Wednesday 20 November 2019

வெறுப்பின் சம்பாத்தியம்



கடந்த முறை தெருக்குழாயில் நடந்ததுபோல் இன்றைக்கும் ஒரு பெகளம் இருக்கிறது என்பது பெரும்பான்மை தெருவாசிகளின் எண்ணம்.  அதிலும் ஆண்களுக்கு அதில் அலாதி ஆர்வம், பெண்களின் சண்டையை பார்ப்பதில் அப்படி என்ன போதை வஸ்தோ ஜன்னல் வழி எட்டி பார்ப்பது, கதவிடுக்கு வழியே காண்பது என பல கள்ளத்தனம்.  கடைத்தெரு கடைகளுக்கு தண்ணீர் எடுக்கும் சிரட்டை இசக்கி மாமாக்கு இதில் தவளை வேடம். ஏன் இரண்டு பக்கமும் மாமாவின் நியாயம் வேண்டும், பாவம் அவர் என்ன செய்வார், வீட்டில் அவரும் புருஷன் தானே?  இந்த பெண்களை எப்படி தான் வழிக்கு கொண்டு வர?  ஆமாம் ஏன் இவர்க்கு சிரட்டை எனும் முன்மொழி, அதுவா சிறுவயதில் கோயில் முன் உடைபடும் விடல் தேங்காயை  பொறுக்குவதில் வல்லவராம். குடும்ப பெயராய் தொடர்கிறது,  இவர் பையனின் பெயர் சிரட்டை மணி. 

கமலத்தின் வீட்டு வாசல் திறந்து கிடந்தது, அவளின் அம்மா வெளி திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளின் கண்,  எதிர் வீட்டு ருக்மணியை எதிர்நோக்கி காத்திருக்கிறது போல! விழி மூடாமல் பார்த்திருந்தாள். ருக்கு வீட்டு கதவு திறப்பது போல தெரிந்தது. கிழவி கொஞ்சம் உஷாரானாள், கதவை திறந்து இரண்டு குடத்துடன் ருக்கு குழாயடிக்கு நடந்தாள்.சொல்லி வைத்தார் போலும் கிழவியும் இரண்டு குடத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலே குழாயடிக்கு நடந்தாள்.

கமலம், வயது நாற்பதை நெருங்கிருக்கும். இங்கே உள்ளுக்குள் எழும் ஒரு கேள்வி. அவள் திருமணம் ஆனவளா?  ஒரு ஆண் பெண்ணை காணும் போதெல்லாம் அவளை பற்றி அறிந்து கொள்ள துடிக்கும் முதல் கேள்வி திருமணம் ஆனவளா? திருமணம் ஆகிவிட்ட பெண்ணிற்கோ ஆகாதவளை கண்டால் இளக்காரம். என்ன குணமோ! இதில் என்ன குற்றமோ!. கமலத்திற்கு இங்கே திருமணம் தேவையில்லை. அவளின் குடும்பம் இந்த ஊருக்கு குடிபெயர்ந்து இரண்டு தலைமுறை ஆயாச்சு. மேற்கே மலையாள எல்லையில் இருந்து வந்தவர்கள், பேச்சில் இன்னும் மலையாள நெடி உண்டு. அவளின் அம்மா இன்னும் முண்டு கொண்டுதான் மேலே மறைக்கிறாள்.

கமலத்திற்கு மற்றவரை போல தோளில் நிறமிகள் சரியாய் இல்லை, இதுவே பிரச்சனை. சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தது, பருவ வயதில் வெளியே நன்கு தெரிய ஆரம்பித்து விட்டது. தோழிகளின் கல்யாண வீடுகளுக்கு ஆரம்பத்தில் சென்றாள், இந்த ஒழுக்கசீர் சமூகம் தான் விடுமா? காது பட பல பேசி நெடுநாள் வீட்டிலே அடைந்து கிடந்தாள். கிழவி தான் பாவம் பெண்ணை எண்ணி பல நாள் வருத்தப்பட்டாள். என்ன நடந்ததோ, கமலம் மீண்டும் வெளியே நடமாட ஆரம்பித்தாள். அவளின் காது பட யாரவது அவளின் புறம் பற்றி பேசினால், அர்ச்சனை நெடுநேரம் நீடிக்கும். ஆண்களின் காது கூட கூசும்,  பின்னே இந்த அர்ச்சனை வார்த்தைகள் ஆணிற்குரியது எனும் எண்ணமே,  இவள் பேசும் போது பொறுக்க முடியவில்லை.

எறும்பு கூட்டம் முன்னே செல்லும் ஒற்றை எறும்பை தொடர்ந்தே செல்லுமாம்,  இங்கே அந்த ஒற்றை எறும்பு ருக்கு. ஊர் வடக்கே குறத்தியறை, இங்கே வாக்கப்பட்டு வந்தவள். கட்டியவன் அணஞ்சபெருமாள். டவுணில் ஆட்டோ ஓட்டுகிறான். மனைவியின் சொல்கேட்கும் மணாளன். ருக்குவுக்கு இத்தெருவில் குடியேறிய நாள் முதல் என்ன முன்பகையோ கமலம் மேல், முன்ஜென்ம கோபமோ, கிடைக்கும் இடங்களிலெல்லாம் அவளை பற்றி ஒன்றுக்கு இரண்டாய் புறணி பேசுகிறாள்.

கமலத்திற்கு வாழ்வதற்கு என்ன வழி? வீட்டில் மாவிரைக்கும் இயந்திரம் உண்டு. ஆட்டுக்கல்லை கொண்டு இன்னும் யார் அரைத்து கொண்டிருப்பார். தெருமக்களும் கடைத்தெரு உணவகங்களும் இட்லிக்கும், ஆப்பத்திற்கும் மாவு இங்கே அரைப்பதுண்டு. அளவுக்கேற்ற படி காசு வாங்கிக்கொள்வாள்.
அம்மைக்கு கிடைக்கும் முதியோர் உதவித்தொகையும், சேர்த்த பணத்தையும் வட்டிக்கும் விட்டு வந்தாள். 

அன்றைய நாள், சிரட்டை மாமா குழாயடியில் கடைகளுக்கு தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார். பொதுவாய் குழாயடியில் ஆட்கள் குறைவாய் இருந்தால் மாமாவுக்கு சந்தோசம் தாளாது. பின்னே விரைவாய் வேலையை முடித்து சாராயம் குடிக்க சென்று விடலாம், ஆனால் அவர் நேரம் ருக்கு இரண்டு குடத்தை கொண்டு குழாயருகே வைத்தாள். பின்னாலே கிழவியும் வந்தாள். 

"இசக்கி அண்ணே, காலைல இருந்து தண்ணி பிடிக்கியீலே, கொஞ்சம் வழி விடுவும்" என்றாள் ருக்கு.

"தாயி கொஞ்சம் பொறுக்கணும், இன்னும் மூணு குடத்தோட நா போயிருவேன்" இது சிரட்டை மாமா.

"சரி" என்று அமைதியானாள் ருக்கு. சிரட்டை மாமாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கிழவி ஏன் அமைதியாக நிற்கிறாள்.இந்நேரம் இவள் ஏச்சு கேட்டிருக்க வேண்டுமே! சரி வந்த வகை லாபம் என்று கையில் இருந்த குடங்களை நிறைத்து நடையை காட்டினார். ருக்கு குடத்தை குழாயடியில் வைத்தாள், எதிர்நின்ற கிழவியை ஏற இறங்க பாத்தவளுக்கு மனதிற்குள் சலசலப்பு. கிழவி வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருக்கிறாள் என்று முகத்திலே தெரிந்தது.

கிழவி ஆரம்பித்தாள் "எம்மா உன்கிட்ட பேசணும்". ருக்குவுக்கு ஏமாற்றமே, தோதுவான வார்த்தைகளை தேன் போல நாவில் தடவியவளுக்கு அம்மா என்று அழைத்தது அவளின் எண்ண ஓட்டத்தை கலைத்தது.

"நேத்து மேலாங்கோட்டுக்கு போனேன் சாமிட்ட குறி கேக்க. எங்க மேல பொம்பள சாபம் இருக்காம்,  இங்க சாபம் உடுற அளவுக்கு நீதான்மா இருக்க. அதான் என் மவளுக்கு இப்டி உடம்பு ல வாரி போட்ருக்குமாம்,  சாமி சொல்லிச்சு".

ருக்குவுக்கு மனதிற்குள் சிறிய குதூகலம், தன்னுடைய சாபத்தின் வீரியம் அவளை மகிழச்செய்தது. "எம்மா சாமி, உங்க மேல நா என்ன மண்ணாங்கட்டிக்கு சாபம் போடணும். ஊரே போடுதே.எதுக்கு எங்கிட்ட வந்து நிக்க".

"இல்லமா சாமி இன்னொன்னும் சொல்லிச்சு,    எம்மவ வாயால சபிச்சவ போட்ட சாபம்னு சொல்லிச்சு மா".

ருக்குவுக்கு இது அதிர்ச்சி இல்லை,  "உன் மவ ஒழுங்கு, ஊரேயே ஏசுகா. அவளுக்கு என்ன நோயோ,  எங்க கிட்ட மல்லுக்கு நிக்கா." என தொடரும் போதே, கிழவி இடைமறித்தாள். "போதுமா, இன்னும் சபிக்கண்டாம். நேத்து மத்தியானம் சாப்பிட்டதும் வாந்தி எடுத்தா கொஞ்சம் இரத்தமும் வந்துச்சு. இது மூணாவது நாலாவதோ வாட்டி. ஆசான் டா போனே. கொஞ்சம் நல்ல பாத்துகிட்டு நோயை இழுத்து வச்சிருக்கானு ஏசினாரு. மருந்த தினமும் திங்க சொன்னாரு. நா மனசு கேக்காமா மேலாங்கோடு போனது. அங்க சாமி இத சொல்லிச்சு. இப்போல்லாம் நாம பண்ற எல்லாத்துக்கும் இந்த ஜென்மத்துலே சாமி பாவகணக்கு எழுதிருமாம். நேத்துல இருந்து அவ வெளியவே வருல பாத்தியா."

ருக்குவுக்கு கலக்கம் உண்டானது, முதல் முறையாய் கமலம் மேல் பரிதாபம் உண்டானது கிழவியோடு கமலம் வீட்டுக்கு சென்றாள். தெரு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒருபக்கம், குழப்பம் ஒரு பக்கம். அரை மணிநேரம் வீட்டுக்குள் இருந்தவள், வெளியே வந்த போது கண் கலங்கி இருந்தது. தன் வீட்டுக்குள் நுழைந்தவள்,  வீட்டு பூஜை அறையில் மாட்டி இருந்த அவள் அப்பாவின் படத்தின் முன் கைகூப்பி நின்றிந்தாள்.

அவள் மனதிற்குள் அங்கும் இங்கும் எங்கும் நிற்காது எண்ணங்கள் சலசலத்தபடி ஓடி கொண்டிருந்தது. அவளின் ஆழ்மனத்திற்குள் ஒரே கேள்வி திரும்ப திரும்ப எதிர் ஒலித்தது. "நாம செஞ்சு பாவத்துக்கு, இந்த ஜென்மத்திலே பாவகணக்கு உண்டுன்னா. அதுனால தானோ என் வயித்துல எதுமே ஜனிக்கல".


No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...