சிகரெட் பற்றவைத்து முழுதாய் புகைத்ததும்  வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வு கிடைத்தது போல ஆசுவாசபடுத்தி கொள்வேன்.

வேகமாக நடந்து, இல்லை ஓடி கொண்டிருந்தேன். இன்று சனிக்கிழமை. வாரக்கூலிகள் கடையை அடைத்து கொள்ளும் நேரம், போகும் வழியில் எதிரே பெரிய ஊர்வலம்,  சாலையில் வண்டிகள் மிக மிக மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. சிறிய வண்டி நிறைத்து மாலை அலங்காரம், பட்டாசு சத்தம் வேறு. செத்தவனை அவ்வழியே பேருந்தில், இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் திட்டியபடியே சென்றிருக்க கூடும். மனிதர்கள் செத்தவனுக்கும் சேர்த்து,  பாவம் சம்பாதிக்கிறார்கள். ரோடு எங்கும் வீசியபடி செல்லும் கோழிகொண்டைபூவை எப்படி காலையில் தூத்து தள்ளுவார்களோ!.

கடையின் முன்பு பெரும் கூட்டம், தள்ளு முள்ளு. முண்டியடித்து முன் சென்றேன், ஒல்லியான உடல்வாகு எளிதில் முன்னகர வைத்தது. கால்குப்பி வாங்கி வெளியே வந்தேன். எதிரே ஒருவர் நின்றிருந்தார். கழுத்து மறையும் அளவு வெண்நிற தாடி,  ஐந்தறை அடி இருப்பார். காதை தாண்டிய சுருள் முடி, பரதேசி போல் இருந்தாலும் அவர் கண்கள்  குளிர் நிறைந்தது போல தன்மையாய் இருந்தது.  வெளிர் நிற சட்டை மங்கி கசங்கள் இன்றி இருந்தது. கடும்காப்பி நிற முழுக்கால் சட்டை அணிந்திருந்தார்.தோளில் ஒரு ஜோல்னா பை.

மதுக்கடை கூட்டத்தில் இருந்து ஒரு ஆட்டோக்காரர் வெளிவந்து கையில் இருந்த குப்பியை அவரிடம் நீட்டினார், அது ராயல் சேலஞ்ச் கால் குப்பி.  ஆட்டோக்காரர் விடைபெற,  அவர் பாரின் உள்ளே சென்றார். நானும் பின் தொடர்ந்தேன்,  அவர் இருப்பதிலியே ஓரமாய் இருந்த மேஜையில் அமர்ந்தார், அதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே இருந்தது.  அவர் ஏற்கனவே ஒன்றில் அமர்ந்திருக்க, நான் இன்னொன்றில் அமர்ந்து கொண்டேன். 

முதல் கோப்பை நிறைத்து மது ஊற்றி இருவரும் அருந்தும் வரை இல்லா பரஸ்பரம்,  அடுத்த குவளைக்கு இருவரும் கண்டு சிரித்துக்கொள்ளும் குணாதிசயம் மதுக்கடைகளில் சாத்தியம்.  அவர் என்னை பார்த்து சிரித்தார்.  நான் உடனே பேச ஆரம்பித்தேன், 

"சைடு டிஷ் லாம் இங்க நல்லா இல்லே"  முகத்தை சுளித்தபடி சொன்னேன். 

தன் பையில் இருந்த கடலை மிட்டாயை நீட்டினார். அவர் தொடர்ந்தார். 

"தம்பிக்கு எந்த பக்கம்"

"மாம்பலம் ஏரிக்கரை தெரு"

"இருந்த ஏரிய காணும், தெருக்கு மட்டும் பேரு ஏரிக்கரை தெரு.  சொந்த ஊரு எது"

"நாகர்கோயில்"

"யேய், நானும் அங்கதான்."

"ஊருல ரசவடை, கிழங்கு, மாங்கா கிடைக்கும்.இங்க ஒன்னும் இல்ல"

"அப்டிலாம் இல்ல, அந்தந்த ஊருல என்ன இருக்குமோ, அதானே கிடைக்கும்,  வயக்காட்டில போய்ட்டு செம்மண்ணு தேட முடியுமோ, அங்க களிமண்ணு தானப்போ இருக்கும் . களிமண்ணுல தான் நெல்லு  விளையும்,  நீ படிச்ச படிப்புக்குத்தானே இங்க பொழைக்க வந்திருக்க,  கிடைக்கிறதுல வாழ பழகிக்கணும்"

"அது சரிதான்" என்றேன். ஊற்றிய கோப்பையில் இருந்த மதுவை இருவரும் சிறிது அருந்தினோம்.

"இப்போல்லாம் பாத்துக்கிடுங்க, மனுஷனுக்கு ஆசை கூடிட்டே இருக்கு" என்றார்.

நான் "அப்படியா" என்றேன். 

"நேத்திக்கு வர நூத்தியஞ்சு ரூபா குவாட்டர் , இன்னைக்கு நூத்தி தொன்னூறு" என்றார். அவரே அவரை நக்கல் செய்கிறார் என்று விளங்கியது. 

அவரின் தோரணையும் பேச்சும் என்னை போன்ற தினசரி வாழ்வின் அடையாளம் அவர் அல்ல என்பது மட்டுமே தீர்க்கமாய் மனதில் பதிந்தது. வார்த்தைகளை கவனமாய் கையாள வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். 

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மேல தகரம் பெயர்ந்து பின்னே பெரிய வேப்பமரம் ஒன்று தெரிந்தது. அதன் மேல் காகங்கள் சில கால் மடக்கி அதன் கூட்டினுள் இருந்தது. இவரின் பார்வை காகங்களை நோக்கியே இருந்தது. அடிக்கடி கனத்த வெண்கம்பியாய் தாடை எங்கும் பரவி இருந்த தாடியை தடவியபடியே இருந்தார். அவ்வப்போது அவரின் முகம் என்னையும் நோக்கியது.

மதுக்கடையின் சில மீட்டர் தள்ளி சுடுகாடு. நான் இங்கே வரும் போது சென்ற சவ ஊர்வலத்தின் கடைசி நடை அங்கேயே. தப்புமேளத்தின் ஒலி மெலிதாய் காதில் விழுந்து கொண்டிருந்தது.

"மனுஷனுக்கு எல்லாமே அடங்குறது சாவுலதான், தன்னை முழுசா ஒப்படைக்கும் ஒன்னு சாவு தான், பொண்டாட்டி, கூட்டுகாரன், மக்கமாரு, அப்பனும் அம்மையும் யாருட்டயும் நிஜம் கிடையாது.  ஒவ்வொருத்தருக்கும் ஒரு முகமூடி" என்றார்.

"செத்தா என்ன தெரியும், முன்னாடி அழுறது யாருன்னு கூட தெரியாது" என்றேன் நான்.

"அது சரிதான், ஆனா தெரிஞ்சும் ஆடுறோம். முடிவுன்னு ஒன்னு இருக்கு,  பெரிய மயிரா இருந்தாலும் இல்ல" என்றார்.

"மயிரு வாழ்க்கை" என்றேன் நான் சிரித்தபடி.

இருவருக்கும் கால் குப்பியின் முக்கால் பங்கு தீர்ந்து விட்டது.

"எதையோ நோக்கி ஓடிட்டு இருப்போம், கடந்து போறது எதுவும் கண்ணுக்கு தெரியாது. அடுத்தவன் முன்னாடி நா நல்ல நிலைமைல நிக்கணும்.  அடுத்தவனுக்கான வாழக்கையை நாம வாழ்ந்துட்டு இருக்கோம். இங்க நமக்கானது எது மிச்சம்" என்றார்.

"வானத்தில நட்சத்திரம் பாத்திருப்பீங்க,  சின்னதுல புத்தி இல்லாம அதுல தூரமா தெரியது தாத்தா, கிழக்கால இருக்கது ஆச்சி அப்படினு  சொல்லுவோம். அந்த அறியாமைல கூட ஒரு சந்தோசம் இருந்துச்சு" என தொடர்ந்தார்.

அவர் பேச ஆரம்பிக்கும் போது இடையிடையே எனக்கும் எல்லாம் தெரியும் என முனைவது போல உள்ளே செருகினேன். ஆனால் இப்போது அமைதியாய் இருந்தேன், அவர் பேசிக்கொண்டே இருந்தார்.

"நேத்து ஒரு நாய்க்குட்டி ரோட்டுல நிக்குது,  அதை தூக்க நா கிராஸ் பண்ணி போகணும். அத தாண்டி நூறு பேரு போறான்,  அந்த குட்டியை ஏசதுக்கு வண்டி நிக்குது, எவனும் இறங்கி தூக்கி அத ஓரமா கொண்டு விட மாட்டுக்கான். இதுல அந்த குட்டி பாவமா, இல்ல இவ்ளோ சுயமா எதை பத்தியும் கவலைப்படாத இவனுகள பாத்து கவலைப்படவா? "

ஆம், அவர் சொல்வது உண்மைதான். கடந்து போகும் போது காணும் காட்சியில் எதிலுமே உண்மையாய் உளம் நின்றதில்லை.நாய் குட்டியை நானும் கடந்து போயிருப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே, கடுமையாய் இரும ஆரம்பித்தார். அவரால் இயல்பாக மூச்சு விட இயலவில்லை. இரண்டு நிமிடம் அவராய் தன்னை ஆசுவாசப்படுத்தி இயல்புநிலை திரும்பினார். என் பின்னே அவர் வயதொத்த இன்னொருவர் நின்றிருந்தார். 

"என்ன ராஜம் இருமல் அதிகம் ஆயிட்டு போல, குடிய குறைக்கலாம்" என்றார். இருவரும் ஏற்கனவே பரிச்சியம் ஆனவர்கள் என ஊகித்து கொண்டேன்.

"என்ன செய்ய,  நானும் நினைக்கேன். முடிய மாட்டேன்குது. ராத்திரி தூக்கம் இல்ல" என்றார்.

"ஏற்கனவே எமனை பாத்துட்டு வந்துட்ட. உன்கிட்ட சொல்லி திருத்த முடியாது. சரி நா வரேன்" என்றபடி வந்தவர் கிளம்பினார்.

நான் அவரை இரக்கமாய் கவனிப்பது அவர்க்கு அசௌகரியமாக இருக்கிறது போலும், என்னை நேராய் பார்ப்பதை தவிர்த்தார். 

"குடிய ஜெயிக்க முடியல. பலவாட்டி பாத்துட்டேன். தோத்துட்டு தான் இருக்கேன். " என்றார் தலையை நிமிர்த்தவில்லை. 

"நீங்க என்ன பண்றீங்க" என்றேன், நெடுநேரம் கழித்து நான் பேசினேன். ஆகவே குரலில் ஒரு கரகரப்பு இருந்தது.

"நமக்குன்னு ஒன்னு நிலையா கிடையாது. புத்தகம் வாசிப்பேன்,  எழுதுவேன், அதுதான் எல்லாம்"  

எனக்கு கொஞ்சம் உரைத்தது. இவரின் எண்ணமையம் சராசரி மனிதனின் ஓட்டத்தில் இருந்து சற்று விலகியே இருந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம். பின் அவர் எழுந்து விடை பெற்று சென்றார். அவரின் பெயர் என்னுள் பதிந்தது 'ராஜம்'.

கடையில் இருந்து வெளியே வந்து வழக்கமான சிகெரட் பற்றவைத்தேன்,  மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி இருந்தது "குடிய ஜெயிக்க முடியல, தோத்துட்டு தான் இருக்கேன்" என்று அவர் கூறியது தான். 

அன்றைய இரவு என்றையும் போல சாதாரணமாய் இல்லை, மதுகுப்பியில் ஊறி மலந்து கிடக்கும் ஈச்சை போல, ஒவ்வொருமுறையும் எம்பி குதித்தேன், வெளிவரும் போதெல்லாம் இன்னொரு குப்பியில் அமிழ்ந்தேன். உடல் எங்கும் மதுவாடை பரவி இருந்தது. எழ எழ தாகம் அதிகரித்து கொண்டேயிருந்தது. உறங்கியது நினைவில் இல்லை. காலை எழுந்ததும் இனி குடிப்பதில்லை என முடிவு செய்தேன்.

ஆனால் அன்றைய இரவே, மதுக்கடை வாசலில் நின்றேன். அவரும் நின்றார். அவர் அருகே செல்ல தயக்கமாய் இருந்தது, அவருக்கும் அதுவே தோன்றிருக்க வேண்டும், தூரமாய் நின்று கொண்டார்.

பின் கொஞ்சம் கொஞ்சமாய் நாட்களை வாரம் ஆக்கினேன். நான் செல்லும் நாளெல்லாம் அவரை கண்டேன், சிலநாள் தள்ளாடியபடி வாகன நெருக்கம் நிறைந்த சாலையில் நடந்துகொண்டிருப்பார். வாரத்தை, மாதம் இருமுறை ஆக்கினேன். என்னுள் மாற்றம் தெரிவதாய் உடன் பணிபுரிவோர் கூறினார்கள். 

சில மாதங்கள் சென்றிருக்கும், மழைக்காலத்தில் அதுவும் மாலை நேரம் என்றால் மிளகாய் பஜ்ஜி என்னுடைய விருப்பம், வழக்கமான டீ கடைக்கு சென்றேன்.வெளியே மாலை நேர செய்தித்தாள் இருந்தது . உள்ளே பெட்டிச்செய்தியை கவனித்தேன் "சாலை விபத்தில் எழுத்தாளர் மரணம்".  

என்னவோ என் இயல்பில் மாற்றம், பதட்டமாய் இருந்தது, கூடவே வேர்க்கவும் செய்தது.செய்தித்தாள் புரட்ட மனமில்லை, உண்மையில் தைரியம் இல்லை. ஏன் அந்த பெயர் 'ராஜம்' என இருக்க கூடாது என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.   மீண்டும் காதில் அவர்  குரல் கேட்டது  "குடிய ஜெயிக்க முடியல, தோத்துட்டு தான் இருக்கேன்".  இதனை அவர் என்னிடம் கூறியபோது,  எனக்கு அது நானாகவோ தோன்றியது. நான் அவரின் இளைய நிழலாய் அசைந்தபடி அன்று எதிரே இருந்தேன். மீண்டும் என்னுடைய குரலும் அவரோடு இணைந்தபடி காதில் ஒலித்தது "ஆம், நாம் தோற்று கொண்டிருக்கிறோம், மது நம்மை ஜெயித்து கொண்டிருக்கிறது"..

Monday 16 December 2019

ராஜு தாத்தா 3 : சுடலை





வெயில் குறைந்து நாஞ்சில் காற்று மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.  வானம் மங்கி மென் ஒளி பரவி இருந்தது.  கொக்கும், நாரையும் வான் நிறைத்து கூடு நோக்கி பறந்து கொண்டிருந்தது.  பொதுவாய் வெக்கையில் இருக்கும் மனநிலை அந்தியின் குளிர்ச்சியில் தணிந்து விடும். சுடலை வீட்டில் இருந்து இறங்கி கடைத்தெரு சந்திக்கு வந்தான். தூரத்து சரஸ்வதி திரையரங்கில்  'சிங்கார வேலனே தேவா' பாடல் ஒலித்து கொண்டிருந்தது. முகூர்த்த நாள் போலும் தலை நிறைத்து மல்லிகையும் கனகாம்பரமும் சூடி பெண்கள் கூட்டம் நடந்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் போய் கொண்டிருந்தார்கள். 

ஐப்பசி மழையில் கரை தழுவி ஓடும் பழையாற்றின் வெள்ளம் போல அவன் எண்ணமெங்கும் நிறைத்து, நீரின் சுழியுள் இழுப்பவளாய் சிவகாமி அவன் வாழ்வை நிறைத்திருந்தாள். அதன் தாக்கம் என்னவோ,  இறுமாப்பில்  இறங்கி மாமன் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். மாமனிடம் என்ன வேண்டி கிடக்கிறது. ஆனால் அன்று எவனோ புதிய பாலம் மேல் கல் எறிந்ததற்கு, மின் விளக்குகளை உடைத்ததற்கு,  அவரின் கோபம் ஏன் என் பக்கம் திரும்பியது. திராவிடம் பேசும் கட்சிகள் அல்லவோ செய்தது.

தேவையில்லாத ஊர் பொதுக்கூட்டம், மாமனுக்கு மருமகனுக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது. இறங்கி போய்த்தான் இருக்கலாம், ஆனால் ஊரார் முன்னிலையில் மாமன் திட்டி விட்டாரே. யோசித்து கொண்டே நடக்கும் போது வீடு வந்து விட்டது. வீட்டில் நுழைந்தாலே முன்அரங்கில் பெரிய காந்தி படம் மாட்டப்பட்டு இருந்தது. அது பெரிய வீடு, முன்னே அரங்கு, தொடர்ந்து மங்களா, பின் சாமான்கள் ஒதுக்கும் சிறிய அறை, அதன் இடையே சிறிய பூஜையறை,  கடைசியில் அடுக்காளை,  அதை தொடர்ந்து சிறிய வெந்நீர்பறை. பனைந்தடி கிடத்தி  அதன் மேல் எழுப்பப்பட்ட மேல் தட்டு. 

வீட்டில் நுழையும் போதே வாசற்படியில் மாமாவின் செருப்பு கிடக்கிறதா என்று கவனித்தான். இரு கால் செருப்பும் ஒரே சீராய் கழட்டி போடப்பட்டு இருந்தது. உள் நுழையும் போதே மாமா இருமும் ஒலி கேட்டது.

"அத்தே" என்று அத்தையை அழைத்தான்.

மாமா தட்டுப்படியில் இறங்கும் ஓசை கேட்டது. கீழிறங்கி அவனை பார்த்து.

"உள்ள வாடே, சட்டம்பி" என்றார். வழக்கமாய் இல்லாமல் ஒரு வித தயக்கத்துடன் உள்நுழைந்தான். மாமா அங்கிருந்த மரநாற்காலியில் அமர, அவன் நின்று கொண்டே இருந்தான்.

"என்னடே, ஒவ்வொண்ணா சொல்லனுமா. இருடே"

அத்தையும் சிவகாமியும் அடுக்காளையில் இருந்து முன்அரங்கிற்கு வந்தனர். மாமா சாய்ந்து உட்கார்ந்து மேலே பார்த்தபடி, கைகளை பிசைந்து கொண்டிருந்தார். சுடலை  நாற்காலியின் ஓரமாய் உட்கார்ந்து நகம் கடித்து கொண்டிருந்தான். 

அத்தை ஆரம்பித்தாள்,  "ஏங்க, அவன்தான் வீட்டுக்கு வந்துட்டான்.எதுக்கு இரண்டு பேரும் துஷ்டி வீட்ல இருக்க மாறி வாய பொத்திட்டு இருக்கீங்க"

"அவன்ட என்ன பேச, முன்னாடி நாம ஒன்னு சொன்னா, காது கொடுத்து கேப்பான். இப்போ பெரிய ஆளாயிட்டான். பொசுக்குன்னு சூடாயிருகான்."

"இல்ல மாமா, அன்னைக்கு புத்தி  இல்லாம கத்திட்டேன்."

"புத்தி இல்லமா தான் அப்டி பேசினீரோ, பெரிய மனுஷா. நீ கண்டையாட்டி அன்னைக்கு! சங்கடமா போச்சு. அடுத்தவன் முன்னாடி பேசுனது பெரிசில்ல மக்ளே. நா பேசுனது உனக்கு புரியலைன்னே தான் வருத்தம்."

"இல்ல மாமா, உங்களுக்கே தெரியும். லைட் உடைச்சது. சினிமா பார்ட்டினு. அப்புறம் எதுக்கு ஊர் முன்னாடி என்ன ஏசி,  பாலத்துக்கு கிட்ட போக்கூடாதுனு சொன்னீங்க"

"நீ அங்க போன என்னடே பண்ணிருப்ப? "

"உடைச்சவன் கை எழும்ப முறிச்சிருப்பேன்!"

"கேட்டையாடி முறிச்சிருப்பார்லா?  எனக்கு தெரியும் இவன பத்தி,  அன்னைக்கு ஏசுனது, உரைச்சுதான். பாலத்துக்கு முன்னாடியே நின்னான். இரண்டு நாளும். அதுக்குதான்,  இவனுக்கு எதுக்கு இதுலாம். வேல ஒன்னு பாத்து வச்சிருக்கேன். நீ ஒழுங்கா அங்க போனா போதும்."

"மாமா,  நீங்க சொன்னா சரி"

"சரி டே,  இன்னும் இரண்டு மூணு நாளுல, தியேட்டர் ஓனர் வருவாரு. நா பேசிட்டு சொல்லுகேன், அதுக்கு அப்புறம் இருந்து நீ போ சரியா"

அவன் சரி என்று தலை அசைக்க, மாமா தட்டுபடி ஏறி மாடிக்கு சென்றார். 

"மக்கா,  சால வாங்கிற்கேன்.இருந்து சாப்டுட்டு போ. அட சண்டாளி, வந்து எவ்ளோ நேரம் ஆச்சு, மருமகனுக்கு டீ போட்டேனா பாத்தியா! இப்போ கொண்டாறேன்" என்றபடி அத்தை அடுக்காளைக்கு செல்ல, சிவகாமி மாத்திரம் நின்றிருந்தாள்.

"எப்பா, உங்க இரண்டு பேருக்கும் இடைல எப்பிடி தான் மாறடிக்க போறேனோ!" என்றபடி தலையில் அடித்து விளையாட்டாய் சிரித்தாள்.

"சரி உண்டியல்ல எவ்ளோ வச்ருக்க" என்றான் சுடலை.

"உனக்கு எதுக்கு"

"அத வச்சுத்தான், தாலிச்சரடு செய்யணும்" என்றான்.

'போங்க அத்தான். சரி இந்தவாட்டி சுசீந்திரம் தேரோட்டத்துக்கு போயிட்டு கன்யாரி போகணும். கூட்டிட்டு போவியா"

"அதுக்கு இன்னும் இரண்டு மாசம் இருக்குடி.  மாமா கல்யாணதுக்கு நாள் பாக்குது,  அம்மை சொல்லிச்சு. உன்ன கட்டிட்டு கூட்டிட்டு போறேனான்னு தெரிலியே"

அத்தை வேகமாய் வந்தாள், டீ குவளையை அவனிடம் நீட்டி "குடி மக்கா,  பேசிட்டு இருந்த நியாபகத்துல மறந்துட்டேன். இரு சாப்பிட்டுட்டு போ"

"இல்ல அத்தே,  வேண்டாம். அம்மை எனக்காகத்தான் பொங்கிட்டு இருக்கா. " என்றபடி டீயை வேகமாய் குடித்து வெளியே வந்தான். வாசலில் சிவகாமி சிரித்த படி நின்று கொண்டிருந்தாள்.

நேரம் இருட்டி இருந்தது,  ஒழுகினசேரி சந்திப்பு வரவும். எதிரே மாரி நின்று கொண்டிருந்தான். சந்திப்பில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் பாழ் அடைந்து கிடக்கும் எங்கோடி கண்ட சாஸ்தா கோவில் உண்டு. சில வருடம் ஆயிருக்கும் பூஜை கழிந்து,  பூட்டியே கிடக்கிறது. தினமும் ராத்திரி மாம்பட்டை குடிக்கும் கும்பல் உள்ளே இறங்குவது உண்டு.

மாரியிடம் "இன்னைக்கி உள்ள எவனோ இறங்கிற்கானா? " கேட்டான் சுடலை.

"சலம்பல் கேக்குவோய், ஆளு உள்ள உண்டு"

சுடலையும், மாரியும் மெதுவாய் சாஸ்தா கோவில் பக்கம் சென்றனர். கோவில் மேட்டில் எழுப்பி கட்டப்பட்டு இருந்தது. சுடலை மெதுவாய் மேலே உன்னி ஏறி, மாரியையும் ஏற்றி விட்டான். அரச மரம் பின்னால் சத்தம் கேட்கவே,  கீழ்க்கிடந்த கல்லை தூக்கி அங்கு எறிந்து, "எந்த தொட்டிப்பய பின்னாடி கிடக்கான். அப்பனைக்க இடம்ல இது. இங்க வந்து குடிக்க,  வெளிய போல நாய" கத்தினான் சுடலை.

பின்னால் ஆட்கள் ஓடும் சத்தம் கேட்டது. சுடலைக்கு தினசரி வேலையாகி விட்டது. சிறுவயதில்  பல முறை இந்த கோவிலுக்கு வந்திருப்பான். கார்த்திகை மாதம் கட்டு கட்டி எத்தனை முறை சபரி மலை சென்றிருப்பான். கோவிலை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் ஊராரை ஒன்றாக்க வேண்டும். அவன் அவனுக்கு வசதி பெருகவே ஊரும் இரண்டாய் விட்டது. 

ஆறுமுகம், சுப்பிரமணி இரண்டு ஊர் பெரியமனுஷனின் உள்பகை பாவம் சாஸ்தாவை தண்டித்து விட்டது. யோகமூர்த்தியின் கோயிலில் தினம் தினம் மாம்பட்டை கச்சேரி.  இக்கோயிலை சீரமைக்க வேண்டும். சுடலை கோயிலின் கீழ் திண்டிறங்கி,  மீண்டும் சந்திப்புக்கு வந்தான். மாரியிடம் விடை பெற்று வீட்டுக்கு சென்றான்.

உள்ளே, அம்மா அடுக்காளையில் சமைக்கும் ஒலி கேட்டது. வெந்தய புளிக்கறி போல,  வெந்தயம் பொடி உள்ளியோடு சேர்ந்து வதக்கும் மணம் வந்தது.  

"யம்மா" என்று அம்மையை அழைத்தான். 

"லேய் வந்திட்டியா,  கொஞ்சம் இரு மக்கா. சோறு பொங்கிட்டேன். புளிக்கறி கொதிக்கவும். முட்டை அடை போட்டு தாரேன்."

"சரி, மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்"

"சந்தோசம் மக்ளே, அவன் சொல்ல கேளு. உங்க அய்யா போனதுக்கு அப்புறம். நமக்கு அவன விட்டா யாரு. காசு வந்ததுக்கு அப்புறமும் மாறலடே. சின்னதுல எப்டியோ அப்பிடியே இருக்கான். உங்க அத்த காரியையும் சொல்லணும். அம்மைக்கு இப்போதான் நிம்மதி. நா கண்ண மூடினாலும் உனக்குன்னு நாலு பேரு வேண்டாமா"

சுடலைக்கும் மனதில் உறுத்தி கொண்டிருந்த ஏதோ ஒன்றில் இருந்து விடுபட்ட நிம்மதி. வீட்டின் சுவரில்,  மாமா,  அத்தை கையில் சிவகாமியும் கூடவே இவனும் சிறுவனாய் நிற்கும் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது.அதில் மாமாவின் வலதுகை  இவனின் தோள்களை அழுத்தி அணைத்தபடி இருந்தது.

Saturday 7 December 2019

செவலை




"தோ தோ, ச்சு ச்சு ச்சு" என்று அவன் அழைத்துக்கொண்டு ஓட, அதுவும் அவன் பின்னாலே ஓடியது.  செவலை நிறத்தில்,  காதோரம் மட்டும் வெள்ளை நிறத்தில் நாய்க்குட்டி.  அவன் கால்களுக்கு இடையே ஓடி மீண்டும் அவன் முன்னால் நின்று கால்களுக்குள் நுழைந்து ஓடியது. 

அந்த வயல்காட்டில் யாரும் இல்லை. வானம் மங்கிக்கொண்டிருந்தது. கருக்கள் நேரம் வீட்டுக்கு சென்று விடவேண்டும் என  ரமணியும் முத்துவும் வேகமாக நடக்க அவர்கள் பின்னாலே செவலை குட்டியும் ஓடியது.  ரமணி திரும்பி பார்த்தான், அது வலப்பக்கமாக தலையை சாய்த்து வாலை ஆட்டியது. அவனுக்கு இதை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆசை, முத்துவுக்கோ பயம்,  உடனே 

"லேய், உனக்கு மண்டைக்கு கழியலயா.  இதுக்க தள்ள இங்கதான் சுத்திட்டு கிடக்கும். பேசாம வால"

"அழவோல இருக்கு. நா எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போறேன். எட்டி குட்டி, எங்க வீட்டுக்கு வாரியா. டெய்லி உனக்கு பாலு, பிஸ்கட் தாரேன்" என்று செவலையை பார்த்து பேச ஆரம்பித்தான்.

"எப்படில பார்த்த பொட்டைக்குட்டின்னு. சரி வா சீக்கிரம் போவோம்.இருட்டிட்டு இருக்கு."

ரமணி செவலையை நெஞ்சோடு தூக்கி வாரிக்கொண்டான், அதுவும் அவனை வாஞ்சையோடு தன் நாவால் நக்கி புது எஜமானரோடு சென்றது.

'மக்கா, நாளைக்கு விடிஞ்சதும் இத தூக்கிட்டு கோட்டார் நாய் ஆசுபத்திரிக்கு போய் தடுப்பூசி போட்டுரு சரியா" என்றான் முத்து.

"ஆமா,  நீ உன் சைக்கிள் எடுத்துட்டு வருவியா,  அதிலியே போயிட்டு வந்திருவோம்."

"தடுப்பூசி போடல,  நம்ம டைகர் மாதிரி இதுக்கும் நாய் போலியோ வந்திரும். டைகர் எப்படி இருக்கும்,  கொழுகொழுனு குட்டிலியே சூப்பரா இருக்கும்."

"நாகராஜா கோயில் பின்னாடி வயல்ல விட்டுட்டு போகும் போது,  நம்ம பின்னாலயே ஓடி ஒடி வந்துச்சு. இப்போ அது எங்க கிடக்கோ"

"எங்க அம்மா, இப்போவும் நைட் சொல்லிட்டு தான் படுக்கும். அப்போல்லாம் ராத்திரி ஊழ விட்டுட்டே இருக்கும்,  வாய்ல நுரை வந்திரும். நாலு காலையும் தரைல தேச்சு ரத்தம் வடியும். கொஞ்ச நேரம் கழிச்சு அதுவே அமைதியாய் படுத்திரும். அம்மா தான் காயத்திருமேனி எண்ணெய ரத்தம் வந்த இடத்துல தேச்சு விடுவா. " இதை சொல்லும் போதே முத்துக்கு  கொஞ்சம் கவலை தொற்றிக்கொண்டது. 

இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். வானம் இருட்ட,  பறவைகள் கூட்டம் தாழ்ந்து பறந்து கூடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இவர்கள் பேசுவதை செவலையும் ஏதோ புரிவது போல் பேசும் போது மாறி மாறி இருவரின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தது.

"இப்போ வேற குட்டி எடுக்கணும்,  அப்பா ஆராம்பலி போகும் போது எடுத்துட்டு வருவாரு. பெரிம்மா சொல்லிச்சு வெள்ளையம்மா குட்டி போட்ருக்காம். டைகரும் அதுக்கு குட்டிதான்." என்றான் முத்து.

ரமணியின் வீடு வந்தது,  அது ஒரு சிறிய ஓட்டு வீடு. கால் சென்ட் இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. ஓட்டின் மேலே மழை நீர் ஒழுகாமல் இருக்க பெரிய தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தது. வீட்டின் வெளிப்புற சுவற்றின் காரைகள் பெயர்ந்து கிடந்தது. வீட்டின் வெளிக்கொண்டி மூடி இருந்தது. அவன் விளையாட போகும் போது,  தாழிட்டு சென்றான். அவன் அம்மா இன்னும் நெசவு கூடத்தில் இருந்து வரவில்லை. முத்து நாளை காலை சைக்கிள் கொண்டு வருவதாய் கூறிவிட்டு ரமணியின் வீட்டுப்பாட நோட்டை வாங்கி கொண்டு சென்றான்.

தன் கையில் இருந்த செவலையை இறக்கி கீழே விட்டான். அது அவன் வீட்டின் கதவை பிராண்டி விளையாடியது. மீண்டும் அவன் முன்வந்து கால்களுக்குள் நுழைந்து தன் நாவால் உட்கார்ந்து இருந்த அவனை வருடியது. வீட்டை திறந்து அவன் அம்மா வழக்கம் போல் வைக்கும் பெரிய நாழியின் உள்ளிருந்து மூன்று ருபாயும்,  பாத்திரம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பரணில் இருந்து சிறிய வாளியை எடுத்துக்கொண்டான்.  செவலையின் கழுத்தில் சிறிய சணல் கயிறு கொண்டு கட்டி வீட்டின் முன்னிருந்த பழைய மரத்தூணில் கட்டினான். 

"நீ இங்கேயே இரு, நா போய் பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வாரேன்,  சரியா" 

செவலை தனியாய் இருப்பதால் அவனுக்குள்  சிறிய பயம் எங்கே  அம்மா வந்து  இதை ஏன் கொண்டு வந்தாய் என்று திட்டிவிடுவாளோ?  என்று. வேகமாய் சென்று பாலும் பிஸ்கட்டும் வாங்கி வீட்டுக்குள் நுழையும் போது, அம்மா அங்கே அமர்ந்திருந்தாள்.ஒல்லியான தேகம்,  நெசவு கூடத்தில் பறக்கும் நூல் பிசிறுகள் அவள் முடியில் ஒட்டிக்கொண்டு இருந்தது. 

"லேய்,  எங்க இருந்து எடுத்துட்டு வந்த இத" என்று சொல்லும் போதே,  செவலை அம்மாவின் மடியில் ஏறி அவளின் கன்னத்தை நாவால் வருட ஆரம்பித்தது. கூச்சத்தில் அவள் சிரிக்க,  ரமணிக்கே மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மா அவ்வளவு சிரிப்பது இல்லை.  ஆம் ரமணியின் அப்பனை போல் ஒருவனை  கட்டியவள்  எப்படி சிரிக்க முடியும். பாவி வேலைக்கும் செல்வதில்லை,  வீட்டுக்கும் ஒழுங்காய் வருவதில்லை. முழுநேர குடிகாரன். இவர்களுக்கு குடிக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறதோ!.

அம்மா அதனிடம் கொஞ்சி கொண்டிருக்கும் போதே, அவன் கையில் இருந்த பாலை ஆற்றிக்கொண்டிருந்தான். உள்ளூற மகிழ்ச்சிதான், அம்மா எப்படியும் இதை வேண்டாம் என்று சொல்லமாட்டாள்,  யார்தான் சொல்வார் இது போன்ற அழகான செவலை குட்டியை. சிறிய வாளியின்  மூடியை திறந்து அதனுள் கொஞ்சமாய் பால் ஊற்றி அதனருகே வைத்தான். செவலை அதை நக்கி நக்கி குடித்தது,  ஒரே தடவையாய் மொத்தமாக குடித்து,  தன் பிஞ்சு வாயால் கத்தியது. ரமணியும் அவனது அம்மாவும் அதையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

நேரம் இருட்ட அம்மா அடுக்காளையில் சோறு வடித்து கொண்டிருந்தாள். அந்த வீட்டில் அடுக்காளை, பூஜையறை, படுக்கையறை எல்லாம் ஒன்றுதான்,  ஆக எங்கும் தனி தனியாய் எழுந்த போக அவசியம் இல்லை, இதுவும் வசதிக்குத்தான். ரமணி செவலையோடு விளையாடிக்கொண்டிருந்தான். ஓடி ஆடி விளையாடிய குஷியில் செவலை தூங்கி விட்டது. அதற்கு பிறகுதான் ரமணி அங்கிருந்து எழுந்தான், இரவுணவை முடித்துக்கொண்டு இருவரும் உறங்க பாய் விரித்தனர்.

உறங்கி ஒரு மணி நேரம் இருக்கும், வீட்டின் கதவை தட்டும் ஓசை கேட்டது. அம்மா எழுந்து கதவை திறந்தாள், அது அப்பாதான். நிற்க முடியாத அளவு போதை,  பெரும் சாராய நாற்றம் வீட்டுக்குள். அப்படியே நின்ற இடத்தில் படுத்து உறங்கி விட்டார். அம்மா மீண்டும் வந்து ரமணியின் அருகில் படுத்து உறங்கி விட்டாள். ரமணிக்கு தெரியும் இதுபோன்ற நேரங்களில் அம்மா அமைதியாய் இருப்பாள்,  காலை பொழுது விடிந்ததும் இங்கு ஒரு பெகளம் இருக்கிறது.

"ஒரு வேலைக்கும் போறதில்ல, பொட்டச்சி எவ்ளவுதான் ஒரு வீட்டுக்கு பண்ணுவா. கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா",  காதுக்குள் இவை நுழையும் போது ரமணி விழித்துக்கொண்டான். வெளியே தலையை எட்டி பார்த்தான். அம்மா செவலைக்கு  டீ வைத்து இருந்தாள். அது வீட்டின் கதவை பிராண்டியபடி  விளையாடி கொண்டிருந்தது.  அப்பா தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருந்தார்.

வழக்கமான ஒன்றுதான், ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே அமர்ந்தான். சண்டை பெரிதானது போல,  அப்பாவும் எழுந்து நின்று கத்த ஆரம்பித்து விட்டார். ரமணிக்கு இது பழைய சங்கதி, செவலைக்கு இது புதிது அல்லவா. எதுவும் அறியா குட்டி அவன் அப்பாவின் கால்களை சுற்றியபடி விளையாடிக்கொண்டு இருந்தது. 

சண்டை பெரிதாக அவன் அம்மா தலையில் அடித்துக்கொண்டு, அப்பாவை திட்டிக்கொண்டே  அழ ஆரம்பித்தாள். ஒரு தருணத்தில் அவரும் சண்டையிட ஆரம்பித்தார்.மேலும் பெரிதாக அவர் கோபத்தில் வெடித்தார். கெட்ட வார்த்தைகள் காதுகள் கூச சண்டை நடந்தது. இது எதுவும் அறியா செவலை அப்பாவின் கால்களை சுற்றியபடி விளையாடி கொண்டிருந்தது. இதையெல்லாம் ஓரமாய் அமர்ந்தபடி ரமணி பார்த்துக்கொண்டு இருந்தான், எதையுமே அவன் உள்வாங்காமல் அமைதியாய் இருந்தான்.

அவன் அம்மா கடும்கோபத்தில் அப்பாவின் சட்டையை கிழிக்க, அவரும் அம்மாவை தள்ளி விட்டார்.மேலும் கோபம் தனியாதவராய், காலுக்கடியில் விளையாடி கொண்டு  இருந்த செவலையை ஓங்கி மிதித்து விட்டார். ரமணிக்கு இப்போதுதான் செவலை நியாபகம் வந்தது.ஓடி போய் செவலையை பார்த்தான்.அவன் அப்பா அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட்டார்.அம்மாவும் அழுதபடி இருந்தாள்.

செவலை கத்தியபடி இருந்தது, அதன் சிறிய கண்ணின் ஓரத்தில் நீர் வழிந்து கொண்டு இருந்தது.ரமணிக்கு எதுவும் புரியவில்லை, அவனும் அழுதபடி அதை எடுத்து நெஞ்சோடு அணைத்தான். மேலும் கத்த திராணி இல்லாமல் அவன் மடியிலே படுக்கிடந்தது. சிறிது நேரம் கழித்து மெதுவாய் அதை இறக்கி விட்டான். செவலை மெதுவாய் எழுந்து நின்றது. அதன் தலை வலப்புறமாக திரும்பியே இருந்தது. 

ரமணி அதன் தலையை நேராய் மென்மையாய் திருப்ப அது வழியால் துடித்தது, அதன் சிறிய கண்ணின் ஓரத்தில் நீர் நிறைந்து இருந்தது.அதனால் தலையை நேராக வைக்க இயலவில்லை. வலப்புறமாக தலை சாய்ந்தே இருந்தது. ரமணியின் அம்மா அன்று வேலைக்கு செல்லவில்லை. செவலையின் கழுத்தில் காயத்திருமேனி எண்ணெய் தடவி கொடுத்தாள் அவன் அம்மா. அன்றைக்கு முழுவதும் அது படுத்தே கிடந்தது. முத்து சொன்னபடி வரவில்லை.

நேரம் இருட்ட இருட்ட வலியால் ஊழையிட ஆரம்பித்தது. இரவு முழுவதும் கத்தியபடி இருந்தது. அடுத்த நாள் அவன் அம்மா அவனிடம், 

"மக்ளே, இது கொண்டு எங்கையாவது உட்ருமா. இத பாக்க பாக்க உங்க அப்பா மேல வெறி வருது" என்றாள்.

ரமணியும் எதுவும் மறுத்து பேசவில்லை. செவலையை தூக்கி கையில் எடுத்துக்கொண்டான்,  வலப்புறமாய் திரும்பி இருந்த தலையை தூக்கி அவன் கன்னத்தை நாவால் வருடியது. வீட்டுக்கு வெளியே வரவும், முத்து சைக்கிள் உடன் வீட்டுக்கு வெளியே நின்றான்.

"நேத்து,  பெரிம்மா வீட்டுக்கு வந்திருந்துச்சு.அதான் வரல" என்றான்.

"நாம நாகராஜா கோயில் வயலுக்கு போவோமா. இத கொண்டு அங்க விட்ருவோம்" என்றான் ரமணி.

பின் கேரியரில் ரமணி அமர, முத்து சைக்கிளை மிதித்தான். செவலை வலப்புறமாய் திரும்பி இருந்த தலையை தூக்கி அவன் வீட்டை பார்த்தது, அவன் அம்மா வெளியே நின்றிருந்தாள்.செவலையின் வால் அங்கும் இங்கும் ஆடி கொண்டு இருந்தது.

செவலையின் வாசனை வீட்டில் நிறைந்து இருந்தது, மதிய நேரம் ரமணியின் அம்மா வாசலின் வெளியே விறகு அடுப்பில் சோறு வடித்து கொண்டு இருந்தாள். ரமணி உள்ளே படுத்திருந்தான். வெளியே செவலை கத்துவது போல இருந்தது. எழுந்து வெளியே ஓடினான். அவனது அப்பா கையில் செவலை, 

"நாகராஜா கோயில் கிட்ட வாரேன், இது ரோட்டுக்கு சைடு ல நிக்கி. எப்படி வந்துச்சோ தெரில,  வண்டில அடிபட்டுச்சுனா, அதான் எடுத்துட்டு வந்துட்டேன். எப்டி ல அங்க போச்சு ."

பேசிக்கொண்டே அப்பா இறக்கி விட, அது ரமணியிடம் ஓடியது. அதன் தலை கொஞ்சம் நேராய் இருந்தது.



இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...