Saturday 9 November 2019

ராஜு தாத்தா





1
ராஜு தாத்தா, ஒடுங்கிய உருவம், கரிய பனைத்தடி போல இறுகிய உடம்பு நெருக்கிய கன்னங்கள், முன் நீண்டு நிற்கும் மேல்வாய் பல், மஞ்சள் படர்ந்த மங்கிய கண்கள், வெண்பஞ்சாய் தலை நிறைத்து நிற்கும் முடி, எதற்கெடுத்தாலும் கை தட்டி சிரிக்கும் அந்த பாவனை, கடைத்தெருவில் யாருக்கும் எதற்கும் உதவியாய் அங்கும் இங்கும் சிறுபிள்ளையாய் ஓடும் இவர்க்கு என்ன வெகுமானம் தருகிறர்கள், மகனின், பெயரனின்  வயது ஒத்த இந்த கடைத்தெரு சிறுவியாபாரிகளுக்கு இவர் என்ன உபயோகத்திற்கு, பகலிலும் மாலையிலும் கடைகளுக்கு தேநீர் விநியோகத்திற்கும், இரவு வேளைகளில் சாராயம் வாங்கி கொடுப்பதற்கும் இவர் வேண்டுமே.

வயது என்னவென்று கடைத்தெருவில் யாருக்கும் உறுதியான தகவல் இல்லை, ஒரு எழுபது இருக்குமோ, அல்லது அதற்கும் மேல் இருக்குமோ, அவரிடம் கேட்க நேர்ந்தால் "எதுக்கு மக்கா, தாத்தாவுக்கு பொண்ணு பாக்க போறியா? இந்த வயசுலயும் தாத்தா ஜம்முன்னு இருக்கேன்னா, சின்னதுல சாப்பிட்டது,இப்பல்லா என்ன தின்னு கிளிக்கீங்க" என்ற அவர் வேறு உபவாசம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார், இந்நேரங்களில் அவர் பேசுவதை நிறுத்த நாம் வேறு ஒரு பேச்சை ஆரம்பித்தால் "எழவு பயலுக்கு பொறந்தவனே, நா சொல்றது கேளு முதல" என்று மேலும் திட்ட ஆரம்பித்துவிடுவார்.

எங்குதான் தங்குவாரோ, பகல் பொழுதில் எங்கும் காணக்கிடைப்பார், இரவுகளில்  வெயில் காலங்களில் வேப்ப மரத்தடியில் முருகேசன் தேநீர் கடை வெளியே கல்பெஞ்சில் சுருண்டு, கிழிந்த கம்பளியை போர்த்தி கொண்டு தலைமாட்டில் எரியும் கொசுவத்தி புகை சூழ உறங்கிக்கொண்டிருப்பார், மழை பனிக்காலங்களில் பாய்க்கடை வெளியே வராந்தாவில் தஞ்சம் புகுவார், அவருக்கென ஒரு ட்ரங்க் பெட்டி உண்டு, மாடன் கோயில் பூசை சாமான்கள் ஒதுங்கிய அறையில் ஓரத்தில் அதுவும் இருக்கும், அவரை தவிர யாருக்கும் அதில் என்ன இருக்கும்  என்ற ரகசியம் தெரியாது, அப்படியென்ன வைரமும் இரத்தினமும் வைத்திருக்க போகிறார் என்ற ஏளனம் யாரும் அதை திறப்பதில்லை, ஆக பூட்டும் இல்லை அதற்கு.

வெயில் விழும் முன்னே சப்பாத்து படித்துறையில் குளித்து, சுடுகாடு மாடன் திருநீரை நெற்றி நிறைத்து பூசி, புடைத்த நெஞ்செலும்பு வெளி தெரிய கடைத்தெருவுக்கு வருவார், எங்கு வேண்டுமோ அங்கு உணவு அருந்தி கொள்வார், கடைகளில் உதவியாய் இருப்பதால் கொடுக்கும் பணத்தை கணக்கு பார்க்காமல் வாங்கிக்கொள்வார்,  

தாத்தாக்கு எல்லார் மேலும் பிரியமுண்டு, காமாட்சி மேல் மட்டும் கொஞ்சம் அதிகப்படியான பிரியம், எல்லோரும் அப்படித்தானே, கடைத்தெருவில் தாத்தாக்கு அடுத்து எல்லோர்க்கும் காமாட்சியை தெரியும், தாத்தாதான் அவனுக்கு காமாட்சி என்ற பெயரை சூட்டினார், ஆண் பிள்ளைக்கு எதற்கு பெண் பெயர் என்று கேட்டதற்கு பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது, பிறகு எல்லோரும் ஒப்புக்கொண்ட பிறகே கிழவர் சிரித்தார் , அதை வரை ஒரே முறைப்புதான் எல்லோரையும்.

இவனும் அவரைப்போல, இந்த கடைத்தெருவுக்கு எதனாலோ ஒதுங்கி வந்தவர்கள், தாத்தா வாழ்க்கை முடியவிற்கும் காலம் வந்தார், இவன் வாழ்க்கை aதொடங்கவிருக்கும் காலம் வந்தான். வெகு நாட்களாக காமாட்சியை கடைத்தெருவில் காணவில்லை, பார்க்கும்போது மட்டும் அள்ளிக்கொஞ்சி அகம் மகிழும் நேசம் இருவர்க்கும்.

 இதுபோக கிட்டு ஒருவனையும் பக்கம் சேர்த்துக்கொள்வார், நாற்பதுக்கு மிகாமல் வயது, முழுநேர குடிகாரன், இவனுக்கு இரவு நேர குடிக்காகவே மட்டுமே தாத்தா, பேய் இறங்கி அலையும் நேரம் வரை பேச்சும் சிரிப்பும் களைகட்டும், சுடுகாடு போகும் வழியில் ஆற்றங்கரை  இறக்கத்தில் ஆலமூட்டு இசக்கி கோயில் பின்புறம் தான் இந்த கச்சேரி.

வழக்கமான நேரம் ஆக ஆக கிட்டுக்கு கை கால் ஏன் மொத்த உடலே நடுங்க ஆரம்பிப்பது புரிந்தது, குடி நோயாளிகளிக்கென பொருத்தும் அறிகுறி எது, நெஞ்சு படபடவென அடித்தது, விந்தையான மனம் விரிந்து நனவிழி அமிழ்ந்தது, வெண்மையான சுத்தமான உடை அணிந்த ராஜு தாத்தா அவன் அருகிலே வருவது போல் இருந்தது, வாய் மெதுவாய் பிளந்து எச்சில் ஓரமாய் கூடி நின்று வழிந்து கொண்டிருந்தது.

"என்னவே இம்புட்டு நேரம், சல்லத்தனம், மண்டைக்குள்ள குடைய ஆரம்பிச்சுட்டு, நல்லவேள வந்துட்டீரு, இல்ல சவம் விழுந்து இப்போ குழில போட்ருப்பானுக "

கைதட்டி சிரித்தபடியே "என்னாலே, எனக்கு முன்னாடி உனக்கு குழி கேக்கா, சவத்து பயலே, ஓங்கி குறுக்குல மிதிச்சேன், குழியே தேவையில்ல, நேர பழையாத்துல விழுந்து, ஆடி அமாவாசைக்கு கன்னியாரி போயிருவா" என்றார்.

"உன்னோட வயசுக்கு நீரு எரிஞ்சு, நாலஞ்சு தெவசம் முடிஞ்சர்க்கணும், வாழ்ந்து என்னதான் கிழிக்க போரிரோ"

"நீதான் எனக்கு சேத்தும் கிழிக்கேல, நீ அடிக்க தண்ணிக்கு எனக்கு முன்னாடி போய் சேர்ந்திருவால பாத்துக்கோ'

பேச்சு நீண்டுகொண்டே போனது, தாத்தா இடுப்பில் சொருகி இருந்த அரைபாட்டில் ரம்மை எடுத்து வெளியே வைத்தார், ஆலமூட்டின் அடியே இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் பித்தளை டம்ளரையும், அங்கிருந்த சிறிய சருவத்தில் ஆற்றில் இறங்கி நீரை நிரப்பி, டம்ளர்களையும்  கழுவி கிட்டு அமர்ந்தான், தாத்தா சட்டை பாக்கெட்டில் இருந்த பீடிக்கட்டை வெளியே போட்டு ஒன்றை எடுத்து பற்ற வைத்தார், கதவில்லா இசக்கி அம்மன் கோயில் வெளியே யாரோ அன்றைக்கு படைத்தது, சுண்டலும் பாளையம்கோட்டான் பழம் மூன்றும் கிடந்தது, அதை எடுத்து ரம்முக்கு தோதுவாய் சாப்பிட எடுத்துக்கொண்டார்கள்.

கால் வாசி ரம் ஊற்றி, தண்ணீர் மீதி நிரப்பி டம்ளர் நிரம்ப முதல் குடி குடிப்பது வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை, ரம் அடிவயிற்றில் இறங்கி உள்ளுக்குள் இருந்த அத்தனை கசடுகளையும் நீக்கியதும், கிட்டுக்கு கண்பார்வை மெதுவாய் அதிகரித்தது, அப்போதுதான் கவனித்தான், புது வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்து தாத்தா அமர்ந்திருந்தார், இருட்டில் பாட்டிலை பார்த்தான், அதுவும் விலை அதிகமான ரம், ருசிக்கும் போதே தெரிந்தது, இருந்தாலும் இப்போதுதான் எல்லாவற்றையும் தெளிவாய் கவனித்தான், பின்னே ஒரு சிறிய அளவு உள்ளே இறக்கி இருக்கிறான் அல்லவா.

"என்னவோய், ஆளு புது மாப்பிளையாட்டும் வந்திருக்கீரு, என்ன விஷேசம் "

"எழவு இப்போதான் கண்ணு தெரியால உனக்கு"

"சரி என்ன விஷயம், சீவி சிங்காரிச்சு வந்திருக்கீரு"

"ஒண்ணும் இல்லடே, ரொம்ப வருஷம் கழிச்சு சின்ன சந்தோசம், அதான்"

"கத அடிக்காதவே, உமக்கு என்ன கவல, எப்போவும் சிரிச்சுட்டு சந்தோசமா தான இருக்கீரு"

"போல முட்டாப்பயலே, சிரிச்சுட்டு இருந்தா, சந்தோசமா"

"அப்போ என்ன இத்தன நாலா சந்தோசமா இல்ல நீ"

பேச்சு சிறிது நேரம் தடைபட்டது, காரணம் இருவரும் மும்முரமாய் அடுத்து டம்ளரை ரம்மை கொண்டு நிரப்பி கொண்டனர், ஒரே மூச்சில் குடித்து முடித்து, சுண்டல் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு அடுத்த பீடியை பற்றவைத்து மீண்டும் உரையாடல் ஆரம்பித்தது.

"என்ன சொல்ல, சிரிச்சேன், குளிச்சேன், சாமி கும்பிட்டேன், சாப்பிட்டேன், குடிச்சேன் ஆனா ராத்திரி தூக்கம் வராது மக்கா, பொரண்டு பொரண்டு படுப்பேன், நாயெல்லாம் கத்தும், கண்ணு அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு அதுவா ஓஞ்சு தூங்குவேன்" தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே கிட்டு ஒரு பழத்தை உரித்து அவர்க்கு பாதியை நீட்டினான், அவரும் அதை வாங்கி அப்படியே விழுங்கி மென்று இதை தொடர்ந்தார்.

"எனக்கு என்ன வயசாகுனு நினைக்க" என்று கிட்டுவை நோக்கி கேட்டு ஒருகண்ணை மூடி அவன் பக்கமாய் காதை குவித்து அவன் பதிலுக்காக காத்திருந்தார் .

"என்ன ஒரு எழுவத்தஞ்சு எம்பது இருக்குமா "

எதிர்பார்த்த பதில் வந்த மகிழ்ச்சியில் அவருக்கே உரித்தான கைகளை தட்டி பற்கள் இன்னும் வெளியே தெரிய சத்தமாய் சிரித்தார்.

எரிச்சல் பிடித்தவனாய் கிட்டு "எதுக்கு இப்போ கத்துக, வயச சொன்ன முடிஞ்சு" என்றான் கோபமாக.

"அறுவத்தஞ்சு தான் ஆச்சு எனக்கு, பாக்க எப்படி இருக்கேன் பாத்தியா"

அதிர்ச்சியான கிட்டு "என்னவே சொல்லுக , உடம்புலாம் தளந்து போச்சு, பத்து வயசு கூட இருக்க மாதிரி தெரியிற"

"எல்லாம் சேட்டை, நா பண்ணின சேட்டை, யாரிட்டயம் சொன்னது இல்ல, இன்னைக்கு என்னவோ தெரில சொல்லணும்னு தோணிச்சு, உன்கிட்ட சொல்லலாம், நீ கேட்ப, ராத்திரி நான்தான குடிக்க வரணும், வேற யாரு வருவா" என்று மேலும் சிரித்தார்.

அடித்த இரண்டு டம்ளரும் கிட்டுவை நிதானமாக்கி விட்டது, "பத்து பன்னிரண்டு வருஷம் இருக்கும் உன்ன இங்க கடைத்தெருவில பாத்தது, நல்ல மெலிஞ்சு எலும்பும் தோலுமா வந்த, நியாபகம் இருக்கு, எங்க அய்யாதான் உம்ம இங்க சேத்துக்கிட்டாரு"

"அந்த நண்ணிக்காகத்தான் எழவு உன்கூட ராத்திரி வர வேண்டி கிடக்கு, நல்ல மனுசன்  சீக்கிரம் போய் சேந்துட்டாரு, அவரு போனாரு நீ நாசமலா போயிட்ட"

"என்னவே செய்ய, அம்மை சின்னதிலே போய்ட்டா, அய்யாவும் போய் சேந்துட்டாரு, ஒருத்திய லவ் பண்ணினேன், அவளும் வேற ஒருத்தன கட்டிட்டு போய்ட்டா, யாருக்குவே நம்ம தேவை, செத்துரலாம் தான், தைரியம் இல்ல, நீ சொன்னேயே உறக்கம் இல்லனு, அந்த மயிருக்குத்தான் நா குடிக்கது"

நீண்ட நேரம் இருவரும் பேசவில்லை, எங்கோ வேறு திசையில் வெறித்து பார்த்து கொண்டிருந்தனர், நள்ளிரவு காற்று வேகமாக வீசியது, ஆலமர விழுதுகள் ஒன்றுக்கொன்று உரசி சத்தம் எழுப்பி கொண்டிருந்தது.   
பழையாற்றில் சலனமின்றி ஓடிய நீரின் அமைதி அவர்கள் இருவரின் உள்ளேயும் புகுந்தது, சிலநேரம் பேசிக்கொள்ளாமல் அருகருகே உட்கார்ந்திருப்பதும் ஒருவித ஆசுவாசம் தான், தூரத்தில் சுடுகாட்டில் பிணம் எரியும் தீ காற்றின் வேகத்தில் நடனம் ஆடுவது போல் இருந்தது, நடுநிசி புள்ளினங்கள் கத்தி கூப்பாடு போட்டு கொண்டிருந்தது. கிட்டு கடைசியில் எஞ்சியிருந்த ரம்மை டம்ளரில் நிரப்பி தண்ணீரையும் நிறைத்து பெரியவர் முன்னே நீட்டினான், அதை கையில் வாங்கி கால்மாட்டில் வைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

"சின்னதுல அளவோலதான் இருந்தேன், எங்க அம்மா சொல்லுவா, அப்பா தியேட்டர்ல வேல பார்த்தாரு, இந்தா தீவண்டி ஸ்டேஷன் போற வழியில லாரி செட்டு இருக்கு பழைய சரஸ்வதி தியேட்டர்"

"என்னவே சொல்லுக உமக்கும் இந்த ஊருதான, நா கிழக்கலா நினச்சேன்,அப்பாவும் அங்க தானே வேல பாத்தாரு"

"ஆமா, அவரு மேனேஜர். எங்க அய்யா டிக்கெட் கொடுக்கிற வேலை. உங்க அய்யாக்கு என்ன சின்னதுலேயே தெரியும். தெரிஞ்ச ஊருன்னாலதான இங்க வந்தேன், இல்ல அன்னிக்கே செத்திருப்பேன்" சொல்லி முடிக்கும் போதே டம்ளரை எடுத்து படக்கென்று குடித்து, சிறிது கனைத்து அடுத்த பீடியை பற்ற வைத்தார்.

கிட்டுவுக்கு மேலும் எதுவும் கேட்க கூடாது என்றே தோன்றியது, கிழவர் இன்னைக்கு வழக்கமான மனநிலையில் இல்லை, ஆக இதன்மேலும் அவர்  விருப்பப்படவில்லை குழம்பிக்கொள்ள, பழையதை நடந்ததை நினைத்து வருத்தப்படப்போவதால் கடந்தவை மாறப்போவது இல்லை, எல்லோருக்குள்ளும் சோகக்காவியம் பல உள்ளுக்குள் ஏறிக்கொண்டோ அல்லது வலிந்து திணிக்கப்பட்டோ படம் எடுக்கும் பாம்பாய் வெளிவர காத்திருக்கும், சிலநேரங்களில் அதை ஆறப்போடுவதே நல்லது, இது கிட்டுவிற்கு நன்றாக தெரியும்.

"சரிவே வாரும் கிளம்புவோம், நடுச்சாமம் ஆச்சு"

"இல்ல, எனக்கு மனசுக்கு சரியில்லை, நீ போ நா வந்திருவேன்"

இது சரிப்பட்டு வராது, கிழவர் வீம்புக்காரன், அவருக்காய் தோன்றினால் ஒழிய இப்போது இவ்விடத்தை விட்டு நகரமாட்டார்.

"சரி, பேச்சுல நா கேட்ட கேள்விக்கு பதில சொல்லலியே"

அவனை ஏறிட்டு பார்த்து, "ஏல நா எவ்வளவு சென்டிமெண்டா இருக்கேன், உனக்கு பதிலு மயிறு கேக்கோ, போல முட்டாப்பயலே".

கிழவர் எளிதில் பழையநிலைக்கு திரும்ப அவரை கோபப்படுத்தினாலே போதும், இதில் கிட்டுவுக்கு நல்ல பயிற்சி உண்டு, பின்னே இத்தனை காலம் கிழவருடன் காலம் தள்ளிருக்கானே.

இருவரும் நடந்து பாலம் கடந்து சந்திப்புக்கு வந்தனர், ஒரு பக்கம் எங்கோடி கண்ட சாஸ்தாவும், அவர்க்கு பக்கவாட்டிலே வலது பக்கம் உயர்ந்த மேடையில் வந்து போகும் வண்டிகளை வேடிக்கை பார்த்தவாறு பெரியாரும் நின்றுகொண்டிருந்தார். அக்கா கடையில் பாதி ஷட்டர் மட்டும் மூடியபடி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது, இருவரும் சாலையை கடந்து கடைக்குள் நுழைந்தனர், தோசை மட்டுமே மிச்சம் இருந்தது, ஆளுக்கு மூன்று தோசை இலையில் போட்டு சால்னா ஊற்றும் போதே, ஷட்டரில் லத்தியை கொண்டு தட்டும் சத்தம் கேட்டதும், பரிமாறுபவர் கல்லா பெட்டிக்கு பக்கத்தில் இருந்த பெரிய பொட்டலத்தை நீட்டினார், அதை வாங்கிய ஏட்டய்யா பக்கத்திலே மூடியிருந்த நாடார் கடையில் வெற்றிலையும், பச்சைபழமும், சிகரெட்டும் வாங்கிக்கொண்டு நடையை கட்டினார், வழக்கமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றுதான் இது.

சாப்பிட்டு முடித்து ஆளாளுக்கு விடைபெற்று கிட்டு வீட்டுக்கு நடையை கட்டினான், கிழவர் வேப்பமரத்தின் அடியில் உட்கார்ந்தபடி பீடி பற்றவைத்தார்.                                                 
   

                                    
                                                           

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...