Wednesday 31 July 2019

இசக்கி









"உண்மையாவா சொல்லுக, அவளுக்கு பிள்ளை இருக்கா, பொய் சொல்லாத டே" என்றார் எழுபதுக்கு மேல் வயதுடைய மாடசாமி.

"நா எதுக்குவே பொய் சொல்லணும்" பதிலுக்கு மல்லுக்கட்டினார் அதே வயதுடைய சுந்தரம்.

"ஆளு பாக்க நல்ல கிளிப்பிள்ளையாட்டு இருக்கா அதான் கேட்டேன்" சந்தேகத்துடன் பதில் கூறினார் மாடசாமி.

யார் அவள்? அவளா புதிதாய் இந்த தெருவுக்கு தாமசம் ஆயிர்க்கும்  கடுக்கரை காரிதான். மொத்தமே இருபது வீடு கொண்ட நீண்ட தெரு. தெருமுக்கில் சடை விரித்து, ஆங்காரமாய் இசக்கி ஒருத்தி வருடம் ஒருமுறை கொடை  கேட்டு பாவம்  கையேந்தி நிற்கிறாள், என்னென்னமோ மாறிவிட்டது. இவளுக்கு கொடை ஒரு கேடா! இதுதான் பெரும்பால் தெருவாசிகளின் எண்ணம். ஆனால் அடிமனதில் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் அவளின் பகைத்தீ எங்கே நம் வீட்டில் தொற்றி விடுமோ என்ற அச்சம் ஒழுங்காய் கொடை கழிக்கிறது. இசக்கிக்கும் கடுக்கரை காரிக்கும் என்ன சம்பந்தம், இந்த இசக்கியும் கடுக்கரை காரிதானம்.

நெடுநெடு உயரம், எடுப்பான தேகம், கரும்கூந்தல் இடை தாண்டியும் தொங்குகிறது, கோயில் பிரகாரங்களில் செதுக்கிருக்கும் ரதியின் முகம் அவளுக்கு, வெட்டிய பிறையாய் நெற்றி, சிறிய கூரிய மூக்கு, இவை கூட மறந்து போகும், மறக்காதது அவள் கண்கள். ஆம்,  ஏதோ ரகசியத்தை ஒளித்து வைத்துக்கொண்டு,  தெரிந்து கொள்ள வருபோர்க்கு அதை மறைக்க பாவிப்பது போலிருக்கும். நூல் சேலையில் தான் அதிகம் அவள் தரிசனம். புதிய தெருவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிற்க்கும், அதற்குள் எல்லா வீடுகளிலும் அவள் புராணம் தான். ஐந்து பெற்றவனுக்கும், பேரன் பேத்தி எடுத்தவனுக்கும், பதின்பருவ சிறுவர்க்கும் அவள் பற்றிய பேச்சுக்கள், விவரணைகள் பெரும் கிளுகிளுப்பு.

பின் என்ன, இது போதாதா பெண்களுக்கு, வசைகளும் புறணி பேச்சுகளும் இவள் பற்றியே அதிகமும் குழாயடிகளில், வீட்டு வராண்டாக்களில் வளமாய் வலம் வந்தது. அவள் முகத்திற்கு நேராய் பேச எவர்க்கும் திராணி இல்லை. அவள் காதிற்கு வராமலா போயிருக்கும்,  என்ன பெண்கள் இவர்கள், தெருவிற்கு வந்த புதிதில் சஜமாய் பழகியவர்கள்தானே!!, அப்புறமென்ன அவள் கட்டி கொண்டு வந்திருக்கும் ஆணிற்கு  அவளை விட சிறிய வயது  என்பதாலோ,  இல்லையேல் இவன் இரண்டாவது வந்தவன்தானே என்ற இளக்கறாமோ, எல்லா கண்ணகிகளுக்கும் இந்த மாதவி மேல் கோபம்.

இவள் குழந்தைக்கு இரண்டில் இருந்து மூன்று வயது இருக்கும், மூத்தவன் வாரிசு. அவன் எங்கு போனான்? எங்கோ போனான், தெருவிற்கு ஏன் இந்த ஆராய்ச்சி பட்டப்படிப்பு எல்லாம் இவள் மீது மட்டும் தனியாக, இவள் மற்ற பெண்களை போல் இல்லையே, அது மட்டும் தான் காரணமா!

முதலில் கட்டியவன் விபத்தில் இறந்து விட்டான். அப்போது இவளுக்கு இருபது வயது கூட ஆகிருக்காது, இளம்வயது, கையில் நான்கு மாத குழந்தை வேறு,  கூடிய வரை வீட்டில் இருந்தால், எத்தனை நாள் வீட்டிலே இருப்பது, இவளுக்கு அடுத்தும் வரிசையாய் நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஏழை அப்பா. வறுமை சாப்பாட்டுக்கு மட்டும் தான், குழந்தை குட்டிகளுக்கு இல்லை, அதற்கு மாத்திரம்  செழிப்பான காலம் அது, தாலியறுத்தவள் வீட்டில் வேறு தாலி ஏறுவது தான் எளிதா!

சொல்பேச்சும் ஏச்சும் கேட்கும் முன்னே தனியாய் வீடு எடுக்க துணிந்தாள், துணிந்தாள் என்பதை விட வேறு வழியில்லை அவளுக்கு.  துணைக்கு தாயை பெற்றவளும்  இருந்தாள். கால் வயிறு கஞ்சிக்கும் காசு வேண்டுமே, அருகில் இருந்த ஊரில் சந்தைதெருவில் பெரிய பலசரக்கு கடையில் வேலை, தேவைக்கான சம்பளம், குழந்தையை ஆச்சி கவனித்து கொண்டாள்.. யாரும் கவனிக்கவில்லை இவர்களை, தாங்களே ஓடிக்கொண்டிருந்தார்கள், யாரும் இடைஞ்சலாயும்  இல்லை.

 இவனை, ஆம் இவளை இரண்டாவது கட்டியவன், கட்டியவனோ இழுத்து கொண்டு வந்தவனோ, ஆள்  மாம்பழ நிறத்தில், அடர்த்தியாய் தாடியுடன், திடகாத்திரமாய்தான் இருந்தான். அவளுக்கு எல்லாவிதத்திலும் சரியான பொருத்தம். இதுதான் தெருக்கே பொறுக்கவில்லை.  ஒருவருடமாய் இந்த பழக்கம், இப்போது இந்த தெருவில் குடியேறி இருக்கிறார்கள்.     
  
என்ன பெரிய வயது ஆகிவிட்டது எனக்கு , இருபது கடந்திருந்தது, கணவன் இறந்து வருடம் ஆயாச்சு, அவனுக்காக நான் வருந்தினேனா. இல்லை,  எனக்கு அவனை  சுத்தமாக பிடிக்காது. வயதில் பத்து பதினைந்து வயது மூத்தவன், பெரும்குடிகாரன், சொத்து உண்டு.  ஆம்பளையா அவன், திருமணம் முடிந்த அன்றைக்கே அவன் வக்கிர புத்தியை காட்டியவன் ஆச்சே, அவன் அத்தனை வருட வெறியை என் மேல் எறிந்தான். தீப்படுக்கை.  ஒவ்வொரு இரவும், அவனின் மூச்சு எனக்கு வாடை , அவன் தேவைக்கு நான், காலை பணிவிடை செய்ய, இரவு உடல் தேவைக்கு, எனக்கான ஆசைகளை என்றைக்காவது கேட்டிருக்கிறானா. இன்றும் அவனை நினைத்து வருத்தப்பட  வேண்டிருக்கிறதா! அவன் இறந்த அன்றே பெரும்பீடை ஒழிந்தது என்றே தோன்றியது. அவன் இறந்த செய்தி கேட்டு வந்த கண்ணீர் கவலையிலா? , மகிழ்ச்சியிலா.

அவன் இறக்கும் போது கையில் நான்கு மாத குழந்தை எங்கு போவேன். அப்பனும் சரியில்லை, அம்மைக்கு வாயே இல்லை. நான் வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் இறங்கும் போதும் வாய் பொத்தி கண்ணீர் முட்டி நின்றாலே ஒழிய ஒரு வார்த்தை பேசினாளா. ஆச்சி இறங்கி வந்து விட்டால் என்னோடு. என்னிலை கண்டா, இல்லை என்னை கண்டா,  மூக்கன் செட்டியார் வீடுக்  கொடுத்தார். காரணம்  தெரியவில்லை, வாரம் ஒருமுறை வீட்டிற்கு வர ஆரம்பித்தார், ஆச்சியும் பாவம் என்ன செய்ய! , கையில் ஒரு ருபாய் இல்லை, அப்பாவின் பால்ய சிநேகிதர் தான்,  என் மேல் இரக்கமா!.

காசு கொடுக்க ஆரம்பித்தார், எனக்கும் சந்தைதெருவில் அவர் கடையிலே வேலை போட்டு கொடுத்தார். எனக்கு தெரியும் அவரின் பார்வையின் வித்தியாசம். அவரின் மகளை பார்ப்பதற்கும், அதே வயதுடைய என்னை பார்ப்பதற்கும். வாழ வேண்டுமே. யாரும் இல்லா நேரம், கடையில் அதை எடு, இதை எடு என என்னை குனிந்து நிமிர வேலை செய்ய வைத்து எதைப்  பார்க்கிறாரோ. பார்க்கட்டும் என்று விட்டு விட்டேன். அதில் என்ன சுகமோ அவர்க்கு, எனக்கு வேலை வேண்டுமே.

முகத்திற்கு பவுடரும் , கண்ணுக்கு மையும்  பூசி  கொண்டேன் நெடுநாட்களுக்கு பிறகு. வேலு, நான் என் மனதிற்குள் ஆணுக்கு கொடுத்த வரையறையில் சரியாய் பொருந்தியவன் அவனே, சந்தைதெருவில் ஆட்டோ வைத்திருந்தான், எனக்கு தெரியும் அவன் என்னை கவனிக்கிறான், யார் தான் கவனிக்கவில்லை, முகம் தவிர அத்தனையும் கழுகை போல் கொத்தி தின்பதை போன்ற எத்தனை ஆயிரம் பார்வைகளை கடந்திருப்பேன். அதுபோலன்றி அவனின் பார்வை எனைக்  காந்தம் போல் ஈர்த்தது, நானும் அவனைக்  கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் என் முன்னே நின்றான், என் கண்களை நேராய் பார்த்து, கடந்த காலம் எல்லாம் அறிந்தவனாய் ஒப்பித்தான், இது விதி என்றான். இதுவே தொடராது மாறும், நாம் மாற்றுவோம் என்றான். கிழட்டு பார்வையில் மாட்டி சிக்கி கொண்டிருந்த எனக்கு ஆசுவாசமாய் இருந்தது அவன் பேச்சு. நம்பினேன், செட்டியாரிடமே கூறினேன், அவரும் தவறில்லை நீயும் இளம்வயதுக்காரி உன் வாழ்க்கையை நீதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

ஆச்சிக்கும் இதில் பெரிதாய் வருத்தமில்லை, இரவில் குழந்தை உறங்கியதும் தனியாய் நான் படும் வேதனைகளை அவஸ்தைகளை அனுதினமும் அவள் கவனிக்கிறாளே. அவளும் ஒத்துக்கொண்டாள், திருச்செந்தூர் சென்று திருமணம் எளிதாய் முடித்து கொண்டோம்.

ஒவ்வொரு இரவும் நான் ஏங்கிய பழைய நாட்களுக்கும் சேர்த்து பழி தீர்த்து கொண்டேன். பிள்ளையும் வளர்ந்தது. மூன்று முறை கருக்கலைப்பு செய்ய சொன்னான். ஒரு பிள்ளையே போதும் என்றான், அதை தன் பிள்ளையாய் அள்ளி எடுத்து கொஞ்சினான். எனக்கே வியப்பு. இவ்வளவு நல்லவனா என்று.

நாட்கள் செல்ல செல்ல கழுதை தேய்ந்த கட்டெறும்பாய் என் மேல் இருந்த ஆசை அவனுக்கு முடிந்து விட்டதோ, ஒழுங்காய் பேசுவதில்லை. குழந்தையிடம் மட்டும் அப்பாவை போல் ஆனான். என்னிடம் தான் என்ன பிரச்சனையோ,   கூடாத பழக்கம் வேறு சேர்ந்து கொண்டது. கஞ்சா வாங்க என்னிடமே பணம் கேட்பான், ஆட்டோ ஒழுங்காய் ஓட்டுவதில்லை, நான் சம்பாதிக்கும் பணம் மட்டுமே, இடையில் ஆச்சியும் இறந்து விட்டாள். அதற்கும் என்னை பெற்ற இரண்டு புண்ணியவான்களும் வரவில்லை. குழந்தைக்கும் மூன்று வயது மேல் ஆகிவிட்டது, இருக்கும் இடம் சரி இல்லையென்று புதிதாய் இந்த தெருவிற்கு வந்திருக்கிறோம்.

இந்த தெருவில் மட்டும் என்ன ஆண்கள் வேறு உலகத்தில் இருந்து குடியேறியவர்களா! அதே கழுகு பார்வைதான், ஆண்களில் கிழவனுக்கும் சிறுவனுக்கும் வித்தியாசமில்லை. குழந்தையை தூக்குகிறேன் என்று இடுப்பில் கை வைத்த சிறுவனை முறைத்தேன், பிறகு அவன் மீண்டும் வரவில்லை. இசக்கி கோயில் பூசாரியோ நடை சாத்தி நேராய் இங்குதான் வருகிறார். கடவுளுக்கு அடுத்து என்னிடம் எதை தேடுகிறாரோ.

நாள் போக தெரு மக்கள் அவளை வேசி போல் பேச ஆரம்பித்து விட்டனர். இரண்டாவது கட்டியவன் ஆட்டோவில்,  நடுஇரவில் கூட இவள் வீட்டிற்கு ஆட்கள் வருகிறார்கள். இவள் வீட்டை ஒட்டிய மாடி வீட்டுக்காரி எல்லாம் ஒன்றுக்கு இரண்டாய் பரப்ப ஆரம்பித்தாள். மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்?  பதின்பருவ சிறுவர்கள் அக்குழந்தையை தேவிடியா மவன் என்றே கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர்.

தெரு ஆண்களுக்கு நடப்பவை எல்லாம் மேலும் சாதகமாய் ஆனதை போன்றிருந்தது, அவள் வீட்டு முன் இரவு எவர்க்கும் தெரியாமல் ஆண்கள் போய் நிற்பதுண்டு, சிறுவர்களும் தான். இரண்டாவது கட்டியவன் ஆட்டோவிலே குடித்துவிட்டு அயர்ந்துவிடுவான். சிறுவன் ஒருவன் கதவை ஓரு இரவில் தட்டி அவள் அரிவாளோடு வெளியே வந்து எட்டி பார்த்தாளாம், தெரு பெண்கள் இவளை துளியும் மதிப்பதாய் இல்லை.

வேலுவிற்கு என்ன ஆனதோ தெரியவில்லை, செட்டியாரிடம்  இவனுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல். இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு. ஒன்றும் புரியாதவளாய் அவரின் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றான். செட்டியாரம்மா, குழந்தைகள் வீட்டில் இல்லை, அவர் மட்டும் இருந்தார்.  குழந்தையை அவன் கையில் வைத்து கொண்டு, அவரின் அறைக்கு என்னை போக சொன்னான். புரிந்து விட்டது, கிழட்டு கழுகின் தூண்டில் புழு இவன், நான்தான் மீன். முடியாது என்று கதறினேன், அடித்தான் மிதித்தான் என் கால்களை பற்றி அழுதான், அறைக்கு  போனேன், தீப்படுக்கை. அதே வாடை.

முகம் தெரியாத பலருடன் வீட்டுக்கு வந்தான், அதே தீப்படுக்கை, வாடை. என் குழந்தை பாவம் சொல்ல தெரியுமா அதற்கு பாவி சாராயத்தை ஊற்றி கொடுத்து தூங்கவைத்தான்.

தெருமுக்கு இசக்கிக்கு கொடை வந்தது, எங்கள் ஊர் காரிதான் இவளும், வாக்கப்பட்டு இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். குழந்தையும் பிறந்திருக்கிறது, கட்டியவன் வேறொருத்தி மேல் இருந்த ஆசையால், இவள் தலை மேல் கல்லை போட்டு கொன்று விட்டான் , பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த குழந்தை மேலும் கல் பட்டு அதுவும் செத்து விட்டது, ஆங்காரமாய் பேய் ஆகி பழி வாங்கிருக்கிறாள், அவளை அடக்கி இங்கே தெய்வமாய் ஆக்கிருக்கிறார்கள்.

வேலும் வீட்டில் இல்லை, மேளம் சத்தம் கேட்க கேட்க என் உடல் உதறியது. கையில் இருந்த குழந்தை வயதின் வளர்ச்சியின்றி தூங்கி கொண்டிருந்தது, மேகம்  இல்லா வானம் போல் குழப்பமின்றி இருந்தேன், எனக்கு எந்த பதட்டமும் இல்லை. முதலில் கட்டியவன், செட்டியார், வேலு, சந்தைதெரு ஆண்கள், புதிய தெரு ஆண்கள், அன்று என் இடுப்பை வருடிய சிறுவன் என எல்லோர் முகமும் கண் முன்னே வந்து மொத்தமாய் சுழன்று அடித்தது. ஒரு நிமிட அமைதியில் எதையோ உணர்ந்தேன். வீட்டின் உள்பக்க தாழ்பாளை பூட்டினேன்.

மொத்த தெருவே அவள் வீட்டு முன் நின்றது, செட்டியாரும் வந்து விட்டார். வேலு முழு போதையில் நினைவிழந்து ஓரமாய் கிடந்தான்  கதவை இரண்டு முரட்டு ஆசாமிகள் இடித்து தள்ளினார்கள். கதவு உடைந்தது.

எல்லா ஆண்களும் வாய் பிளந்து நின்றனர், எதை பார்க்க அவளை கொத்தினார்களோ அதை காட்டி கொண்டிருந்தாள். எதுவுமின்றி இருந்தாள். அவள் காலடியில் குழந்தையும் இருந்தது. தாலியை கழட்டி விட்டாள் போல, கழுத்தில் இல்லை, செட்டியார் உரக்க கத்தினார் "பாத்துட்டு இருந்தா எப்படி, சேலையை அறுத்து இரண்டையும் இறக்குங்கோ".                              
            

      

      


                    

                                              

               
        


No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...