வழக்கமான பூசைகள் முடிந்ததும் பூசாரி மாடன் முன் படைத்த சீப்பு பழத்தில் மூன்றை தவிர, சுண்டலில் கொஞ்சம், பொரியில் கொஞ்சம் வைத்து மீதம் முழுவதும் தன் கூடைப்பையில் அடைத்து கதவை பூட்டினார். எரிந்து தேய்ந்த ஊதுபத்தியின் சாம்பல் முன் விரித்த தும்பு இலையின் மேல் கிடந்தது. மஞ்சணை, களப மணம் அறை நிறைத்திருந்தது.
தெருமக்கள் நடை கொஞ்சம் தீர்ந்து நடுச்சாமம் ஆன பின். மாடன் மெதுவாய் வெளியே வந்தார், அங்கும் இங்கும் நோட்டம் இட்ட பின் யாரும் இல்லை என்றவுடன் வேல்கம்பை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார். மாடத்திக்கு சுண்டல் உப்புசத்தை உண்டாக்கி விட்டது. அவள் வராமள் மாடன் மட்டும் நடந்தார். கச்சையின் மணி சத்தம் ஜல்ஜல் என்று குலுங்கியது, அவ்வப்போது வேல்கம்பை சப்பென்று தரையில் ஊன்றி நடந்தார்.
தெருவின் நாலுமுக்கு சந்திக்கு வரும்போது ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த முண்டனும் நின்றான். இருவரும் பொடிநடையாய் கீழத்தெரு இசக்கியை பாத்துவிட்டு வரலாம் என்று நடந்தனர். ஓரிடத்தில் மாடன் சடாரெனெ நின்று விட்டார்.
"என்னவோய் நின்னுட்டியே" என்றார் முண்டன்.
"ஏலேய் இந்த முடுக்குக்குள்ள கடைசி வீட்டுக்குள்ள நல்ல பாதி வெட்டி வச்ச பனத்தடி மாதிரி ஒருத்தன் கிடக்கானான்னு பாருல"
ஏன் என்று எதிர்கேள்வி கேட்டால் மாடனுக்கு பிடிக்காது. முண்டன் மெதுவாய் உள்நுழைந்து லேகை பார்த்து வெளிவந்தான்.
"யாருவோய் ஆளு இது"
"ஆளு தண்ணிவண்டி, சமயத்துல நம்ம நடை முன்னாடிதான் விழுந்து கிடப்பான், குடிச்சாதான் சவம் இப்பிடி, மத்தபடி ஆளு நல்ல குணம்டே..மட்டையாயிட்டானா? "
"நல்ல போதை தான், நாத்தம் அடிக்கு. காலு ரெண்டும் ஏனைக்கு கோணையா கிடக்கு..சரி இந்த நடுசாமத்துல எதுக்கு அவன பாக்க சொல்றியே? "
"நம்ம மேலே அவனுக்குள்ள பிரியம் சுத்தமான பசுபாலாட்டும், நம்ம எல்லைக்குள்ள எல்லாரும் சுகமா தூங்கணும் லா, அதுக்குத்தானே நாம காவக்காக்குறோம், சமயத்துல முண்டனுக்கு எல்லாம் மறந்திருது"
"என்னவே செய்ய நம்மள தெருவுக்கு வெளிய வச்சிருக்கானுக, விளக்கும் இல்ல. மொத்தமா இருட்டுக்குள்ள தான் கிடக்கேன். சரி காது கொடுத்து வெளிய கேட்டா? கெட்டவார்த்தை தான் விழுது. சுத்தியும் நாசமண்ணா போச்சு"
மாடனுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை, மனதிற்குள் நினைத்து கொண்டார். ஊருக்கு வெளியே இருப்பதினால் இவனுக்கு ஆணின் ரூபம் தெரிகிறது. ஊருக்குள் இருப்பதால் எனக்கு பெண்ணின் ரூபம் தெரிகிறது. ஏன் இந்த மாடன் மட்டும் ஊருக்குள். இவன் சுடுகாட்டில் வாழும் சுடலை இல்லை, ஊரோடு வாழும் விடுமாடன்.
சிலஅடி நடந்திருப்பார்கள், மாடனுக்கு என்ன மணம் பிடித்ததோ? சட்டென உடம்பை உலுப்பி, வேல்கம்பை வலுவாய் தரையில் ஊன்றி "ஏட்டி சிரிக்கியுள்ள வெளிய வாட்டி" என்று தெருமுனையில் மண்டி கிடந்த களத்தின் முன் நின்று கத்தினார்.
"சாமி நா எம்பாட்டுக்கு இதுக்குள்ள இருக்கேன், என்ன எதுக்கு கூப்டுக? " என்று எதிர் பெண்குரல் கேட்டது.
முண்டனுக்கு சங்கதி புரிந்து விட்டது. கூடவே தெரு நாய்களும் மாடனுக்கு பின் வரிசையாய் நின்று விட்டது. அதில் ஒரு வல்லுப்பட்டி குறைக்க ஆரம்பிக்க, மாடன் வேல்கம்பை தரையில் சட்டென்று ஊன்றி ஒரு முறை முறைத்தார்.அத்தனையும் அமைதியாகி விட்டது. "பின்ன நேரம் காலம் தெரியாம கத்த வேண்டியது" முண்டன் மனதிற்குள் நினைத்து கொண்டான்.
"இங்க பாரு பொம்பள, இது நா காவல் காக்கிற எல்லை. நீ இப்போ இங்கன இருந்து வெளிய போ"
"சாமி நா எங்க போக, இந்த களத்து முக்குல கிடந்துக்கேன், நீங்கதான் மனசு வைக்கனும்"
"இல்லமா, இது சின்ன புள்ளைக விளையாடுற இடம்மா" என்றார் முண்டன் கனிவாக.
"சாமி நானும் புள்ள பெத்தவன்தான், ஒரு தொந்தரவு செய்ய மாட்டேன்"
"சரி நீ எந்த ஊரு காரி" என்றார் மாடன்.
"கடுக்கரை சாமி"
"எட்டி நீ இடைல தூக்கு போட்டு செத்தீள்ள அந்த பொம்பளையா"
"ஆமா சாமி"
மாடனுக்கு மனசு கனத்தது, தொண்டை விக்கி "நீயாமா, செய் என்ன செய்ய இந்த மனுஷ பயக்கள, சண்டாள பயலுவ. அல்பாய்சுலா போய் சேந்துட்ட! சரி நீ இங்க கிட. எம்புள்ளைகளுக்கு துணையாட்டு இருக்கனும் சரியா?" கையில் இருந்த திருநீறை அவள் நெற்றியில் பூசி மாடன் நடந்தார்.
முண்டனுக்கு பொறுக்க முடியவில்லை "ஏணுவோய் இப்டி செஞ்சீறு, உமக்கு என்னாச்சு". "நீ சும்மா கிடல, நீரு எப்டி சாமியாநீறு" பதிலுக்கு சொன்னார் மாடன். மேலும் கோபம் அடைந்தவர் "இவள உயிரோடு படுத்துனானுவ, இப்போ செத்துட்டா! இப்போமாச்சும் நிம்மதியா இருக்கட்டும்". முண்டன் அமைதியாய் நடந்தார், கீழத்தெரு இறங்கி தோப்புக்குள் நுழைந்தனர்.
இசக்கி முன் படைத்த அத்தனை படையலும் அப்படியே இருந்தது, பின்னே இசக்கி கோவக்காரி. களப, சாம்பிராணி கூட்டு வாசனை தூக்கலாகவே இருந்தது. "எம்மா இசக்கி" என்றார் மாடன். "வாணே, என்ன ஆளு இந்த பக்கம்.காத்து இந்த பக்கமா அடிச்சுதோ" என்றாள் சிரித்தபடி இசக்கி.
"ஒண்ணுமில்ல, சும்மா ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்தான்னு வந்தேன்".
இசக்கி, மாடன், முண்டன் என மாறி மாறி பேச்சு நீள நேரம் நீண்டதே தெரியவில்லை. விடியும் நேரம் ஆனது போல,அடிவானில் வெள்ளிக்கோடாய் வெளிச்சம் மின்ன, மாடனும் முண்டனும் இசக்கியிடம் விடை பெற்று தங்கள் இடத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.
மாடன் ஆரம்பித்தார் "இவ யாருனு நினைக்க, இந்தா முன்னாடி ஓடுது பழையாறு, இதுல மிதந்து வந்தா, இங்க தோப்புல ஒதுங்கி. இங்க இருக்கணுவக்கு பூச்சி, பூரான், பாம்புல இருந்து துணையா இருந்தா? அப்புறம் நானும் கோட்டையடி மாடனும் சேந்து இவள இசக்கியா இங்கன அமத்தினோம், அதுலாம் பண்டு டேய்"
முண்டன் தலையை ஆட்டியாட்டி ஆமோதிப்பது போல கூடவே நடந்து வந்தார். நாலுமுக்கு சந்தி வந்ததும் மாடன் "இந்த கடுக்கரை காரிய கண்ணு வை, நல்லபடியா நடந்தா.அவளுக்கும் ஒரு நல்லத செஞ்சு மேக்கே அமைத்திருவோம். " என்றபடி தன் கோயிலுக்குள் நுழைந்தார்.
No comments:
Post a Comment