Sunday 26 April 2020

A Hidden Life (Based on a true story)





ஆஸ்திரிய நாட்டு விவசாயின் கதை, மெசியாவின் வார்த்தைகளின் கனத்தை நெஞ்சில் தாங்கியவனின் கதை, மனைவியை ஆத்மார்த்தமாக நேசித்தவனின் கதை, குழந்தைகளை வாஞ்சையோடு அள்ளிக்கொஞ்சியவனின் கதை, அன்னையை அன்புடன் கவனித்தவனின் கதை, நண்பர்களோடு கையில் பீரோடு சிரித்தபடி அரட்டை அடித்தவனின் கதை, போரை வெறுத்தவனின் கதை, ஹிட்லரை வெறுத்தவனின் கதை.  இது பிரான்ஸின் கதை, அவன் மனைவி ஃபனியின் கதை, அவர்களின் காதல் கதை, முழுமையான கிறிஸ்துவனின் கதை,  மொத்தத்தில் இயற்கையின் கதை. 

ஆஸ்திரியா ஜெர்மனியின் நட்பு நாடு, இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில்,  ஜெர்மனியோடு இணைந்து நட்பு நாடுகளும் போர் புரிந்துகொண்டிருக்கிறது.  வீரர்கள் எப்படி உற்பத்தி ஆகிறார்கள், அவன் விவசாயியோ, ஆசிரியனோ, கொல்லனோ, தச்சனோ அரசாங்கம் அழைத்தால் கையில் துப்பாக்கி ஏந்தி குறிபார்த்தோ இல்லையோ எதிரிகளை கொல்லவேண்டும், எதிரிகளின் குருதி நிலத்தின் ஆறாய் ஓடவேண்டும். ஹிட்லரின் தாகம் தீர வேண்டும். 

ஆஸ்திரிய மலைமுகடுகளின் அடிவாரத்தில் விவசாயம் செய்கிறான் பிரான்ஸ், காதல் மனைவி, அம்மா, மூன்று குழந்தைகள், மனைவியின் சகோதரி, சில நண்பர்கள் என அமைதியான, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. இடையில் போர்ப்பயிற்சி பெற அழைக்கப்படுகிறான், அந்நேரம் எதிரி நாடு சரணடைவது போல தெரிய, திருப்பி கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான்.  ஒரு நாளின் நீளம் எவ்வளவு,  அது முழுக்க முழுக்க மனைவியின் மேல் தீராக்காதலுடன் வாழ்கிறான். இறைவனுக்கு விசுவாசமாய் இருக்கிறான்.  அவனது அன்பின் ஊற்றாய் நெடுக இயற்கையும் துணை நிற்கிறது. வெண்மையான, குளிர்ந்த மேகக்கூட்டம் மோதும் ஆல்ப்ஸ் மலைச்சிகரமும், விழி எட்டி திரும்பும் முனை வரை மலைச்சரிவுகளில் புல்வெளியும், சலசலத்து ஓடும் ஆற்றின் நீரோட்டமும், மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட அழகிய தேவாலயமும் இவர்களை ஆசிர்வதித்தபடியே இருக்கிறது.  இடையில் போர் முடியவில்லை, தொடர்கிறது தன்னையும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என உணர்கிறான். மறுக்கிறான், கிராம தேவாலய பங்குத்தந்தையிடம் போருக்கு செல்ல தான் தயாரில்லை என மறுக்கிறான்.  கிராம தலைவர் பேசுகிறார், அதற்கும் மறுக்கிறான். விஷயம் கசியத்தொடங்க கிராமம் மொத்தமாய் அவர்களை வெறுக்கிறது. அவனின் இச்செயலுக்கு காரணம், மனைவியின் மீதுள்ள மோகம் என பழி ஃபனியின் மேல்.  பொறுக்கிறான், உடைகிறான், அலைக்கழிப்பில் மிதக்கிறான், ஒருநிலையில் ஏற்றுக்கொள்கிறான். 

அன்றைய காலகட்டம்,  ஹிட்லர் இரட்சிக்க வந்தவர் போல தன்னை முன்னிறுத்தினார்,  அவரின் குரல், எழுத்து எல்லாமே புரட்சி, இனவெறுப்பு, ஜெர்மானிய மீட்சி என சமரசம் இன்றி பெரும்கூட்டம் நாஜிக்களாக அவர்பின் நின்றது. போருக்கு வலுவான, நடுவயது காரர்கள் கட்டாயம் சென்றாக வேண்டும், யாருக்காக தன் இனத்திற்காக, நாட்டுக்காக. இல்லையேல் அது பாவம், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கிராம மக்கள் பிரான்ஸின் குடும்பத்தை வெறுக்க, ஒதுக்க அதுவே காரணம். 

நிர்பந்தம் காரணமாய் போருக்கு செல்கிறான், ஃபனி பிரியாவிடை கொடுக்கிறாள். தன்னை அதற்கு தயார்ப்படுத்துகிறாள், குழந்தைகளை, அவன் அன்னையை அரவணைக்கிறாள். இரயில் கிளம்புகிறது, கைகள் பிரிகிறது. ஜெர்மனி சென்றவன்,  'ஹெய்ல் ஹிட்லர்' சொல்ல மறுக்கிறான்.  ஹிட்லரின் வார்த்தைகள் மேல் சத்தியம் செய்ய மறுக்கிறான். விளைவு சிறை, கொடும்சிறை. 

ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் ஆரம்ப நிமிடங்களில் இருக்கிறது. நம்மை முழுக்க உள்ளிழுக்கும் ஆற்றல் ஆரம்ப காட்சிகளுக்கே உண்டு.  அதற்கு உதாரணம் இப்படத்தின் ஆரம்ப காட்சிகள். பிரான்ஸ் மனம் நிலையழிந்து அலையும் திரியும் தருணம் எல்லாம், கிறிஸ்துவை நினைக்கிறான், அவரின் வார்த்தைகளை நம்புகிறான். படம் முழுக்க, குறியீடாய் கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுள் எழும் நேரமெல்லாம், இயற்கை பிரம்மாண்டமாய் காட்சிகளாய் திரையில் விரிகிறது. இயற்கையே ஆதிரூபன், இயற்கைக்கு கீழேயே நாம்.  

காதல், எது காதல். கையை கிழித்து, குருதியில் காதலியின் பெயரை எழுதுவதா? இல்லை கடல் கடந்து அவள் முன் நிற்பதா?  எது காதல். ஃபனி காதலின் உச்சம், அவன் வார்த்தைகளை நம்புகிறாள், அவன் முடிவுகளோடு துணை நிற்கிறாள்.  பிரான்ஸின் விசுவாசம் கிறிஸ்து, ஆனால் அவன் நம்பிக்கை ஃபனி. கடிதங்கள் மூலமே ஒவ்வொருக்கொருவர் நம்பிக்கையை விதைத்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியை எதிர்நோக்கும் உந்துதலை அறுவடை செய்கிறார்கள். காதல் மகத்துவம் ஆனது.

ஃபனிக்கும் அவள் சகோதரிக்கும் இடையேயான பிணைப்பு. பிரான்ஸின் அம்மாவிற்கும் ஃபனிக்கும் இடையிலான ஒரு உரையாடல், போரின் வலியை அனுபவித்த பெண், இன்னொருத்தி அதனை அனுபவிக்கப்போகிறாள் என அறிந்து உடைகிறாள். ஒருவிதத்தில் இங்கே ஃபனிக்கும் அவள் அன்னையாகிறாள். பிரான்ஸை சந்திக்க ஃபனி தந்தையோடு செல்கிறாள், அவனை சந்திக்க இயலவில்லை. ஃபனியிடம் மன்னிப்பை கோருகிறார், அவரும் பிரான்ஸை வெறுக்கவில்லை. மாறாக இயலாமை அவரை நொறுக்குகிறது.

ஒருமனிதனின் அகங்காரம், இனவெறி போரை தூண்டி, சங்கிலியை போல நீண்டு எல்லோரின்,  நாட்டின் குடியானவரின் வாழ்வில் விஷம் கொண்ட நாகமாய் படமெடுக்கிறது. நாஜிக்களின் சிறை பிரான்ஸை, அவனின் மனசின் திரையை கிழிக்கிறது. அவன் அழுகிறான், கூவுகிறான். பாதையில் மட்டும்  தெளிவாய் இருக்கிறான்.அவனின் மேய்ப்பர் யார் என அறிவான். அவரின் வார்த்தைகளின் கனம் அவன் இதயத்தில் கனக்கிறது. வழக்கு நீதிமன்றம் செல்கிறது, வழக்கறிஞர் அவனிடம் மன்றாடுகிறார். ஹிட்லரின் வார்த்தைகள் மேல் சத்தியம் செய், இதயத்தில் இருந்து வேண்டாம், வெறும் வார்த்தைகளாக எண்ணிக்கொள் சத்தியம் செய்ய வேண்டுகிறார். மறுக்கிறான், அவனது கிறிஸ்துவின் வார்த்தைகள் கொல்வதை பாவம் என்கிறது.  இங்கே நாஜிக்கள் கையில் விவிலியம் ஏந்தியபடி,  கழுத்தில் குருசுடன், யுத்தகளத்தில் கொல்கிறார்கள். யூதர்கள் ரத்தம் தங்கள் மேல்பட்டால் மகிழ்கிறார்கள். 

நீதிபதி கேட்கிறார், நீ இதை செய்வதால் எதை கொண்டு போகப்போகிறாய். இதில் என்ன உன் பிடிவாதம், அவனுக்கு தெரியவில்லை.  ஆனாலும் மறுக்கிறான். விளைவு உச்சபட்ச தண்டனை.  விஷயம் ஃபனிக்கு தெரியவர, பங்குத்தந்தை உடன் பெர்லின் புறப்படுகிறாள், இருவரும் சந்திக்கிறார்கள்.  பங்குத்தந்தை கெஞ்சுகிறார் இறைவன் வார்த்தைகளை இதயத்தில் இருந்தே அளக்கிறார்,  நிலைப்பாட்டை மாற்று என கேட்கிறார். பிரான்ஸ் அமைதியாய் இருக்கிறான், ஃபனி அவனிடம் தன் காதலை கூறுகிறாள், நீ எடுக்கும் எந்த முடிவுக்கும் தான் துணை நிற்பதாய் கூறுகிறாள். இருவரையும் சூழல் பிரிக்கிறது. பின் நடப்பவை பிரான்ஸின் விருப்பம் போல நகர்கிறது. 

இங்கே எனக்கு தோன்றியது ஒரே வரிதான் shutter island-ல்  இறுதியில் வரும் வரிகள் 

"Which would be worse,  to live as a monster or die as a good man".

இவ்வரிகள் இங்கே பிரான்ஸ்காக எழுதப்பட்டது போல தோன்றியது. தீர்மானம் மற்றும் நம்பிக்கை நம்மை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தும். ஃபனியின் காதலை பெற, நாம் பிரான்ஸாக வாழ வேண்டும்.

இப்படத்தின் ஆன்மா இசையும், காட்சிமொழியும். 

Saturday 25 April 2020

சிலுவையில் தொங்கும் சாத்தான் (வணிக கிறிஸ்து)






சிலுவை, பாவத்திற்கான சம்பளம் அல்லவா! அப்படியா சொன்னேன், சரி வைத்துக்கொள்வோம் அப்படியானால் மனிதகுமாரர் என்ன பாவம் செய்தார். இங்கே நிறுத்திக்கொள்ளுங்கள்,  தொடரும் முன் ஒரு அச்சம் உடலெங்கும் பற்றிக்கொள்கிறது. கிறிஸ்துவை உணர்ந்தவர்கள், தச்சனின் மகனை அறிந்தவர்கள், அவர் போதித்தவை வழி நடப்பவர், அவர் விரும்பிய புதிய உலகம் சிருஷ்டிக்கும் என்பதை  நம்பாமல் அவரையே காட்டிக்கொடுத்த யூதாஸின் நண்பர்கள், யூதாஸுக்கும் இங்கே இடமுண்டு. நீங்கள் மாத்திரம் தொடர்ந்து வாசியுங்கள். இங்கே பவுலின் வழியினர் வேண்டாம். ஆம், இது உங்களுக்கான பாதை அல்ல.  உங்கள் மேய்ப்பர், அதோ தெரிகிறதே கொல்கொதா மலைக்குன்று அங்கே இரத்தம் தோய்ந்த உடலில் ஈக்கள் மொய்க்க,  வலது விழி பிதுங்கி வெளிநிற்க, முன்பற்கள் சில உடைந்து, உதடு பிய்ந்து தொங்கும், வயிற்றின் கீழ்பக்கம் கிழிந்து பிரிந்த தோளில் சுருண்டு கிடக்கும் குடலை கொண்டவர் அல்ல.  உங்களுக்கானவர் வெண்ணுடை தரித்து, தலை வாரி, ஜொலிக்கும் கண்களுடன், ஒதுக்கப்பட்ட தாடியுடன்,  கைகளை விரித்து, கண்ணாடி மாளிகையில் நிற்கிறார். அவரின் பின்னே பரலோக சாம்ராஜ்ஜியம் விரிந்திருக்கிறது.  உங்களுக்கு தெரிகிறதா?  எட்டி பாருங்கள்.  நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள், பவுலின் மைந்தர்களே, தெரிகிறாரா உங்கள் ஆண்டவர்.  அவரின் பின்னால் செல்லுங்கள், வாட்டிகன் இருக்கிறது. ஐரோப்பாவின் வியாபார மையத்தின் குறியீடு அவர், அவரோடு புதிய விவிலியம் இருக்கிறது, அதில் கைவிடப்பட்டோரின், ஏழைகளின், நோயாளிகளின் மனதை வருட தேன் தோய்த்த வார்த்தைகள் பலவுண்டு. 

 அதிகப்பிரசங்கித்தனம், யார் இவன்?  என்ன அருகதை இருக்கிறது எங்கள் ஆண்டவரை பற்றி இவன் பேச! கைகளை மடக்கி கொண்டு, முஷ்டியை மடக்கி, ஆத்திரத்துடன் கண்கள் சிவக்க, நாவை மடித்து என்னை நோக்கி வரும்முன் கொஞ்சம் நிதானியுங்கள்.  என்னை பாருங்கள் ஏதாவது புலப்படுகிறதா?  நான் கருப்பாக இருக்கிறேன். நீங்கள் வெளுப்பாக இருக்கீறீர்கள்.  என் வயிறு தேடிக்கண்டுபிடிக்க வேண்டும், உங்களுக்கு கொடைவண்டி சாடி வெளிவர காத்திருக்கிறது. அழுக்கான ஆடையை அணிந்திருக்கிறேன், நீங்கள் சுத்தமான ஆடையுடன் உலா வருகிறீர்கள்.  மற்றபடி நமக்கு இரு கண்கள், ஒரே வயிறு, ஒரே குறி இன்னும் பல ஒரே ஒற்றுமையுடன். ஆனால், ஒரு பெரிய, ஆமாம் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.  சங்கிலியின் ஒரு முனை என் கழுத்தில், மறுமுனை உங்கள் கைகளில்.  எந்த பக்கமும் இழுக்கலாம், உங்கள் வீட்டு குழந்தைகள் கைகளில் விளையாட்டாய் கொடுக்கலாம், அவர்கள் இழுத்துச்செல்ல நான் நாய் மாதிரி, நாய் வேண்டாம்,  நாய் கூட எங்களை விட கொஞ்சம் சுதந்திரம் ஆனதுதான். 

என் பெயரை சொல்லவேண்டுமே, இரண்டு பத்திகள் கடந்துவிட்டீர்கள், என் பெயர் முதூரி, கூகி வா தியாங்கோ சூட்டிய பெயர். கென்யா எங்கள் நாடு, எங்கள் நாடு கென்யா. நான் எங்கள் இரத்தத்தை உறிஞ்சும் சாத்தான்களை வெறுக்கிறேன். சாத்தான்கள், மனிதசதை, இரத்தம் அருந்தும் சாத்தான்கள்.  ஆண்டவர் சொன்னாரே, அப்பம் எனது உடல், திராட்சை ரசம் என் இரத்தம். இதற்கு வேறு அர்த்தம் இருப்பதே, சாத்தான்களே உங்களை கண்டபின் அறிந்துகொண்டேன்.  நீங்கள் எங்களுடைய சதையை தின்று, தாகத்திற்கு எங்கள் இரத்தத்தை குடிக்கிறீர்கள்.  எங்கள் உழைப்பை சுருண்டி, என் நாட்டின் கருப்பையை அறுத்து மலடு ஆக்குகிறீர்கள்.  நான் முதூரி,  கூகி வா தியாங்கோ எனக்கு இப்பெயரை சூட்டினார்.  கொஞ்சம் பொறுங்கள் ஜசிந்தா வரியிங்கா வருகிறாள். அவள் ஏதோ சொல்ல முற்படுகிறார்கள்.  ஒன்றை சொல்கிறேன், இத்தோடு விடை பெறுகிறேன் , வேண்டாம் அது ரகசியம், காக்கப்பட வேண்டும். 

சுகர் கேர்ள், எப்பேர்ப்பட்ட பட்டம். எங்கும் திரியலாம், மினுக்கலாம், தொடையை மாத்திரம் விரித்துகொண்டே இருக்கவேண்டும். அனலாய் கொதிக்கும் மூச்சுக்காற்று காலிடுக்கில் நுழைந்து உடல் சிலிர்க்கும், ஆண்களின் அகங்காரம் இங்குதான் எடுபடும்,   ஆனாலும் சிலநேரம் தலைகுனிய நேரிடலாம்.  அதுக்கும் சேர்த்து அடி எங்கள் பிருஷ்டத்திலே பலமாய் விழும், நான் அப்படியல்ல, நான் வரீயிங்கா. வெளுக்கும் தோலுக்கு களிம்புடன்  அலைந்து, முடியை சூடேத்தி நேராக்கி, வெள்ளை பெண்களை போல மாறி அலைந்தேன்.  எங்குமே,தலை நிமிர்த்தி எடுப்பாய் நிற்க பயம், என் மார்பை நோட்டமிடும் கண்களை சந்திக்க பயம், ஒருவேளை சந்தித்தால் சமிக்கையோ என எண்ணி தொடையை தடவுவான்.  முதலாளிகள், அயோக்கிய சவங்கள்.  தினமும் தேவாலயம் செல்வேன்,  விவிலியம் ஏந்தாத இரவுகள் இல்லை.  சிலுவையில் நமக்கான பாவத்தை சுமந்து நிற்கும் பெரும்கருணை கொண்ட ஆண்டவரிடம் தினமும் மன்றாடுவேன்.  ஆனால் ஒரு நாள் சாத்தானின் குரல் என்னுள் கேட்டது.  அது பெரும்கதை, நேர்த்தியாக கதைசொல்ல கூகி வா தியாங்கோ வேண்டும். 

இங்கே, என் மனதில் கனமான இரும்பை போல கனக்கும், கோலிசோடாவின் இடைநிற்கும் கோலியை போல அங்குமிங்கும் உருண்டோடும் சித்திரங்களும் என்றுமே அகலாமல்,  தாழ்ந்து கிடக்கும் கருமேகக்கூட்டம் போல வருத்தத்தை, கவலையை மழையாய் கொட்டும். நான் நனைவதில் எவ்வித பலனும் யாருக்குமில்லை.  ஆனால் எனக்காக நனைவேன். கென்யாவின், வியாபாரிகள் கருப்பான தோல் கொண்ட வெள்ளை மனதுக்காரர்கள்,  அவர்கள் ஏற்றுக்கொண்டு, தலைகவிழ்ந்து நிற்கிறார்கள்  ஐரோப்பாவாவின், வட அமெரிக்காவின், ஜப்பானின் முதலாளிகள் முன். நான் ஜசீந்தா வரியீங்கா, கருப்பின் அழகு இவர்களுக்கு எப்படி தெரியும்.  ஆப்பிரிக்காவின் அழகு இவர்களுக்கு புரியுமா?  எங்களின் இசை?  எங்கள் தொன்மங்கள்?  எங்கள் தெய்வங்கள்?... 

கடைசியாக என்ன சொன்னேன்,  தெய்வங்கள் என்றா சொன்னேன்?  கிறிஸ்துவின் அல்லாஹ்வின் சேனைகள் நிரம்பி இருக்கிறது ஆப்பிரிக்கா, இங்கே எங்கே போய் தேடுவேன் எங்கள் கடவுள்களை?  முதலாளிகள் கூறினார்கள், எங்கள் கடவுள் காட்டுமிராண்டிகள், பலி கேட்பவர்.  அப்படியா?  கேள்விகள் இன்றி ஒதுக்கப்பட்டது எங்கள் கடவுள்கள். முதலாளிகளே, உங்கள் கடவுள்கள் சுரண்ட ஆணையிட்டாரா?  அடுத்தவன் வீட்டை இடித்து, செங்கற்களை பொருக்கி உங்கள் மாடமாளிகைகளை எழுப்ப சொன்னாரா?  உங்களுக்கு தெரியுமா! நீங்கள் நூறு ஏழைகளின் வீட்டை இடித்து ஒரு மாளிகை எழுப்புகிறீர்கள்.  பலி கேட்கும் எங்கள் கடவுள் சிங்கத்தை போல, யானையை போல, சிறுத்தையை போல, உலகத்தின் நியதியை அறிந்தவர், பேராசை இல்லாதவர், மழை போல் உலகம் தளிர்க்கும் கருணை கொண்டவர், புவியை போல பரந்த மனம் கொண்டவர்.  நீங்கள் இங்கே அழைத்து வந்தது கிறிஸ்துவா?  இஸ்ரேலில் கோயிலில் பூசாரிகளை கண்டித்தவர், நோயாளிகளின் கைகளை அன்போடு தழுவியவர், இல்லை இல்லவே இல்லை நீங்கள் அழைத்து வந்தது சாத்தான்.  சத்தியமாக, நிச்சயமாக சொல்வேன் அது சாத்தான். வெண்ணுடை தரித்து, கைகளை அகல விரித்து, தலை வகிடு எடுத்து, தாடிகள் செதுக்கப்பட்டு, ஜொலிக்கும் கண்களுடன் நைரோபியிலும், இல்மோராக் தேவாலயங்களிலும் நிற்கும் அது கிறிஸ்துவா! கிறிஸ்துவை, அவரின் ஆன்மாவை நெருங்கியவர், அவரின் கைகளை தழுவியவர், ஆத்மார்த்தமாக அவர்பின் செல்வர் எவராவது சொல்லட்டும், இது கிறிஸ்துவா? 

 வெள்ளைத்தோல் காரர்களே, நாங்கள், உங்கள் அடிமைகள். உங்கள்  சாத்தானை சிலுவையில் அறைவோம். முதூரி இரகசியம் என்றாரே, என்ன தெரியுமா?  கென்யாவில் புரட்சி உருவாகிவிட்டது.

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...