Tuesday 19 November 2019

ராஜு தாத்தா 2: சுடலை





புதிய பாலம் கட்டியதும், பழைய பாலம் இருந்த சுவடு இல்லாமல் போனது. இருப்பினும் கட்டுமான கருங்கற்கள் இடித்து அப்படியே பழையாற்றின் மீது கொட்டி விடப்பட்டு இருந்தது. மேல்நிற்கும் பாலத்தின் அடியில் இன்னும் தலை குனிந்து கீழ்பாலம் நிற்கிறது.  ஊரே திருவிழா போல இருந்தது தெற்கே சுசீந்திரம், மேற்கே தக்கலை, வடக்கே கடுக்கரை வரை ஆட்கள் மாட்டுவண்டி பூட்டி வந்து பார்த்து சென்றனர். அலங்காரமும், வாழைமர முகப்பும் இதுவரை ஊர் மக்கள் கண்டிராத பிரமாண்டமும் புதிதாய் இருந்தது  

          சுடலை அங்கிருந்த ஆலமூட்டின் ஓரம் ஒதுங்கி எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தான். தூரத்தில் கீழத்தெரு சுப்ரமணியம்பிள்ளை குடும்ப  பொம்பளைகள் வருவது தெரிந்தது. கையில் இருந்த பீடியை அணைத்து, தலையில் கட்டியிருந்த சிவப்பு தோர்த்தை மடக்கி கையில் வைத்து கொண்டான். அவனுக்கு தெரியும் சிவகாமியும் வருவாள் என்று. எட்டி பார்த்தான் குளித்து முடித்து ஈரம் காயாமல் ஒதுக்கி கட்டிருந்த முடிக்கற்றையில் அவள் வீட்டின் வெளியே பூத்த சாமந்தி மலர்ந்து இருந்தது. மஞ்சள் பூசிய முகத்தில். நெற்றிடையே சாந்து போட்டு யாரும் காணாதவாறு குறி இருந்தது. கால் கொலுசின் சத்தம் நின்றிருந்த சுடலையின் காதில் நுழைந்தது.

சிவகாமியும் கூட்டத்தில் அவனை தான் தேடினாள். ஆற்றின் சலசலப்பும், கொட்டியிருந்த கருங்கற்களில் துணி துவைத்து அலசும் ஓசையும், பாலத்தின் மேல் கூடியிருந்த கூட்டத்தின் கூச்சலையும் தாண்டி ஒருபுறம் ஒலித்து கொண்டிருந்தது. சொந்த தாய்மாமன் மகள், இருப்பினும் நேரடியாய் அவளிடம் பேச தைரியம் இல்லை. மாமனோ வாத்தியார், ஊருக்கு நல்லது கெட்டது கூறும் பொறுப்பில் இருப்பவர். அக்காவின் மகன் எனுமளவுக்கு சுடலையின் சொந்த வாழ்க்கையில் தலையீடு அதிகம். பொறுக்க முடியாது எனும் நிலையில் மாமனோடு சிறு மனவருத்தம். லெனினும் சே வும் சுடலையின் ஆதர்ச நாயகர்கள். எங்கே புரட்சி என்று சண்டைக்காரன் ஆயிடுவானோ என்ற பதற்றம் மாமனுக்கு. பின்னே வாத்தியார் காந்திய வழி.      

சுடலையின் பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் பேச ஆரம்பித்தார்.

"நாடார் சரியான ஆளூடே, அனக்கம் இல்லாம காரியத்த பண்ணிருவாரு. காங்கிரஸ் இன்னும் இருக்குடே. இந்த சினிமா வசனம் எல்லா நிக்குமா", அருகில் இருந்த இளைஞன் ஆரம்பித்தான்.

"நீறு சும்மா கிடவே கிழம், இனி நாங்கதான். காங்கிரஸ்லா பண்டுவோய். நம்மல ஏமாத்துகணுவ.எங்க ஆளுதான் இனி எல்லாம்."

பெரியவருக்கோ பொறுக்க முடியவில்லை. தன்னை கிழம் என்றதை விட, காங்கிரஸின் மறுப்பு அவரை கொந்தளிக்க வைத்தது. விடாமல் ஆரம்பித்தார்.

"மக்கா, புது பொண்டாட்டி கதையா இருக்கும். அப்புறம் தெரியும் இதுக்கு அம்மையே கொள்ளாம்னு"

பெரியவர் பேசுவது காதில் விழுந்தும், பதில் சொல்லாமல் இளைஞர் கூட்டம் நகர்ந்து சென்றது. நடப்பதை எல்லாம் கவனிக்கும் சுடலையின் கண்கள் என்னவோ சிவகாமியை நோக்கியே இருந்தது. சிறுவயதில் இதே பழையாற்றின் கரைக்கு வீட்டுக்கு தெரியாமல் அவளோடு வந்து போனது, பூவரசம் இலையில் அவளுக்காக பீப்பீ செய்து கொடுத்தது. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த கிழவருக்கு மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டி விட வேண்டும். சுடலையிடம்,

"மக்கா நீ நடராஜ வாத்தியார் மவன்தானே", அவனும் ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

"பாத்தியா மக்ளே, சினிமா பாத்து சீரழியுற கூட்டத்த. நீ சொல்லு மக்கா நாடார் நினைக்கலான. இந்த பாலம் இங்கன வந்திருக்குமா. ஐப்பசி கார்த்திகைக்கு நீந்திதான் திருநவேலிக்கு போவணும், மாமா சொல்லது சரிதானே" சுடலைக்கு இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும். ஆனால் சிவகாமி நகர்ந்து இங்கே வருவது போல் இருந்தது. ஆகா பெரியவர் பேசுவதை கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியவர் மீண்டும் தொடர்ந்தார்.

                                   "எங்க மைனி மக கட்டி கொடுத்தது திருநவேலி. கல்யாணம் முடிஞ்சு மறுவீடுக்கு போய்ட்டு. உடன் மறுவீடு வரணும். கல்யாணத்து அன்னைக்கே நல்ல மல. மூணு செம்பு பொங்கி வச்சு. வடிச்சது எல்லாம் மிச்சம். சவத்த பொங்கி வச்சது தூர போட முடியுமா, சமயல்  தாலாக்குடி பார்ட்டி. அன்னைக்குனு பாத்து சிறுபயறு பாயசமும் பாலு பாயசமும் மணக்கு மக்கா.அந்தலா இலை அள்ளுகவனுவ கூட போய் பறக்கிங்கால் போய் கொடுத்துட்டு வந்தோம்." பெரியவர் அப்பப்போ சுடலை கவனிக்கிறானா என்பதையும் பார்த்துக்கொண்டார்.

சுடலை கவனித்துதான் ஆகவேண்டும், சிவகாமி பெரியவரின் பின்னே ஆலமரத்தின் அடியில் நின்று ஆற்றின் ஓட்டத்தையும் அதன் நடுவே எழும்பி நிற்கும் பெரிய பாலத்தின் தூண்களையும் பார்த்தவாறே ஒரு கண்ணால் சுடலையும் பார்த்துக்கொண்டாள். சுடலைக்கு அங்கிருந்து நகரக்கூடாது "அப்புறம் என்னாச்சு" என்றான் பெரியவரிடம்.

இது போதாதா பெரியவருக்கு "நா சொன்னேலா, உடன் மறுவீடு. அங்க திருநவேலில இருந்து புறப்படும் போதே மல. பஸ்ல எறியாச்சு. தேராப்பூர் தாண்டிருப்போம், என்கோடியாண்ட வேண்டிட்டே தான் வந்தேன். சரியா கீழ பாலம் முங்கி தண்ணி ஓடுகு. மாப்பிள்ளையும் பொண்ணையும் என்ன செய்ய, நம்ம மாமா ஒருத்தர் கோச்சபிளாரத்துல இருந்தாரு, நா நடந்து போயி மாட்டுவண்டி எடுத்துட்டு வந்து கொண்டு போயி விட்டேன்". பெரியவர் பேசிக்கொண்டே தலைமாட்டில் காத்திருந்த பீடிக்கட்டில் இருந்த பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்தார்.நன்றாய் உள்ளிழுத்து புகையை ஊதியவுடன். மறுபடியும் ஆரம்பித்தார்.

"இப்போ சொல்லு மக்கா, எத்தன வருஷம் மழை பெஞ்சி ஒதுங்கி. இங்கயும் அங்கேயும் போகாம இருந்திருப்போம். இப்போ உள்ள பயல்களுக்கு இதெல்லாம் புரியுமா. பக்தவச்சலம் தொறந்த பாலம். நாடார் மாதிரி இன்னொருத்தர் வர முடியுமா, காங்கிரஸ்லா." என்றபடி சுடலையை பார்த்து சிறுபுன்னகையுடன் விடை பெற்றுக்கொண்டார்.                                      

சிவகாமியின் அம்மா வேலம்மை சுடலை அருகே வந்து "அந்த பெரியவர்ட்ட பேசிட்டு இருந்தய, அதான் ஒதுங்கி நின்னோம். நீ மாமாட்ட வந்து பேசேன். நம்ம மாமாதானே, சரசுவதி தியேட்டர்ல மேனேஜர் வேல இருக்குனு சொன்னாரு. அவரு பேசினா உனக்கு கண்டிப்பா கிடைக்கும்". வேலம்மையின் பின் நின்று சிவகாமி சரி என்று சொல்லுமாறு தலையாட்டினாள். சுடலைக்கு மறுக்கவும் முடியாது. அவர் முன் போய் நின்று பேசுவது அவ்வளவு கடினம் இல்லை. இருப்பினும் அன்று அவர் முன் நடந்த விதம் அவரை காயப்படுத்திருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே அவனை தடுக்கிறது. 

"இல்லத்தே, மாமா மூஞ்ச நேருக்கு பாக்க சங்கடமா இருக்கு" என்று தயங்கினான்.

"உங்க மாமாதானே, எதையும் மனசுல வச்சுக்காம மாமாகிட்ட.சரியோ தப்போ பேசிடு. எல்லா பிரச்சனையும் மனசுல போட்டு பூட்டி வச்சாத்தான் நெஞ்சு கனக்கும். பேசாம எல்லாம் சரி ஆயிருமா. நாளைக்கு இவள கட்டினாலும் ரெண்டு பேரும் மூஞ்ச தொங்க போட்டுட்டே அலைவீங்களா, இன்னைக்கு ராத்திரியே வீட்டுக்கு வா. அவரும் உன்ன தேடுகாரு. தினமும் வீட்டுக்கு வர பிள்ள, ரெண்டு மூணு நாலு வரலேன்னு அவரும் புலம்புகாரு".

சுடலையும் வேலம்மையும் பேசிக்கொண்டிருக்கும் போதே சுடலையின் கைகள் பின்னால் பூவரசம் இலையில் பீப்பீ செய்து கொண்டிருந்தது.  அவர்கள் விடைபெற்று நகரவே யாருக்கும் தெரியாமல் என அவன் நினைத்துக்கொண்டு சிவகாமியின் கைகளில் அதை திணித்தான்.  முன்னே சென்ற பொம்பளைகள் கூட்டத்தில் இருந்து திரும்பி பீப்பீயை வாயில் வைத்து ஊதி சிவகாமி மிதந்து போனாள். 

சுடலைக்கு ஒன்றில் மட்டும் தெளிவு இருந்தது. தன் எதிர்காலத்தில் அவனுக்கான எல்லா நிலைகளிலும் வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி இவள் என்று.  எதுவும் நிலையில்லாதது.  இதில் சொந்த தாய்மாமனிடம் என்ன வீராப்பு வேண்டி கிடக்கிறது. புருஷனை இழந்து அம்மை நடுத்தெருவில் நின்ற வந்தபோது இந்த மாமன் தானே கூட நின்றான்.  தன் பிள்ளை போல என்னை பாவித்தானே, கொள்கை ரீதியாக நான் எடுத்த முடிவுக்கு ஆதிப்புள்ளி இவன் தானே.  சரி என்று முடிவெடுத்தபடி அன்று இரவே மாமனை பார்க்கவேண்டும் என முடிவெடுத்தான். 

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...