பதினெட்டாவது அட்சக்கோடு எங்கே, செகந்தராபாத்தை சொல்கிறாயா? நிஜாம் ஹைதெராபாத்தின் இரட்டை நகரம். நம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை போல. பாரத் சர்க்கார், நிஜாம், சட்டைக்காரர்கள், துலுக்கர்களிடமிடையே சந்திரசேகரன் விளங்கா மனநிலையில் வாழ்கிறான். யாரோடது இந்நகரம், நான் இங்கே யார்? அப்பா ரயில்வே செர்வண்ட். அப்புறம் ரெபியூஜிஸ். பொறுங்கள், ரெபியூஜிஸ் நாங்களும் தானே. பால்யம் முழுவதும் பயம் படர்ந்த நாட்கள், யாரிடம் அடி வாங்கப்போகிறேனோ. தமிழ் பேசும் நம்மிடமும் தான் வித்தியாசங்கள் 'அவாள்', 'அவிய', 'அவுக', 'அவைங்க', 'அதுங்க' இன்னும் எத்தனை. பாவம் சந்திரசேகரன் இதை அறியவில்லை. ஒருவேளை நிஜாமுக்கும் பாரத் சர்க்காருக்கும் நடந்த சண்டையில் பிழைக்க வந்தவிடத்தில், பிழைக்க வேறு தொனியில் சொன்னால் உயிரோடு வாழ வேண்டுமென்றால் மீண்டும் ஆரம்பத்திற்கே வரவேண்டும் தானே.
கிரிக்கெட், அலிகான், ஷேர்வானி. இங்கே விடப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஒரு வேளை சந்திரசேகரன் அய்யராய் இல்லையேல், பிரியாணி எழுதப்பட வேண்டியிருக்கும். நிஜாம், தக்காணம் ஆளும் உணவை அய்யரின் கதையில் தேடுவது மடத்தனம். இதற்காகவே நிஜாமுக்கு பெரிய சலாம். அதிலும் உலகப்போர்கள் நடக்கிறது, பட்டேல் வேறு இந்தியாவை ஊசி நூல் கொண்டு தைப்பது போல எதெல்லாமோ இணைக்கிறார். திருவாங்கூர் இணைகிறது, சர். சி. பி ஓடவிரட்டப்பட்டு ஆரல்வாய்மொழி வெளியே தாண்டிவிட்டார். ஒரே வித்தியாசம், திருவாங்கூர் பத்மநாபதாசன் ஆண்டது. புரியவில்லையா, இது இந்துக்கள், அது முஸ்லிம்கள். ஆம் நிஜாம் முஸ்லீம் தானே. ஏற்கனவே பாகிஸ்தான் பிரிந்தாயிச்சு. நிஜாமின் கஜானா கொஞ்சம் கரைந்து அங்கே போனது, ஒரே இனம் அல்லவா.
.
எருமைக்கும், பசுக்கும் வித்தியாசம் நாம் உருவாக்கியதுதானே! இரண்டுமே பாலை கொடுக்கிறது. இதில் மலையாளியை கொஞ்சம் விடலாம், இரண்டின் கறியையும் மய்ய அவித்து 'வைக நேரத்து பரிபாடிக்கு' தொட்டுக்கொள்ளலாம். கனவுகள் உருவாகும் சிலநேரம் உண்டு, நாம் கடந்துவந்த காலமே கனவாகும் சாத்தியம் பால்யத்திற்கு உண்டு. அது டெக்கானோ, மதராசோ ஒன்றுதானே. விளையாடிய ஆலமரம், அரசமரம் இல்லாத ஊருக்கு நீங்கள் போக விருப்பப்படுவீர்களா? அதுதானே இன்னும் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இது எல்லாமே சேர்ந்துதான் சந்திரசேகரன். என்றோ தைத்த கோட்டும், இடுப்பை காட்டிக்கொடுக்கிறது. கரண்டையையோ கடக்காத முழுக்கால் நிக்கரும் சரிதான். அம்மையும் உண்டு, உடன்பிறந்தாரும் உண்டு. ரயில்வே செர்வண்ட் அப்பா, பாஸுக்கு பஞ்சமில்லை. எதையோ பேசி இலவச காட்சி சினிமா. குதிரைக்காரன் உண்டு, இன்னும் பேரம் பேசத் தெரியவில்லை. எப்படியோ நிம்மதி, நிச்சலமான இரவு, சுகந்தம்.
யார் இந்த வெள்ளைக்குல்லா அணிந்த காங்கிரஸ் காரர்கள், கம்யூனிஸ்ட் எல்லாரும். ராஜாஜிக்கு என்ன வேலை, காந்தி குடும்பத்தில் சம்பந்தம். போதாதா? என்ன எழவு தேசமோ. நாற்பது வருடம் கழித்து பார்த்தால் கண்ணீர் வடியும். இதற்காகவா இந்தபாடு பெருமாளே!
லம்பாடி, பறைச்சேரி, பாரக்ஸ் எங்குமே பெண்கள் உண்டு சந்திரசேகரா! சங்கீதம் ஆழ்வாரோ, புதிய வாத்தியாரே. பாரதி தெரியாத வேதியல் வாத்தியார். அவருக்கு தமிழ் தெரியுமாம். போதும், கல்லூரி. நரஸிம்ஹா ராவ். தண்ணீரை விட, இங்கையும் விட ரத்தம் கனமானதே. அதில் இட்ட ஒப்பம். வேண்டும் பாரத். இணைவோம் பாரத்துடன். எங்கே பாதி குடும்பங்கள், திருவாரூர், மதராஸ் என போய்க்கொண்டே இருந்தால், எல்லா நாளும் ஒன்றாகுமோ. ஒரு நாள் அங்கே இதே நிலைமையானால் வேறு எங்கே போகும் கால்கள்.
காந்தி, சுடப்பட்டார். சாலைகளில் நிசப்தம், அமைதி. ரேடியோக்கள் பேசுகின்றன, பலக் கோடி காதுகள் குவிகின்றன. கொன்றது யார், துலுக்கனா? இல்லை பிராமணன். முட்டாள் பிராமணன் கொன்று விட்டது பிரேதம், உடல், சவம். சத்தியத்தை அல்ல. நேரு சொன்னாரே அதே வார்த்தை 'சத்தியத்தின் பிரதிபலிப்பு நம் எல்லோரின் நெஞ்சிலும் உறைந்துவிட்டது'. அவரை எங்கே பார்ப்பேன், ஆவியாக! அதிலும் வெள்ளை முண்டுடன், மூக்கில் சற்றே தாழ்ந்த கண்ணாடியுடன் நிற்பாரா? ஆம் கையில் தடிக்கொண்டு, சரி ராட்டினம் எங்கே. போதும், போதும். சத்தியத்தின் பிரதிபலிப்பு, இந்த வார்த்தையே போதும்.
பின் ஒருநாள், பக்கத்து வீட்டு காசிம் வந்தான் கத்தினான். ஏன் இந்த காலம் நிலையாய் நிற்காது. யார் யாரோ அவன் வீட்டில், அவன்தான் இல்லை.ரெபியூஜிஸ். பின் போர், இந்தியா, நிஜாம் போர். எங்குமே போகவேண்டாம் ஊரடங்கு. எத்தனை நாட்கள் சோளரொட்டி, பாலும், மோரும் மாத்திரம். செவ்வானம் தெரிய ரயில் நிலையம் நோக்கி ஓடினேன், குண்டு சத்தம். அலறல். எங்கெங்கோ ஓடும் கால்கள், இதில் எது இந்துக்கள், முஸ்லிம்கள். கோணல்மாணலாய் சந்துக்கள். ஒரு வீட்டில் விழ, ஆணும், பெண்ணும் உண்டு. பேயறைந்த பார்வை, என்னைப்பார்த்து சிறுமி வந்தாள். கையெடுத்து கும்பிட்டாள், நான் வருகிறேன், அவர்களை விடு. பாவாடை சமீசில் நாடா அவிர நின்றாள் துருத்திய எலும்புகள் தெரிய, குமட்டியது. நான் வெளியே ஓடினேன். தூரத்தில் பாகிஸ்தானில் மதுகுப்பியோடு ஒருத்தர், இதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தார். அவரின் பெயர் 'மண்டோ'. பதினெட்டாவது அட்சக்கோடு இதை எழுதியது சந்திரசேகரானாய் அடியேன் 'தியாகராஜன்'.
No comments:
Post a Comment