Monday 27 January 2020

பாரபாஸ்




சிலுவையில் அறையப்பட்டார்.  நம் பாவங்களை சுமந்து கொண்டு மனிதகுமாரர். முதுகின் உள்தோளையும்  ஊசி போல  துளைக்கும் கொடூர சவுக்கடியின் வலியும். உள்ளங்கைகளில்  கால்களின் பாதங்களில் அடிக்கப்பட்ட நரம்புகள், எலும்புகள் வழியே துளைத்த  ஆணியின் வேதனையும்.இறப்பின் திறப்பை கொடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் அவர் முன் நின்ற யூத கொடும் வீரர்களுக்காக மனமுருகி ஆண்டவரிடம் ஜெபித்து கொண்டிருந்தார்.  அவர்களை மன்னிக்க கோரி மன்றாடினார்.  இதை எல்லாம் தூரத்தில் நின்றபடி பாரபாஸ் கவனித்து கொண்டிருந்தான். 

அறிந்திருப்போமா! அறையப்பட்ட சிலுவை கர்த்தருக்கானது இல்லை என்பதை.  யூத நீதிமன்றம் முன்பு இயேசு விசாரணையின் பொருட்டு நின்றபோது அவர் அறிந்திருப்பாரா அவர் சுமக்கவிருக்கும் சிலுவை யாருக்கானது என்பதை.  கொள்ளைக்காரன்,  கொலைகள் செய்தவன், பிறரின் இரத்தம் கைகளில் வழிந்தோடிய ஒருவனின் பாவக்கறையையும் சேர்த்தே தன் தோள்களில் சுமக்க போகிறார் என்று. 

அறிந்திருக்கவில்லை பாரபாஸ், கொல்கோதா நோக்கி சிலுவையுடன் செல்லும் மெலிந்த உடல் காரர், சிவந்த இரத்தக்கறை படிந்த தோள்களில், மேலும் சவுக்கடி விழ, தலையில் சூடிய முட்கிரீடம் மென்மையான நெற்றியை குத்தி கிழிக்க, தெம்பின்றி தத்தி தத்தி நடந்த அந்த ஒல்லியான உடல்வாகு கொண்ட மனிதர் அவனின் வாழ்வில் இனி அவன் கடக்கவிருக்கும் எல்லா நிகழ்வுகளிலும் பெரும் தாக்கத்தை கொடுக்க போகிறவர் என்று.

அவர் சிலுவையில் அறையப்பட்டு, உயிர் பிரியும் தருணம் வரையிலும் அங்கிருந்தான். சிலுவையில் அறையப்பட்ட சிலநொடி இருட்டு அவ்விடத்தை சூழ்ந்தது. உண்மையிலே குழப்பமாகவும் பதட்டமாகவும் உணர்ந்தான். நெடுங்காலம் சிறையில் இருந்ததால் கண்கள் வெளிச்சத்திற்கு பழகவில்லையா! இருக்குமா,  அவரை கண்ட முதல்நொடி கூட அவரை சுற்றி பரிசுத்தமான ஒளி பரவி இருந்ததாகவே உணர்ந்தான். வீதி வழியே அவர் போகும் பாதையெங்கும் அவனும் சென்றான். பரிகசித்து திட்டிய மக்கள் வெள்ளம் வழியே அவர் செல்ல,  கண்ணீரோடு அவரை பின்தொடர்ந்த அன்னையிடம் கூறமுடியுமா? அது என் சிலுவை என்று. அவன் பார்வையில் மேல் உதடு பிளந்த பரிச்சியமான இளம் பெண்ணொருத்தியும் சென்றாள். அவள் மேரி மேக்தலினா இருக்குமா?. அவரின் உயிர் பிரிந்த பின்னே அங்கிருந்து நகர்கிறான்.

பின் அவளை ஜெருசலம் சந்தில் சந்திக்கிறான். பாரபாஸ் அவளிடம் கேட்கிறான் அவரை பற்றி, அவள் கூறுகிறாள். கடவுளின் மகன் அவர் என்று. கடவுளின் மகனா? ஆம் கடவுளின் மகன் தான். ஏழைகளின், குருடர்களின், தொழுநோயாளிகள் கடவுள் அவர்.கைவிடப்பட்டவர்களின் கடவுள், எளியவர்களின் கடவுள் அவர். அதுவரையில் சாவில் இருந்து தப்பிய ஒருவன், அகம் மகிழ்ந்த ஒருவன். அருவருப்பு அடைகிறான். அவன் மேலா?  இது தற்செயலா இல்லை எழுதப்பட்ட விதியா?  அவருக்கு இது முன்பே தெரிந்து இருக்குமா?.  உண்மையிலே அவரின்  இரட்சிப்பை நிறைவோடு அளித்திருப்பாரா?.  என்ன முட்டாள்தனம் கடவுளின் குழந்தையாக இருக்க அவரால் எப்படி முடியும். சிறுபிள்ளையை போல இந்த ஜனங்களை ஏமாற்றி இருப்பாரா?  சித்து விளையாட்டு காரனாய் இருப்பார் போலும். உண்மையிலே கடவுளின் மகன் தன்னை காப்பாற்றிக்கொள்ள திராணி இல்லாதவர் எப்படி இரட்சிக்க வந்தவறாய் இருப்பார். உமிழ்ந்திருப்பான். ஆனாலும் நம்பாமல் தவிக்கிறான், இது உண்மையாக இருந்தால்,  நான் அனுபவிக்க இருந்த துயரத்தை, சாவை ஏன் என்னிடம் இருந்து பிடிங்கினார். பொய் புளுகுகிறாள் என்றே தோணிச்சு,  ஒருவேளை உண்மையாய் இருந்தால் அவர் அளித்த இந்த உயிர் எதற்காக? எதன் பொருட்டு என்னுடைய சிலுவையில் அறையப்பட்டார். அப்போது நான் வாழும் இப்பிறவி அவருடையது அல்லவா?  சீ முட்டாள் தனம். 

அவரின் போதனைகள் என்ன என்று அவளிடம் மேலும் வினவினான். அவர் போதித்தது "ஒருவருக்கொருவரை நேசியுங்கள்" என்றாள். மடத்தனம் எப்படி சுயநலம் இன்றி இன்னொருத்தவரை நேசிக்க முடியும். பாரபாஸ் குழம்பி தவித்தான். அவளோடு சேர்ந்தே பருத்த பெண்தோழி வீட்டிற்கு செல்கிறான். குடிக்கிறான், எவ்வளவு குடித்தும் அவனுக்குள் எறிந்து கொண்டிருந்த அக்கேள்விக்கு விடை மட்டும் இல்லை. அதன் பின் ஜெருசலம் நகரின் எல்லா சந்துகளிலும் அலைகிறான். மேலும் மேலும் அவரை பற்றி அறிகிறான். மேல் உதடு பிளந்த அப்பெண்ணின் வழியே அவரை முதன் முதலாக அறிந்து கொண்டான்.

ஒருநாள் வழியில் எதேச்சையாய் பீட்டரை சந்திக்கிறான். துயருற்று அமர்ந்திருக்கிறான்,  ஆம் இயேசுவை யார் என்று தெரியாது என்று சொன்னான் அல்லவா அவனே தான். அவன் மூலம் அவர் உயிர்த்தெழ போவதை அறிகிறான். அன்றைய இரவு கல்லறை முன் பதுங்கி கிடக்கிறான். ஆனால் உயிர்த்தெழல் மேல் உதடு பிளந்த அவளுக்கு மட்டுமே காணக்கிடைக்கிறது. அங்கு தானே இருந்தான், ஏன் அவனுக்கு அற்புதம் தெரியவில்லை. அவள் இவனிடம் அதுபற்றி கூற,  மறுக்கிறான். கடவுளின் மகனுக்கு எதற்கு இரண்டு நாள் தேவைப்படுகிறது. அய்யோ அபத்தம்,  சாவையே தவிர்த்திருக்க முடியுமே. பொய்,  எல்லாம் பிதற்றல். ஏன் இப்படி அவரை தொழுகிறார்கள்.  நம்பிக்கை,  என்ன அப்பட்டமான பகட்டு நம்பிக்கை. முட்டாள்கள். அலைக்கழிப்பில் மிதக்கிறான்,  யார் இவர்.  உண்மையிலே கடவுளின் மகனா?  தேவை இல்லாத கேள்வி. அலைந்து அலைந்து இயேசு அற்புதம் மூலம் பிழைக்கவைத்தவன் உடன் இரவுணவு உண்கிறான். அங்கும் நம்பிக்கை இல்லை. இவனும் புளுகுகிறான். ஜெருசலேம் நகர வீதிகளில் அரசிற்கு தெரியாமல் கிறிஸ்தவர்கள் கூடும் சபைகளில் ஓரமாய் அவர்களை கவனிக்கிறான். ஒவ்வொருத்தரும் அவரின் மகத்தான அற்புதங்களுக்கு சாட்சி சொல்கிறார்கள்.  பீட்டர் சொல்கிறான், மேல் உதடு பிளந்த பெண்ணும் சொல்கிறாள்.  கூட்டம் ஆமோதிக்கிறது. அவரின் மகிமையை எண்ணி, மனமுருகி வேண்டுகிறது. அய்யோ! என்ன இது நாடகம்,  அவர் கடவுளா?  இவர்கள் நம்பும் புது உலகத்தை உருவாக்க வந்தவரா?.

குருட்டு கிழவனால் காட்டி கொடுப்பட்டு கல்லடி பட்டு இருக்கிறாள். அவள் மேல் முதல் கல்லெறிந்தவனை குடல் சரிய குத்தி கொள்கிறான். பின் சடலத்தை சுமந்துகொண்டு ஜெருசலேம் விட்டு நகர்கிறான். அவளுக்கான கல்லறையில் தூங்க வைக்கிறான். அவள் வரும் முன்னே அவளுக்காக காத்திருக்கிறது பிறக்கும் போதே இறந்து பிறந்த குழந்தை. அது இவன் மூலமே பிறந்தது. அலைந்து திரிந்து தன் கொள்ளைக்கூட்டத்தோடு சேர்கிறான். முன்பை விட எதிலும் ஆர்வம் இல்லாதவனாய் இருப்பவனை அவர்கள் வெறுக்கிறார்கள்.  பாரபாஸ் அவனை பார்ப்பவரை அச்சுறுத்தும் முகதழும்பை உடையவன். அது வெட்டுக்காயம். அதை பரிசளித்தது அவன் தந்தை எலியாஹு. அவன் தாய் ஒரு வேசி, பலரோடு இரவை வேண்டாவெறுப்பாக கழித்தவள்.  ஆனால் இவனுக்கு தெரியும் இவன் தந்தை எலியாஹு.  அப்பனின் சாவு மகன் கையாலே கிடைக்கிறது.  மன உளைச்சலில் அங்கிருந்தும் நகர்கிறான். அவனுக்கு இருக்கும் ஒரே கேள்விக்கு விடைதேடி.

பின் சஹாக் வருகிறான். அவனும் கிறிஸ்தவன்.  கடவுளின் அடிமை என்றே தன்னை அழைத்து கொள்கிறான். இவன் மூலமே கடவுளை அணுகுகிறான் நெருக்கமாக. அதிலும் வெறுப்பு கொண்டவனாய் கடவுளை மறுக்கிறான். அதிசயம் நடக்கிறது, சஹாக்கை சந்தித்தது சுரங்கத்தில், அங்கு அடிமையாகவே காலம் தள்ளுகிறான்.  அவனுக்கு சஹாக் என இணைக்கப்பட்ட சங்கிலியில் இருவருமாய் நாட்களை கடக்கிறார்கள். முதுமை நெருங்கி விட்டது அவனிடம் இந்நாட்களில்.  கடவுளின் கிருபை என சஹாக் நம்ப அவர்கள் தப்பிக்கிறார்கள். 

விதியின் விளையாட்டு, ரோம் கவர்னரை சந்திக்க வேண்டிய கட்டாயம்.  அவர் முன்னே சஹாக் அவனின் கடவுள் இயேசு என்கிறான். விளைவு சிலுவையில் அறையப்பட்டு உயிர் இழக்கிறான். அதே வேலையில் கடவுளை மறுக்கிறான் பாரபாஸ்.  உயிர் பிழைக்கிறான். கடவுளை கடைசி தருணம் வரை தேடுகிறான். அவனின் மறுப்பிற்கு அவனிடம் பதில் இருக்கிறது. ஆம் இன்னும் கடவுளை அவன் உணரவில்லை. அற்பத்தனமான  நம்பிக்கை அவனிடம் இல்லை,  கடைசி வரை கடவுளை தேடுகிறான். கடவுளின் குழந்தையை,  அவன் ஏற்றுக்கொள்ளாத போதனையை போதித்த 'ஒருவரை ஒருவர் நேசியுங்கள்' எனும் மனிதத்தை அவன் நம்பவில்லை.  உவப்பானதாக இல்லை, மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள் எப்படி இன்னொருத்தரை நேசிக்க முடியும். அதுவும் பணம் படைத்த வசதியான செல்வந்தர்கள் ஏழைகளை, நோயாளிகளை,  வயதான கைவிடப்பட்டவர்களை, எளியவர்களை, விளிம்பில் நிற்பவர்களை நேசிக்க முடியும். அறிவாளிகள் முட்டாள்களை நேசிப்பார்களா? வலியவன் தன்னைவிட எளியோரை எப்படி நேசிப்பான். அவர்களை அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கி தனக்கு கீழே வைத்துக்கொள்வான் அடிமையாக்கி. 

பாரபாஸை விரும்பிய, அவனோடு படுக்கையை பகிர்ந்தமைக்கு அவனை எண்ணி வருந்திய பருத்த பெண் மட்டுமே நம்பினாள்,  பாரபாஸ் உடலில் இயேசுவின் ஆவி புகுந்து விட்டது. உண்மையிலே அப்படியா? அவரின் மகத்தான தியாகம் மனித குலத்திற்க்காக இருந்தாலும்,  அவர் சுமந்த சிலுவை பாரபாஸ் உடையது அல்லவா.  அவர் அளித்த உயிர் அல்லவா இது. அப்படிப்பட்ட எண்ணமே,  அவரை தேடி அலைய அவனை உந்தியது. பெரும் மலையை போல வியாபித்த அவரின் போதனை அவனை வாட்டியது.  அவரின் கருணை மழையில் நனைந்தான். யாரும் அறியாத இயேசுவை அவன் அறிய முயற்சிதான். கடைசி மூச்சு வரை திண்டாடினான். அறிய முடியாத கேள்வியின் பதில் அல்லவா அவர்.  

நானும் பாரபாஸ் தான்,  என் பாவத்தின் சிலுவையும் அவர் சுமந்து கொண்டிருப்பார்.  ஆனால் நான் கிறுக்குத்தனமாக சொல்வேன்,  ஆதாரத்தோடு நிரூபிப்பேன் அவர் கடவுளின் மகன் இல்லை என்று,  அவரும் அதையே விரும்பி இருப்பார். ஏன் என்றால் அவர் எளியவர். எளியவர்களோடு, நோயாளிகளோடு உறவாடியவர். பிறர் பாவத்தை மன்னிப்பவர். அவர் மனிதன் தான் எனக்கு, எப்படி வாழ வேண்டும் என்ற மகிமையை கற்றுக்கொடுத்தவர், வாழ்ந்து காட்டியவர். ஒருவேளை அவரே என்னிடம் நான் கடவுளின் மகன் என்று கண் முன் தோன்றி கூறினால் நான் சொல்வேன் இருந்து விட்டு போங்கள் கடவுளின் மகனாக! நான் உங்களை பூஜிப்பேன் முழுமையாக, அப்பழுக்கின்றி ஏன் என்றால் நீங்கள் போதித்தீர்கள் "ஒருவரை ஒருவர் நேசியுங்கள்" என்று.  கடைசியாக சொல்வேன் அவரிடம் நான் பாரபாஸ் கடைசி வரை உங்களை தேடிக்கொண்டிருப்பேன்.

Wednesday 22 January 2020

உடைந்த குடை (Shyness and Dignity)





உடைந்த குடை (Shyness and Dignity):

ஒரு மனிதன் இருந்தான், வாழ்ந்தான், பின் ஒருநாள் இறந்தான். 

ஒளி, இருட்டு என்போமோ?  இல்லை ஒளி, ஒளியின்மை என்போமா? ஏதோ ஒன்று இல்லாத நிலையில் இன்னொன்று பிறக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றை குறிக்கும் நிலையா?  எல்லா நிலையும் ஒரு செயலால் இன்னொரு நிலையை அடைகிறது என்று வைத்துக்கொள்வோம்.  முன்பிருந்த ஒன்று இல்லாமல் போயிச்சா?  இல்லை புதிதாக இன்னொன்று பிறந்ததா?  இங்கே மெய்நிலை எது?  இருந்த ஒன்று இல்லாமல் ஆனதா?  இல்லை புதிதாய் ஒன்று பிறந்ததா?  எவ்வித பிதற்றல் இல்லாமல் எதையும் நாம் உணர்ந்துகொள்வதிலே அவதானித்து கொள்கிறோம்?  இதாவது சரியா?.

தத்துவம் என்றால் தர்க்கங்கள் மட்டுமா?  தேற்றம் என்போமே?  அதன் மூலம் உருவாக்கப்படும் விதிகள் மற்றும் கோட்பாடுகளின் மெய்மை கொண்டு அறுதியாய் அகப்படும் இறுதி படிநிலையா?  எது எதுவாயினும் தர்க்கங்கள் மூலம் தத்துவம் முழுமை அடையுமா? சரி தத்துவத்தை தர்க்கங்கள் அடிப்படையில் சென்றடையும் அகதரிசனம் என்று கூறலாம் அல்லவா!.

எலியாஸ் சராசரி நார்வேஜிய மொழி ஆசிரியர் இல்லை. அதுவே போதுமானதாய் இருக்கிறது எங்கும் சஞ்சலப்பட! சலிப்பற்ற பதின்பருவ மாணவர்களின் முதிர்ச்சியற்ற எதிர்வினை அவன் பாடவேளையில் மனம் லயித்து,  பரவசம் பீறிட,  உள்ளக்குள் கிளர்ச்சியுடன் விவரிக்கும் இப்சனின் 'காட்டு வாத்து' எனும் நாடகத்தின் தன்மையை,  முடிச்சுகளை அவிழ்க்க?  இதைத்தான் இப்ஸன் ஒளித்து வைத்துள்ளார் இக்கூற்றுகள் வழியே என அவர்களை ஒப்புக்கொள்ள,  இதை ஒப்புக்கொள்ள என்பதை விட,  அறிய அல்லது,  புரிய இல்லை இல்லை,  உணர வைப்பதில் தோல்வி அடைய வைக்கிறது.

சரிதான், எதனாலோ இந்நார்வேஜிய வகுப்பில் அமர்ந்திருக்கும் இம்மாணவர்களின் எதையும் கற்றுக்கொள்ளவிரும்பா மனப்பான்மையா இவரின் அன்றைய கசப்புகளுக்கு காரணமாய் ஆகியிருக்கும். முப்பது பக்கங்கள் மேல் இப்சனின் 'காட்டு வாத்து' நாடகத்தின் மருத்துவர் ரெல்லிங் எனும் கதாபாத்திரம் மேல் ஏனோ அதீத ஈடுபாடு. இத்தனைக்கும் அவருக்கு தெரியும் அக்கதாபாத்திரத்தின் முக்கியம். அது எங்கே பேசுகிறது. நம் வாசிப்பை மிகக்கவனமாக, ஒவ்வொரு வரியையும் மிகக்கவனமாக மெதுவான மேலும் பிடிமானத்தை இன்னும் அழுத்தமானதாக தாக் ஸூல்ஸ்தாத் இறுக்கி பிடிக்கிறார். அயர்ச்சியை நாமும் உணர்வோம்,  ஏன் வெறுப்பை எலியாஸ் மேல் உமிழக்கூட செய்யலாம்.

நாவலின் ஆங்கில தலைப்பு 'Shyness and Dignity' கூச்சமும் கண்ணியமும். எலியாஸ் எங்கெல்லாம் கூச்சப்படுகிறான்,  ஜோஹான் எனும் ஆளுமை முன் மட்டுமே பெரும்பாலும், பின் ஏவா எனும் பேரழகி முன். அன்றையச்சூழலின் பாடத்திட்டங்கள், இளம் தலைமுறையின் நிலையாண்மை என பல காரணிகள் அவனை சமநிலையை குலையசெய்கிறது. எதையும் மேலாக மட்டுமே அறிந்த ஆசிரியர் மந்தையில் நுழைய விரும்பவில்லை. ஜோஹான் எனும் அற்புதமான தத்துவ அறிஞரின் நண்பன் அல்லவா அவன். சிலநேரம் அவன் நிழல் எனவும் அவனை எண்ணி சிலாகித்து இருக்கிறான். தான் எனும் அகநிலையை அகங்காரத்தை  ஜோஹான் முன் எங்கே உணர்கிறான். உண்மையிலே எலியாஸ் கண்ணியமானவன்,  ஈவா முன் அடிமையை போலவே பிற்பகுதி வருகிறான். அழகின் முன் மண்டியிடுகிறான், பெருமிதம் பொருக திரிகிறான். எங்குமே அத்துமீறவில்லை. அவளின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கிறான்.

ஜோஹான் ஈவா எங்கு ஒருவருக்கொருவர் வாழ்வின் அழியா பக்கங்களை நிரப்புகிறார்கள். ஜோஹான் எதார்த்தம் நிரம்பியவன். அறிந்திருந்தான் நிகழும் காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைக்க முற்பட்டான். கார்க்சின் மார்கிசியம் வழியே அவன் கண்டடைந்த தரிசனம் உழைப்பின் வர்க்கம் மேலே மெல்லிதாய் உருவாகியிருக்கும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. அதனை எளிதாய் முதாலாளித்துவம் என எண்ணவியலாது. அறிவியல் வளர்ச்சியின் அசுரவேகம்,  மனிதனை பொருளியல் நோக்கி உந்துகிறது. அதன் பகட்டு முகமாகவே விளம்பரம் நோக்கி திரும்புகிறான் இந்த தத்துவ அறிஞன்.

ஈவா பேரழகி,  பெண்ணிற்கு ஒரு குணம் உண்டு. தன்னை விட வலியவன் முன் தன்னை ஒப்படைப்பது. ஈவா அதைத்தான் செய்தாலோ! ஜோஹான் எனும் வசீகர இளைஞனிடம் அவளின் அத்தனை கர்வங்களையும் இழந்து நிற்கிறாள். அவனின் அன்பு ஒன்றுக்காக மட்டுமே எடுத்த முடிவா?  பெரிதாய் விளங்கவில்லை இவர்களின் உறவு.

மாறாய் எலியாஸ் ஆரம்பம் முதலே ஈவா மீது கிறக்கத்துடனே வருகிறான். அவளின் அழகு இவனை பொசுக்குகிறது, அவளில் மட்டுமே முழுதாக தன்னை இழக்கிறான். சிக்கலான இந்த உறவு, மேலும் சிக்கலாக ஆகிறது ஜோஹானின் புறப்பாட்டிற்கு பின்.

எலியாஸ் ஈவா மனமொத்த தம்பதிகளை போல இருபது வருடங்கள் மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்தாலும்,  சில இரவுகள் மாயமாய் உணர்வுகள் கொப்பளிக்க முயங்கினாலும்,  ஈவாவின் அகம் எலியாஸை எப் படிநிலையில் நிறுத்துகிறது. எலியாஸ் எவ்வளவு முயன்றும் அவள் கண்களை தாண்டி ஊடுருவ முடியவில்லை. இந்த அலைக்கழிப்பு எப்போதும் வெறிபிடித்த நாயினை போல அவனுள் கட்டுண்டு இருந்தாலும், இப்போதெல்லாம் அவனின் மனம் சீழ்பிடித்து விட்டது.

ஆணின் கண்களுக்கு அழகாய் தெரியும் ஒரு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும் தெரியுமா?  ஈவா தன் அழகை எண்ணி என்றும் மனம் குளிர மகிழ்ந்திருக்க மாட்டாள். சராசரி பெண்ணை போல  இச்சமூகம் எங்குமே அவளை நடமாட விட்டுவைக்கவில்லை. துரத்தும் பார்வையில் வினோதமான ஆண்களின் செய்கையால் அவள் நொடிந்து போய் இருப்பாள். இதுவும் கூட எலியாஸ் உடனான புதிய வாழ்க்கைக்குமான காரணியாக இருக்கலாம். 

ஈவா  நாற்பதை நெருங்கிய வேலையில் இயல்பானோதொரு பெண்ணாக மாறுகிறாள். ஆண்களின் ஊசி பார்வைக்கு  அவள் தேவையில்லை,  எங்குமே சுதந்திரமாய் திரியலாம், கடைத்தெருவில் பிறரின் உடைகளை, அணிகலன்களை பார்த்து வெதும்பலாம்.  அவளின் அழகின் பின் மறைந்து இருந்த அவளின் உண்மையான வெளிப்பதத்தை  எலியாஸ் ஆச்சரியமாகவே கண்டான்.

எலியாஸுக்கு காமிலா (ஜோஹான் ஈவாவின் மகள்) மேல் அதீத அன்பு எப்போதும் இருந்தது, அது ஈவாவின் மகள் எனும் காரணம் மட்டும் அல்ல, அது அவன் உயிர்த்தோழன் ஜோஹானின் மகள் என்பதால்.

இந்நாவலின் ஒருபகுதியில் எலியாஸ் குழப்பம் அடைகிறான்,  இச்சமூகம் எழுத்தாளர்களை எங்கே வைத்துள்ளது. அவர்களுக்கு எதாவது அந்தஸ்து இருக்கிறது,  அவர்கள் மேல் ஏதாச்சும் சம்பிரதாய மதிப்பு இருக்கிறதா?  இக்கேள்விக்கு இன்றைக்கும் பொருந்தும்.

அடைத்து வைத்திருக்கும் எல்லா ஆற்றாமைகளும் பொருமி,  ஒருசேர அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அணையில் உள்ள நீரின் இயக்கம் சமநிலையில் அசைவின்றி இருந்தாலும்,  ஏதோ ஒரு வடிகால் திறக்கும் போது எதையும் பிடிங்கி எரியும், அடித்து நொறுக்கும். இதிலா இப்படி ஒரு வேகம் இருந்தது என்பதை போல இருந்தது அவரின் செய்கை அந்த பின் மதிய வேலையில். நிகழ்ந்த எதுவும் மாறப்போவது இல்லை, உடைந்த குடை மீண்டும் உபயோகபடப்போவதில்லை. 

அந்த சாம்பல் நிற காலை அவருக்குள் ஏன் அவர்களுக்குள் நிகழ்த்த போகும் மாற்றங்களை அறியாமல் வழக்கமான சலிப்பான போலி அன்பான பரஸ்பர விடைபெறுதலோடு அவர் சென்றார்.
ஈவாவிற்கு  ஜோஹான் விட்டுச்சென்ற வாழ்க்கையில் எலியாஸ் நுழைந்தான் எனில்,  அங்கே இல்லாமைக்காக அவள் வருந்தும் தருணங்களில், எலியாஸின் வருகை அவளை எங்குமே மகிழ்விக்க வில்லையா.  பிறகு எதற்கு அவர்கள் இணைத்திருந்தார்கள்.  இந்த உண்மையில்லா,  பிடிப்பற்ற,  போலியான வாழ்க்கையை எதற்காக வாழ்கிறார்கள்.

தாக் ஸூல்ஸ்தாத் ஓரிடத்தில் சொல்கிறார்  மனதின்  போலி பிரமைகளை நீக்கி விட்டால் அங்கே மகிழ்ச்சிக்கு இடம் இருக்காது. உண்மைதான் நாம் மகிழ்ச்சியாக வாழ எத்தனை போலி பிரமைகளை கட்டமைத்து உள்ளோம், இருப்பினும் நாம் மகிழ அப்போலி பிரமைகளை இருக்க பிடித்து கொள்வோம்.

ஏன் என்றால் நாம் பிறந்தோம்,  வாழ்கிறோம்,  பின் ஒரு நாள் சாவோம்.


Thursday 16 January 2020

குற்றமும் தண்டனையும்: ஒன்று (நம் கையில் இருக்கும் கோடாரி)



சராசரியாக கடந்து போகும் குடிகாரர்களை நினைவில் வைத்துக்கொள்ள யார் விரும்புவார்கள்.  சர்த்தித்ததை  வாயின் ஓரத்தில் வடித்து, உடல் நாறும் உடலோடு அலைவர்களை வாழும் சமூகம் எந்நிலையில் ஒன்றி கவனிக்கிறது.  மாறாக வெறுத்து தள்ளும் மனப்போக்கில்,  இங்கே உனக்கு இடமில்லை என்று உந்தி தள்ளுவதை போல விரட்டப்படுகிறார்கள்.  குற்றமும் தண்டனையும் முதல் அத்தியாயம் குடிகாரர்கள் நிரம்பி இருக்கிறார்கள்.

  ரஸ்கோல்நிகாஃப் யார், அவன் இந்த சராசரி குடிகாரர்களுக்குள் என்ன செய்கிறான்.  வீதிகளில் அலைகிறான்,  மனம் குழம்பி தவிக்கிறான்.  பிரமை பிடித்தவன் போல திரிகிறான்.  குடியை வெறுக்கும் குடிகாரர்களே அதிகம்,  ஆனாலும் ஏன் குடிக்கிறார்கள்.  சோகம் மறக்க குடி, மகிழ்ச்சியின் உச்சம் குடி, வெறுப்பின் முனையில் குடி, மொத்தத்தில் குடியை மறக்கவே குடி.  ஆரம்பம் முதலே தோற்றவனாய் வருகிறான்.  சுயமாய் எடுத்த முடிவா 'அது'?  ஆம் 'அது'தான். மதுக்கடையில் எவரோ பேசியது கேட்டல்லவா?  செயலை சிந்தித்தவனும் இவனில்லை, மாறாக ஒரு சூழலின் முனையில் இவனும்,  மறுமுனையில் கிழவியும் அமர்ந்திருக்கிறார்கள்.

அது காலம் எனும் சங்கிலி ஒவ்வொரு சரடிலும் பலர் இழுக்க.முன்னும் பின்னும் நகர்ந்து, அதை நிகழவைக்க கிழவியின் சகோதரி தேவைப்படுகிறாள். ஆம் சந்தையில் அவனுக்கு 'அது' நிகழவேண்டிய சரியான தருணத்தின் குறிப்பை தருகிறாள். பரிதாபப்பட வேண்டிய ஒருத்தி,  அவளும் அழகுதான். புறம் அன்றி அகத்தின் வழி அழகை சுமப்பவள்.

குடிகாரன், இழிவானவன், கையாலாகாதவன், ஏமாற்றுக்காரன். இவனை எப்படி அழைக்க, மதுக்கடையில் ரஸ்கோல்நிகாஃப் முன் பெரும் பிரசங்கம் எதற்கு, தன்னை எதிலிருந்து விடுவிக்கும் என அதனை கருதினான். மாறாக எல்லாவற்றிலும் அவன் குணநலன்கள் எல்லாவற்றிலும் எஞ்சுவது, பெரிதாய் விஸ்தாரமாய் எழும்புவது பெரும் மலையாய் அவனை,  அவனின் பிரமாண்டமான அவன் உருவம் ஒத்த அழுக்கான சீழ்பிடித்த, அக்குள் நிறைத்து நீண்டு அழுக்கு பிடித்த மயிரு கொண்ட அவனே அல்லவா. அது அவனின் தாழ்வுணர்ச்சியோ.

ஏனோ, பெரும் அழகு கொண்ட சிங்காரி காத்ரீனா ஏன் இவன் வாழ்வில் நுழைந்தாள். எதன் மிச்சம், இவளின் கடந்தகாலம். காதலில் திளைத்தவள், எதிர்மாறாய் வெறுப்பை மட்டுமே சுமந்து இவனுடன் வாழ்ந்தாள். ரூபிள்களுக்காகவா பன்றி கறியை சமைத்து பரிமாறினாள். எத்தேவையின் பொருட்டு இவனோடு வாழ சம்மதித்தாள். அவளின் விதி அவளாலே சமைக்கப்பட்டது. இணையாய் சோனியாவின் உடையதும்.

ரஸ்கோல்நிகாஃப் என்பவன் அறிந்த ஒரே தூய ஆன்மாவாய் வருகிறாள். ஆம், அன்னையை,  துனியாவை விட அவனுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டாள். துனியாவின் திருமணம் அவனுக்கு ஒருவித நெருடலை கொடுக்கிறது. அன்னை எழுதிய கடிதத்தில் பல வரிகள் இதற்கு நியாயம் சேர்க்கிறது. திடமானவள், அறிவானவள், எதையும் சகிப்பவள் அண்ணனிற்காக எடுக்கும் பெரும்துயரின் தொடக்கமாகவே அவளின் திருமணத்தை கருதுகிறான்

அத்திருமணம் எதற்கு,  யாருக்கான தியாகம். தியாகத்தின் பாவத்தை அவனுக்கு கொடுக்க போகிறாள். இதுவும் பாவமல்லவா. அன்னையும் தங்கையும் நிம்மதியான வாழ்வில் நுழைய போகிறார்கள். அதனை அளிக்கும் வல்லமை இவனுக்கு இல்லை. உண்மையிலே இதுதான் நிம்மதியா, ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை,  அவன் தங்கையின் சகிப்பு அன்னையிடம் இருந்தே இவளுக்கும் கடந்திருக்கவேண்டும். எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்.

ஏன் சோனியா முக்கியமானவள்,  காத்ரீனாவின் பசி ஆற்றவா,  வேசி ஆனாள். இல்லை என்பதே சரி, பின் அவள் தந்தைக்காகவா. இதுவுமல்ல. பெரும் கருணை கொண்டவள்,  காத்ரீனா பெற்ற மூன்று குழந்தைகளின் பசி தீர்க்கவே அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். இல்லை காத்ரீனாவின் முதல் பெண் குழந்தை வேசி ஆகிருப்பாளோ! ஆம் பெரும் கருணை கொண்ட பேரன்னை அவள். அப்பாவத்தை அக்குழந்தை சுமந்திருக்கும். குடிப்பதற்கு சோனியாவிடம் ரூபிள் வாங்கிய அக்குடிக்கார தந்தை, குடிப்பதெல்லாம் சோனியாவிற்கு அவனால் நேர்ந்த துயருக்கா.

ரஸ்கோல்நிகாஃப் அடைந்திருக்கும் துன்பத்திற்கு,  அவனின் கொடும் கனவிற்கும் என்ன தொடர்பு. இரக்கமின்றி அடிவாங்கும் அந்த குதிரை, அச்சூழலில் அவனுள் எழுந்த விந்தை என்ன, எதை உணர்த்த அக்கனவு.

அங்கே எல்லாமுமாய் அவனே நிற்கிறான், எல்லாமும் அவனுள் இருக்கும் குணங்களே, ஆம் அவனின் இயல்புகள் அல்லவா அது. அவனை அழுத்தும் பெரும் காயங்களின் வடிவே அக்குதிரை. அவனிடம் பிறந்த அக்கொடிய எண்ணத்தின் உருவமே அக்குதிரை காரன்.  எங்கோ மிஞ்சி நிற்கும் கருணையின் மூலமே அச்சிறுவன். அவனை நல்வழிப்படுத்தும் அவன் கற்ற நூல்களின் போதனைகள் அவன் முன்னே தந்தையாய் அதிலிருந்து விலகவே அவனை அழைக்கிறது.

அக்கனவே மொத்தமும். எங்கோ குடிகாரனாகி,  ரஸ்கோல்நிகாஃபாகி,  துனியாவாய், அன்னையாய், காத்ரீனாவாய், கொலையான சகோதரிகளாக உணர்ந்த, உணர்வுகளை அனுபவித்த நான்.  சோனியாவை தரிசிக்க மட்டுமே விரும்புகிறேன்.

முதல் அத்தியாயம் என்னுள் கடத்தியது இதுவே,  பாவம் செய்ய தவிர்த்தாலும்,  எப்படியோ கோடாரியை தவிர்க்க முயலும் நான் அறிவதில்லை. கோடாரி எங்குமில்லை,  அது என்னுள்,  என் கைகளில் இருக்கிறது. நான் இல்லை இல்லை என்றாலும் கோடாரி இருக்கிறது. நிலை கண்ணாடியில் தெரிகிறது,  முகம் நிறைத்து கனிவோடு நிற்கும் என் கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட கோடாரியும் இருக்கிறது.

Monday 13 January 2020

மாடன் நடை 2


வியாழன் இரவு மாடன் மனதிற்குள் எத்துணை  எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். கடவுள் ஆயினும் மனிதர்கள் இடையே கோவில் கட்டி பாவம் அவரையும் ஏங்க வைத்து விட்டார்கள். மாடத்தி வர வர ஊருக்கு உண்மையாய் இல்லை, காவலுக்கும்  வருவதில்லை,ஆனால் படைக்கும் படையலில் மட்டும் பங்கு ஒழுங்காய் வேண்டுமாம் , போதாக்குறைக்கு மாடன் கோயில் சுவரை பகிர்ந்து வாழும் சரசு வீட்டு தொலைக்காட்சியின் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்கள் தானோ மனித வாழ்க்கை என நம்பிவிட்டாள். அதுவே கதி என்று கிடக்கிறாள்.  மாடனுக்கு அதெல்லாம் கவலை இல்லை.  நாளை வெள்ளி, அதுவும் ஒடுக்கத்தி வெள்ளி, சித்திரை மாத வெள்ளி.  அப்படியே ஆற்றங்கரை இறங்கி நடந்தால் சுடுகாடு மயான சுடலை இருப்பார்.  போய் நலம் விசாரித்தபடியும் ஆயிச்சு, கிடைத்தால் மூன்று செம்பு சாராயமும் ஆச்சு. சாப்பாடும் பிரமாதமாய் இருக்கும், எத்தனை ஆடுகளை கோழிகளை வெட்டுவார்களோ. ஊருக்குள் ஆடு கோழி வெட்ட கூடாதென சைவ சாமி ஆக்கிவிட்டார்கள் படுபாவிகள். ஊட்டு படைக்கிறேன் என்ற பேரில் பூஜை முடியும் முன்னே அவன் அவன் வீட்டுக்கு வாளி வாளியாய் போய் கடைசியில் வாழை இலை தானே மிச்சம்.  

மயான சுடலை, ஆள் நெடுநெடு உயரம் ஏழடி இருப்பார். முறுக்கு மீசையும், சுருட்டை முடிக்கற்றையும், வெண் மொச்சை பற்களும், ஒற்றை ஆளாய் இருப்பார்.  ஒத்தையிலே நிற்பதால் எடுத்ததுக்கெல்லாம் கோவம் வரும்.  கோவம் வந்தால் எதிரில் நிற்பவன் யாராய் இருப்பினும் தூக்கி எறிந்து விடுவார்.   அநாதை குழியில் இருந்து, வெள்ளாளன்,வண்ணான், ஆசாரி,மருத்துவர், சாலியன், கிருஷ்ணவகை என நீண்டுகொண்டே ஒரு அரை மைல் போகும் மொத்த சுடுகாடுக்கும் காவல்.  பின்னே அத்தனை சாதி பயலையும் அடக்கணுமே.  கோவம் இல்லாட்டி இயலுமா. 

இருட்டியாச்சு, மாடன் நடையில் அமர்ந்திருக்கும் தாணு  தலை முதல் கால் வரை குடித்திருக்கிறான்.  மாடனுக்கு ஒருவகையில் சந்தோசம் தான்,  இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஆள் கிறங்கி விடுவான்.  ஆனால்,  பாருங்கள் நேரம் ஆக ஆக தெளிவானவன் போல இருந்தான்,  மாடனுக்கு பொறுக்க முடியவில்லை. 

 "தாயோளி எந்திக்கான பாரு,  நல்ல குடிச்சுட்டு இதே வேலையால இருக்கு.  சங்குல சவுட்டணும் , சேய் என்ன சென்மமோ நம்ம வாயில வந்து விழுகான்". 

தூரத்தில் தாணுவின் மனைவி நடந்து வருவது போலிருந்தது,  அவளேதான்.  மாடனுக்கு உள்ளுக்குள் ஒரு சிரிப்பு.  இப்போது நடக்கும் கூத்து வழக்கமான ஒன்றுதான்.  இருப்பினும் இன்றைய காட்சி புதிதாய் இருக்கலாம்.  

"வோய் எழும்பு,  வேலைக்கு போனீரே. சம்பளம் எங்க? ". எழுந்து நிற்க இயலாத தாணு என்ன செய்வான்.மெதுவாய் தட்டு தடுமாறி எழுந்து நின்றான். அவன் மனைவி முகம் சிவந்து இருந்தது, 

"கூட வேல பாக்கானுல மணி அவங்க மாமியார் செத்துட்டா, அங்க போனேனா, சுடுக்காட்டுல, குளிச்சுட்டு, எந்திச்சு பாக்கேன், இங்க கிடக்கேன்".

"பாவி சண்டாளா, உன்ன கட்டி ஏன் வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு,  நாளைக்கு சீட்டு கட்டணும், வட்டிக்காரி வீட்டு முன்னாடி வந்து ஆடுவா, கரண்ட் பில்லு கட்டணும். தொண்டை குழி வரலா குடிச்சருக்க,  நா என்ன செய்வேன்" என கோவில் நடையிலே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். மாடத்திக்கு பொம்பளை அழுதாள் ஆகாது. "பாவி மனுஷா, இந்த பயல ஒரு காட்டு காட்டி விடுங்க, இந்த பிள்ளைய என்ன பாடு படுத்துகான்",  மாடனும் "குடிக்காதேன்னு சொன்னா கேப்பானா?, குடிகார பய" மனதிற்குள் சின்ன கிலி. அவனும் இன்றைக்கு சிறிது சாராயம் குடிக்கலாம் என எண்ணியிருந்தான்.

பெரும்பாடு பட்டு தாணுவை அவனது மனைவி கூட்டிச்சென்றாள். இன்னும் சில வீடுகளின் கதவுகள் மூடவில்லை,  காத்திருக்க வேண்டும் போலும். கோயில் பின்னால் யாரோ நிற்பது போல இருந்தது.மாடன் எட்டி பார்த்தார். சட்டைப்பையில் இருந்த பீடி எடுத்து சிறுவன் ஒருவன் பற்ற வைத்தான். யார் என பார்த்தால் தாணுவின் மகன். அடப்பாவி அப்பனை கண்டு கெட்டல்லவோ போகிறான்.

மாடன் பெருமூச்செடுத்து ஊதினார், கடும்காற்று பீடி அணைந்தது.  சிறுவன் விட்டானா?  தீப்பெட்டியில் அடுத்த குச்சி எடுத்து பற்றவைக்க போனான். கையில் இருந்த வேல்கம்பை ஓங்கி தரையில் ஊன்றி, இடுப்பில் கட்டியிருந்த கச்சை குலுங்க உடலை குலுக்கினார். அவ்விடம் அதிர்ந்து,  மணி சத்தம் கேட்கவே, கையில் இருந்தவற்றை கீழே போட்டு எடுத்தான் ஒரு ஓட்டம். மாடன் நமட்டு சிரிப்பு சிரித்தபடி வெளியே வந்தார்.

வழக்கம் போல முண்டனும் நாலுமுக்கு சந்தியில் காத்துக்கொண்டிருந்தார்.

"வாரும்,  சீக்கிரம் வந்துட்டீரே" என்றான் நக்கலுடன்.

"குமட்டுல குத்தினேன்,  கைலாசம்தான். வாடே வேகமா நட"

"இன்னைக்கு என்ன ஆளு கொதிக்கீரு,  என்ன சங்கதி"

"நேரமாயிட்டு, நட. பூஜை முடிஞ்சருக்கணும். அவர நம்ப முடியாது. மொத்தமா குடிச்சிருவாரு".

மாடன் வேகமாய் முன்னே நடக்க, அவரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல். முண்டனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.

ஆற்றுப்பாலம் இறங்கி ஆலமூட்டு பக்கம் திரும்பினார். பழையாற்றில் தண்ணீர் சலனமின்றி ஓடி கொண்டிருந்தது. தூரத்தில் மயானத்தில் பிணம் எறிவது இங்கேயே தெரிந்தது. அருகே செல்ல நெடுநெடு உயரம் உள்ள மயான சுடலை பிணம் எரியும் சவக்குழி அருகே நின்றிருந்தார்.

மாடன் அவர் அருகே செல்ல,  முண்டன் ஒதுங்கி நின்றுகொண்டார். 

மாடன்,  சுடலையை நோக்கி "சாமிக்கு நல்ல வேட்டையோ" என்றார்.

"வாறும்,  ஊர் காவல் தெய்வமே. சரியான நேரத்துக்கு வந்துடீயீரே"

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, சவக்குழியில் இருந்து அருவமான ஒன்று எழுந்து வந்தது. சுடலை அதை தன் கையில் இருந்த நீள் பிரம்பால் தட்டி தன் பக்கம் திருப்பினார். 

எதுவும் இல்லா நிறமற்ற அறுதிநிலை அது, சுருண்டு கிடக்கும் அதில் தொடக்கமும் இறுதியும் எங்கு நோக்கியும் ஒன்றாய் தோன்றும் விந்தை.

சுடலை சத்தமாய் சிரித்தபடி "விதி மனசுலாச்சா சின்ன பயலே" என்றார்.

அருவம் பேசியது "கண்டுட்டேன் எது உண்மையோ அத கண்டுட்டேன். தீச்சை கொடுக்கணும்".

அருகில் இருந்த மாடனும் முண்டனும் பேசிக்கொள்ளவில்லை. நடப்பவைக்கு சாட்சியாய் ஓரமாய் நின்று கொண்டிருந்தனர்.

"எத கண்ட".

"நிசம் என்னவோ அத, அழுற கண்ணீர்ல பொய் இருக்குமா. அத கண்டேனே,  எப்பொண்டாட்டி பிள்ளைகள அழ விட்டேனே. எம்பய குழில கங்கு போடும் போது தெவுங்கி தெவுங்கி அழுதானே. அத கண்டேனே. நிசம் என்னவோ இருக்கும் போது வேராவும் சாவும் போது வேராவும் ஆகுது"

"சரி ஆட்டம் முடிஞ்சி, ஆசை எதுவும் உண்டா. இரண்டு நாள் இங்க கறங்கலாம்"

"எது ஆசை,  புரிஞ்சி போச்சு. எதுவும் இல்லை. நிறைவு இருந்திருக்கணும். காசுக்கு அலைஞ்சேன். நேரம் இல்ல. எம்பிள்ளைகளோடு ரொம்ப நேரம் இருந்து. செத்துத்தான் வீட்டுல கிடந்தேன். கண்டுட்டேன் நிசத்த. போதும் தீச்சை வேணும்".

"சரி போ. எதுவும் இல்லாம,குறை இல்லாம. இந்த நிறைவோடு". கையில் இருந்த கம்பை அருவத்தில் தட்டி உந்தி மேலே எழுப்பி விட்டார். அருவம் கலைந்து எதுவுமின்றி மிச்சமின்றி இல்லாத ஒன்றில் கலந்தது.

சுடலை மாடன் அருகில் வந்தார். "என்ன ஊருக்காரரே. பாத்திலே இந்த பயக்கள. செத்தாதான் புரியுது. எதுவும் இல்லா புள்ளில என்ன ஆட்டம் ஆடிற்கோம்னு"

"சரிதான், நீரு செத்தவனுக்கும் நான் வாழறவனுக்கும் உள்ள வித்தியாசத்தை பாக்குறோம்".

"சரி,  வந்தது சன்னதி மாடத்துல இருக்கு. எடுத்துட்டு வாரும்" என்றார் சுடலை.

மாடன் முண்டன் பக்கமாய் திரும்ப,கையில் சாராய குப்பியோடு முண்டன் வர. மூவரும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர்.

Saturday 11 January 2020

கோம்பை





மட்டி குலையை கயிறில் மாட்டும் போதே  நாடாருக்கு எரிச்சல் கூடியது.  மட்டி பரவாயில்லை அடுத்து ஏத்தன் குலை. ஆள் கசண்டி, கஞ்சப்பிசினாரி. கருத்த  உழைத்த தேகம்.சிறிதாய் வளமாய் முன் பிறந்திருக்கும் தொப்பையின் மேலே தொப்புள் உள்மறைய கட்டியிருக்கும் சாரம். காலில் லூனார்ஸ்,  வாங்கி பலயுகம் ஆயிருக்க வேண்டும்.   தேய்ந்து தேய்ந்து மறுப்பக்கம் நோக்கினால், இப்பக்கம் மங்கலாய் காணலாம். வயதை அறிய விசாரணை தான் வேண்டும். சரியான சீரான பற்கள் வரிசை, நாடார்களுக்கு பொதுவாய் உழைப்பில் அபரிதமான ஈட்டு நம்பிக்கை. இதன் இணைக்காரணியோ இவர்க்கு கோபம் அதிகம், அசல் நாடாரை விட.

 வழக்கமாய் இங்குதான் அலைவான், இன்றென்ன ஆளையே காணும்.  மனதிற்குள் யோசித்தபடியே வெளியே ஓடு இறங்கி மிச்சம் நீண்டிருக்கும் பனையில் கட்டிய கயிறில் மட்டியை மாட்டவும் குழையின் அடியில் மெலிந்த இரு கை தாங்கி கொண்டது.  

"நாடாரே, கீழ தொங்குது.  தூக்கி பிடிச்சு மாட்டும்" என்றான் கோம்பை. 

நாடாருக்கு கோபம் பொங்கி, ஓங்கி படாரென்று அவன் முதுகில் அடித்தார்.  "பட்டிக்கு கொழுப்ப பாத்தியா,  கட்டழிஞ்சு போவோனே.  தூக்கி பிடில புலையாடி மவனே" என்றார். 

"நானும் குழையத்தான் வோய் சொன்னேன், அடிச்சிட்டீரே" என்றான் கண்கள் கலங்கியபடி. 

மொத்தமாய் எல்லா தொங்க விட்டவுடன்.  நாடார் பத்து ரூபாயை நீட்டினார், அவருக்கும் அவனுக்குமாய் டீ கடையை நோக்கி டூர் டூர் என்று வாயால் ஒலி எழுப்பி, அவன் மட்டுமே அறிந்த முன்னே நிற்கும் குதிரையை எழுப்பி அதன் மேல் ஏறி டீ கடைக்கு சென்றான். 

கோம்பை இதுவா பெயர், சூர்யபிரகாஷ் இதுதானே இட்ட பெயர். சாலியர் தெருவில் வீடு, அப்பா பள்ளிக்கூட வாத்தியார்.  கைக்குழந்தையில் என்ன குற்றம் கூற முடியும்,  மூன்று வயதை கடந்தவுடன் தான் சிறிது விளங்க ஆரம்பித்தது. இடது வாயின் ஓரம் வடியும் எச்சில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்த பற்கள்,  எப்போதும் முன்மடிந்த நாக்கு,  அங்கும் இங்கும் அலைக்கழிந்து நிற்காது ஓடும் கால்கள்.  சிலநேரம் அசையாது எதையோ உற்றுநோக்கும் பாவம். 

அப்பனுக்கோ காரணமா வேண்டும்,  இது போதாது.  மாலை வரை கையில் புத்தகம், பின்னிரவு வரை மதுகுப்பி.  அம்மைக்கு வாய் உண்டு, உண்ண மட்டுமே.  இவன் பிறந்து என்ன வருத்தமோ, ஆள் மெலிந்து விட்டாள்.  அப்பனின் அங்கலாய்ப்பு அடுத்த குழந்தையின் அழுகுரல் அவ்வீட்டில் இவனை அடுத்து ஒலிக்கவில்லை. 

வினோதம் என்னவென்றால் இத்தெருவில் இரண்டு வீட்டுக்கு ஒருவர் சூர்யபிரகாஷ் போல,  யார் வீட்டு இசக்கியின் சாபமோ. எது எப்படியோ புதிதானவரின் கண்களில் நுழையும் இத்தெருவின் காட்சி கொஞ்சம் மனதை சங்கடப்பட வைக்கும்.

குடியின் வெறியோ, மகனின் நிலை கண்ட கையறு நிலையோ, எதுவும் செய்யவியலா இயலாமையோ. எதை தீர்க்க அப்பாவின் கைகளின் உள்காய்ப்புக்கு இவன் வேண்டும். விவரம் அறியும் வயதில் பாதி நாட்களை அவன் சங்கிலியில் கழித்திருந்தான். சங்கிலிக்கு பெரிதொன்றும் தேவையில்லை. பேச்சிலோ செய்கையிலோ காணவியலா காரியம், சட்டென ஆள் எங்கோ மாயமாகும் கண்ணன். பின் சுடுகாட்டிலோ, தோப்பிலோ பிடித்து அடிமாடாய் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். இதுதான் சங்கிலியின் சேதி. சிறுவயதில் சூரியனை பெரிய மின்விளக்கு என்றே அவன் அறிந்திருந்தான். நிலவு மென்மையாய் ஒளி பரப்பும் பெரிய இரவு விளக்கு அவ்வளவே. 

எந்த போதி மரத்தின் அடியில் உட்காந்தோரோ, இல்லை எந்த சித்தார்த்தனை கண்டாரோ அவனை அடிப்பதை கைவிட்டார். மாறாய் என்றும் குடியை விடவில்லை. ஐந்து வயதில் காலில் மாட்டிய சங்கிலி அவன் பத்தொன்பது வயதில் தான் திறந்தது. 

சில பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,  கட்டியவனையா இல்லை பெத்தவனையா எவனுக்காக வருத்தப்பட, கண்ணீர் சிந்த. மெலிந்த தேகம் மேலும் சிறுக்கும். நேரத்திற்கு பொங்க,  துணி துவைக்க, வீடு பெருக்க பாதி நேரம் அதிலே கழிந்து விடும். இவனின் பீயும் மூத்திரமும் இப்போதெல்லாம் ஒழுங்காய் அவனே வெளியேற்றி விடுகிறான். சிலநேரம் பெத்தவளின் கண் முன்னே அம்மணமாய் ஓடுவான். அம்மைக்கு எத்தனை வயதிலும் மகன் மகன் மட்டுமே. 

அவிழ்ந்த சங்கிலியின் பதினான்கு வருட இறுக்கம், அதன்பின் இரவில் மட்டுமே வீட்டில் தஞ்சம் அடைவான். இருமி இருமியே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மைக்கு தினம் இரவு அவன் வீட்டிற்கு வந்தாலே ஆசுவாசம் தான். அப்பனுக்கு குடலிறங்கி குடி குறைந்து, கோவிலும் கோவிலும் என நாட்கள் நீள்கிறது. வாத்தியார் சோலி மாதம் பென்சன் கிடைக்கிறது, வீடும் சொந்தம். வாழ்வதற்கு தகும் இச்சிறிய குடும்பத்திற்கு.


கடைத்தெருவுக்கு பத்தொன்பது வயது முதல் வருகிறான். இப்போது நாற்பதை நெருங்கி இருக்கும். இன்றைக்கும் நிக்கர், மேலே வெளிறிய ஒரு சட்டையை அணிந்திருப்பான். மாதம் ஒருமுறை அப்பா ஒழுங்காய் முடி வெட்டி விடுகிறார், கூடவே சவரமும். இன்றும் வாய் ஒழுகுகிறது, ஒழுங்காய் அவனே துடைக்க பழகி கொண்டான். காலில் செருப்பு அணிவதில்லை. எப்படியோ நகங்களை சீராய் வெட்டி கொள்வான். கால்களின் இடைவெளியை சீராய் வைப்பதில் என்ன கஷ்டமோ, நிற்கும் போது வலது கால் முன்னே வளைந்துபின்னி இடது பின்னே நிற்கும். நடப்பதில் குறையில்லை, என்ன குதிகால் முதலில் நிலம் தொடும்.

கடைத்தெரு வந்த புதிதில், இதோ இதே நாடார் கடையில் வாழை பழம் வேண்டும் என அடம்பிடிக்க,  நாடார் தலையில் தட்டி காசு கேட்டுள்ளார். "பழம், பழம் " என கூறியதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான். கோவக்கார நாடார் நாக்கை மடித்து "தள்ளி போல எரப்பாளி, பட்டி. தொழில் நேரத்துல" என கத்த,  உடனே பக்கத்தில் இருந்த வெஞ்சன சாமான் கடையில் கை நீட்டி காசு கேட்டுள்ளான், அவர் பயந்த சுபாவம். வேண்டா வெறுப்பாய்   முதலாளி காசை கொடுக்க,  நாடார் பழத்தை நீட்டியுள்ளார்.

அன்றைய நாள் வெஞ்சன சாமான் கடையில் அமோக வியாபாரம். ஜோசியம், கைராசியில் நம்பிக்கை கொண்ட முதலாளி அடுத்த நாளும் அவன் கையில் காசை கொடுக்க அவன் வாங்கவில்லை. மாறாய் பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் காசு வாங்கி நாடார் கடையில் பழம் வாங்கி உள்ளான். அன்றைக்கு என ஊரில் பலர் சைக்கிள் பஞ்சர் போல,  ஓரளவுக்கு லாபமே. 

அப்போதில் இருந்தே இவனாய் கை நீட்டி காசு கேட்டால் யாரும் மறுப்பதில்லை, பதிலாய் எல்லாருக்கும் அதில் விருப்பமே. இருப்பினும் இவன் என்றைக்கும் வாங்குவதில்லை,  சிலநேரம் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காசு யாரிடமும் வாங்க மாட்டான்.

ஒரு நாள், நாடார் கடைத்தெரு வியாபாரிகள் கூட்டத்தில் "ஆளு கோம்பையன் மாரி இருந்தாலும், கை ராசி காரனாக்கும். உத்தேசிக்கணும் இவன மாரி ஒருத்தன் மாட்ட. கிடக்கட்டும் எங்கனியும். ஆளுக்கு மாசம் கொஞ்ச காசு கொடுப்போம். முதலயா கொடுக்க போறோம்." என்று சொல்ல. நாடாரின் பேச்சுக்கு மறுபேச்சு இன்றி எல்லாரும் ஒத்துக்கொள்ள கோம்பைக்கும் ஒரு வேலை கிடைத்தாயிச்சு. பேரும் புதிதாய் கோம்பை என சூட்டியாச்சு.

பின்னே அவன் செய்யும் வேலைக்கும் கூலிக்கும் மரமேறி  பலா பறித்தவனுக்கு கொட்டை கொடுத்தது போல.  லாபம் தானே அவர்களுக்கு,  கோம்பைக்கு பத்து காசும் ,ஒரு  பாளையம்கோட்டான் பழமும் ஒன்றுதான். கொடுப்பதை வீட்டில் கொடுத்து விடுவான். கிடைப்பதை உண்பான், சுகபோகி எதிலும் நிறைவை கண்டான். இதுதானே எங்கே பலர்க்கும் இல்லாதது.

நாடார் கடையின் ஓடு சாய்விற்கு மேலே விளம்பர பலகை ஒன்றை வைக்க விரும்பினார். பன்னாட்டு குளிர்பான நிறுவனம் இலவசமாய் கொடுத்த பெயர் தகர பெயர் பலகையை. ஆமாம் பெரிதாய் அவர்களின் முன்மொழிவும், கீழே சிறிதாய் நாடாரின் கடை பெயரும் இருந்தது அவ்வளவே. வந்தவர்கள் அரை மணிநேரத்திற்குள் மேலே கட்டி அடுத்த கடைக்கு விரைந்தனர். கடைத்தெருவில் உள்ளோரின் கண்கள் அந்த விளம்பர பலகையை நின்று ஒருநிமிடம் கவனிப்பதில் என்ன பெருமையோ, உள்ளூற மகிழ்ச்சிதான். நாடார் தினம் ஒருமுறை மேலே விளம்பர பலகையை பார்த்துக்கொள்வார். கோம்பைக்கு என்னவோ அந்த பலகையில் வெறுப்பு. வழக்கமாய் கடையின் ஓட்டு சாய்வின் அந்தப்பக்கம் எழும்பி நிற்கும் புளியமரத்தின் பின்நிழலை அதன் வழியே நோக்குவதில் இவனுக்கு விருப்பம். அக்காட்சியை மறைத்து விடுகிறது.

வருடம் முழுவதற்கும் விட்டு விட்டு மழை பொழியும் ஊர். மழையோடு ஊழிக்காற்றும் இணைந்து கொண்டு பேயாட்டம் போட்டது. கடை திறந்தாலும், சாமான் வாங்க ஆள் வருவதில்லை. பாதி கடை பூட்டி இருந்தது. கடைத்தெரு சாலை எங்கும் அங்கங்கே மழை நீர் கட்டி, ஆண்டவன் அதான் நாஞ்சிலை ஆண்டவன் நெஞ்சிலே செருகும் பட்டயமாய் கிடந்தது. 

அந்நாட்களிலும் கடைத்தெருவுக்கு கோம்பை சரியாய் வருவதுண்டு. எந்த வருகைப்பேட்டில் ஒப்பிட வேண்டுமோ. நாடார் கடையை பண்டிகை நாள், வெயில், மழை என  எப்போதும் பின்னிரவில் பூட்டி காலை விடியும் முன்னே திறந்திடுவார். எள்ளு போல இடம் என்று சொல்லி சொல்லியே மூன்று நான்கு ஏக்கர் வாங்கி விட்டார். காடும் நிலமும் வீடும் இருந்தும் இரண்டில் ஒரு தீபாவளிக்கு தான் சட்டை வேஷ்டி.

அன்றைய நாள் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்தபடியே இருந்தது. கடைத்தெருவில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாடார் கடையின் மேலே மாட்டியிருந்த பலகையின் ஒருபக்கம் கயிறு அறுந்து,  காற்றின் வேகத்தில் அதன் போக்கிலே இழுத்தபடி ஆடிக்கொண்டிருந்தது. 

நாடார் கடையில் இருந்த நீண்ட சவுக்கு கம்பின் துணைகொண்டு அவிழ்ந்த கயிறின் ஒருபக்கத்தில் கம்பை அடைகொடுத்து வைத்தார். சொல்லிவைத்தார் போல கோம்பையும் வந்து சேர்ந்தான்.

"லேய், மேலே மெல்ல ஏறி. அந்த கயிறை இறுக்கி கட்டு" என்று அவனை மேலே ஏற்றி விட்டார். நெடுநாள் மழை ஓட்டின் மேலே பாசி பிடித்து இருந்தது. கவனமாய் கால்களை அதன் மேல் வைக்க, நாடார் அவனை கவனித்தபடி இருந்தார். 

கயிறை இறுக்க அடைகொடுத்த கம்பை நீக்கி,  பலகையை வசமாய் தொடையில் வைத்துக்கொண்டான். நாடாருக்கு பயம் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று. "லேய்,  பிள்ளே பதுக்க செய்யணும். கவனம் " என்று கத்தியபடியே நின்றார்.

சட்டென்று வீறு காற்று,  கடையின் பின்னிருக்கும் புளியமரத்தின் கொப்பெல்லாம் ஆயிரம்கை விரித்து ஆடியது. மாட்டிய எல்லா கயிறும் அவிழ்ந்து,  அவனின் கை நவிழ,  தொடையில் இருந்த ஒருமுனையின் கூர் ஆழ பதிந்து, இரத்தம் சொட்ட.கோம்பை வலியால் துடித்தான். நாடார் அவனை மெதுவாய் பிடித்து கீழிறக்கி,  கடையில் இருந்த துணியை புண்ணில் சுற்றிகட்டி அவனை இழுத்துக்கொண்டு, பக்கம் இருந்த ஆசுபத்திரி அழைத்து சென்றார். கோம்பையின் கண்ணில் நீர் வழிந்தபடியே இருந்தது. புண்ணில் மருந்து வைத்து, மாத்திரைகளையும் வாங்கி  வீட்டிற்கு கொண்டு விட்டார். நாடார் கோம்பையின் வீட்டிற்கு வருவது அதுவே முதல்முறை. 

பெரிய வீடு, சுண்ணாம்பு கண்டு பலவருடம் ஆயிருக்க வேண்டும். "ஆள் உண்டா" பலமுறை அழைத்து உள்ளே நுழைந்தார்,  நீண்ட வீடு,  வரிசையாய் அறைகள்,  எல்லாம் தூசும் சிலந்தி வலையும் படிந்து. மெலிந்த கூன்கிழவி சமையல் அறையில் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாள். நாடார் அவளை அழைத்தாள்,  கோம்பை அரைமயக்கத்தில் இருந்தான். 

"பிள்ளைக்கு அடிபட்டுட்டு,  ஆசுபத்திரி கூட்டிட்டு போனோம்.  இன்னாருக்கு மருந்து" என கையில் இருந்த மருந்தை அம்மையிடம் நீட்டினார்.

எதுவும் பதில் கூறாது வாங்கிகொண்டாள். ஏதோ ஒரு அறையிலிருந்து வெளிவந்த அப்பனோ எதுவும் கேட்காது, அவர்களின் மீது பார்வையை சிலநொடிகள் வீசி இருமியபடியே அவர் அறைக்குள் நுழைந்தார்.

அந்த வீட்டில் இருந்து வெளிவந்த நாடார், ஏதோ பெருத்த கனத்தை வாங்கிதான் வந்தார். கோம்பையின் நினைவு அடுத்த நாளும் நாடாருக்கு இருந்தது. வியாபார சூட்டில் நாளை செல்லலாம் என நினைத்து கொண்டார்.

நேரம் விடிந்து, கடையில் தெரிந்தவனை நிறுத்தி, கோம்பையின் வீட்டிற்கு விறுவிறுவென மிதித்து சைக்கிளில் சென்றார். வீடு திறந்து கிடந்தது. அழைத்தும் யாரும் வரவில்லை. மெதுவாய் உள்நுழைந்தார்,  ஏதோ அறையில் துணி அலசும் சத்தம் கேட்டது. கோம்பையை தூங்க வைத்த அதே அறைக்கு சென்றார். 

கோம்பை படுத்திருந்தான் புலம்பியபடியே,  அருகே உண்டும் சிந்தியும் கஞ்சி தட்டம் கிடந்தது. மெதுவாய் கையை பிடித்தான்,  அனலாய் கொதித்து கொண்டிருந்தது உடல். அம்மையை அழைத்தார் அவள் உடல் நடுங்கியபடி "காய்ச்சல் அடிக்கா" என்றாள், நீர் ஒழிகிய கண்களோடு.  அவள் ஏதோ புலம்பினாள், நாடாருக்கு விளங்கவில்லை.

எதை நினைத்தாரோ,  அவனை இறுக்கி பிடித்து தோளில் தூக்கி வந்த சைக்கிளை விட்டு ஆசுபத்திரிக்கு நடந்தார். வைத்தியம் முடிந்து,  அவர்க்கு ஏதோ வீட்டில் விட மனம் எழவில்லை. 

கடையின் உள்ளேயே அவர் மதியம் உறங்க சிறிது இடம் உண்டு, அங்கேயே போர்வை விரித்து அவனை கிடத்தி கவனித்து கொண்டார். இரண்டு நாள் இருக்கும், கோம்பை விழிப்பான், உண்பான் பின் உறங்குவான். 

மழை விட்டு சூரியனின் மென்மஞ்சள் ஒளி வீசி கொண்டிருந்தது. விற்று தீர்ந்த ஏத்தன் குலையை நீக்கி புதிதாய் கட்டிய கயிறில் தொங்கவிட குலையை தூக்கவும்,  மெலிந்த கை குழையின் அடிதாங்கி கொண்டது. 

"நாடாரே, குலையை தூக்கி கட்டும்" என்றான் கோம்பை.

"எரப்பாளி,  தூக்கி பிடில. இரண்டு மூணு நாளாயிட்டு பிள்ளைய இப்டி பாத்து. தூக்கி பிடிமோ"  என்றார்.

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...